Sunday, May 31, 2009

எரியும் நினைவுகள்- யாழ் நூலக எரிப்பின் 28 ம் ஆண்டு நினைவு நாள்-ஜூன் 1

புத்தரின் படுகொலை


நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.

இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?'
என்று சினந்தனர்.

'இல்லை ஐயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால்
ஆகையினால்......
என்றனர் அவர்கள்.

'சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை'
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.

சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்
*சிகாலோவாத சூத்திரத்தினைக்
கொழுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது
*தம்ம பதமும்தான் சாம்பரானது.

-கவிஞர் எம்.ஏ.நுஃமான்


ருபத்தி எட்டு வருடங்களுக்கு முன்னர் இதே சூன் முதலாம் திகதி காலைப் பொழுது, நன்றாகப் பேசிக்கொண்டிருந்த பாதிரியார் தவீது அடிகள் அவரைத்தேடி வந்த ஒரு சேதி கேட்டு மாரடைப்பால் மரணமடைகிறார்.அவருக்கு கிடைத்த அதே செய்தியை
யாழ்ப்பாணத்தில் கேள்விப்பட்ட ஒவ்வொருவரும் ஒப்பாரி வைத்தபடியே யாழ்ப்பாணத்தின் மையப் பகுதி நோக்கி ஓடுகிறார்கள்.ஒரு பெருங் கூட்டம் அந்த இடத்தில் கூடிவிட்டது.அந்த இடம் முழுவதும் அழுகையும் ஒப்பாரியும் நிறைந்திருந்தது. எரிந்து கொண்டிருக்கும் தணல் மேட்டில் இருந்து புகை கிளம்பிக்கொண்டிருந்தது.அத்தனை பேர்களின் கண்ணீராலும் அந்த தீயை அணைக்க முடியவில்லை.ஈழத்தமிழர்களின் தேசிய நூலகமான யாழ் நூலகத்தில் இருந்த 97,000 புத்தகங்களும் ஓலைச்சுவடிகளும் ,ஒலி ஒளி நாடக்களும் எரிந்து சம்பலாகிக் கொண்டிருந்தன.

யாழ்ப்பணத்தைப் பொறுத்தவரையில் முதல் நூலகம் 1842 இல் ஆரம்பிக்கப்பட்டதாக தகவல் உள்ளது. ஆனலும் அது பெரு வளர்ச்சி பெற்றதாக இல்லை. 1933 இலேயே இன்றைய நூலகத்திற்கான முதல் விதை போடப்பட்டது..சிறிய அளவில் யழ்ப்பாணத்தில் இயங்கிய நூலகத்திற்கான நிரந்தரக் கட்டடத்தின் தேவை உணரப்பட்டது. யாழ் நகரபிதா,வண. லோங் அடிகள்,இந்திய தூதுவராலய செயலர்,அமெரிக்கதூதுவர்,பிரித்தானியத் தூதுவர் ஆகியோரால் புதிய நூலகத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.

யாழ்ப்பாணம் கண்டிராத பெரும் களியாட்ட விழாக்கள்,பரிசு சீட்டு விற்பனை போன்ற பலவற்றின் மூலம் மக்களிடமிருந்து நூலகம் கட்டுவதற்கான பணம் சிறிது சிறிதாக திரட்டப் பட்டது.இந்திய கட்டடக் கலைஞர் நரசிம்மன் என்பவரின் வழிகாட்டுதலில்
யாழ் நூலகக் கட்டடம் உருப் பெறத் தொடங்கியது.பல பேரின் கூட்டுழைபினாலும் யாழ்ப்பாண மக்களின் பங்களிபினாலும் உருபெற்ற நூலகம் கம்பிரமாக தலை நிமிர்ந்து நின்றது

யாழ் நூலகம் ஆசியாவின் மிகப் பெரும் நூலகம்.தமிழர்களின் கல்வி வளத்தின் ஆதரமாகவும் தமிழரின் அடையாளமாகவும் உருபெற்று நின்றது.11.10.1959 இல் பொதுமக்கள் பாவனைக்காக யாழ் மேயர் அல்பிரட் துரையப்பவினால் நூலகம் திறந்துவைக்கப்பட்டது.அன்று தொடக்கம் யாழ்ப்பாணத்தவரின் வாழ்வியலோடு நூலகம் ஒன்றிக்க தொடங்கியது.யாழ்ப்பணத்தில் ஊருக்கு ஊர் இயங்கிய வாசிப்புமையங்கள்,சனசமூக நிலையங்கள் வாசிக சாலைகள் என்பவற்றின் மையப் புள்ளியாக யாழ் பொதுசன நூலகம் உருப்பெறலாயிற்று..

ஏறாத்தாழ 98 வீதம் எழுத்தறிவு உள்ளதான யாழ்ப்பாணச் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு இந்த வாசிகசாலைகளும் நூலகங்களும் உந்து சக்தியாக இருந்தன. யாழ்ப்பணத்தின் பெரும்பாலான வீடுகளில் பத்திரிகை வாங்கும் பழக்கம் இருந்தது.இளைஞர்கள்
கூடும் இடங்களாக வாசிப்பு நிலையங்களும் ,நூலகங்களும் மாறியிருந்தது.சிங்கள இனவாதிகள் தமிழருகெதிரான வன்முறையினைக் கட்டவிழ்த்த பொழுதுகளில் சிங்களவர் கண்களில் தமிழரின் அறிவு வளர்ச்சி உறுத்திக் கொண்டிருந்தது.

சிங்கள இனவெறியர்களுக்கு தமிழர் மீது இருந்த வெறுப்பு இனாவாதத் தீயாக எரிந்து கொண்டிருந்தது.அவர்கள் தருணம் பார்த்திருந்தனர்.1981 மாவட்ட சபைத் தேர்தலையொட்டிய நாட்க்கள் தமிழர் கல்வி ஆதரத்தை அழிப்பதற்கான நாளாக தீர்மானிக்கப்பட்டது .
1981 மே மாதத்தின் இறுதி நாட்கள் மாவட்ட சபைத் தேர்தல் பிரச்சரத்தில் இருந்த பொலிசார் மீது ஒரு சிறிய தாக்குதல் நடத்தப் பட்டது. தருணம் பார்த்துக் காத்திருந்த சிங்கள பொலிஸாரும், இராணுவத்தினரும்,கொழும்பில் இருந்து கொண்டுவரப் பட்ட
சிங்கள குண்டர்களும் யாழ்ப்பாணத்தை எரிக்கத் தொடங்கினர்.

யாழ்ப்ப்பணதில் உள்ள புத்தகக்கடைகளுக்கு தீவைக்கப்பட்டது,தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் யோகேசுவரனின் வீடு ,மகிழூர்ந்து என்பன தீக்கிரையாக்கப் பட்டன.1981 மே 31 நள்ளிரவை எட்டிக் கோண்டிருந்தது யாழ்ப்பாணத்தின் முதல்
தினசரிப் பத்திரிகையான ஈழநாடு பத்திரிகை அலுவலகத்திற்க்கும் தீ வைக்கப்பட்டது.அந்த அலுவலகம் எரிந்து கொண்டிருந்தது.எரிந்து கொண்டிருந்த பத்திரிகை அலுவலகத்தில் பணியில் இருந்தவ்ர்களில் பலரும் சிதறி ஓட இருவர் அலுவலகதினுள் சிக்குண்டனர்.

தீ யாழ்ப்பாண நகரமெங்க்கும் கொழுந்துவிட்டெரிந்த அந்த நள்ளிரவில் யாழ் நூலகத்தின் மேற்க்கு மூலையில் முதல் தீ வைக்கப் பட்டது. ஒவ்வொரு பகுதியாக பார்த்து பார்த்து நூலகம் முழுவது தீ வைக்கப் பட்டது. யாழ்ப்பாண நூலகத்தில் வைக்கப்பட்ட தீ கொழுந்து விட்டு எரிந்தது யாழ்ப்பாண நூலகத் தாய் துடிதுடித்து எரிவதைப் பார்த்த மக்கள்
துடித்தனர். வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற முடியாதவாறு பொலிசார் தடுத்தனர்.தகவல் அறிந்து வந்த யாழ் மாநகராட்சி ஆணையரை இடைவழியில் இரணுவத்தினர் தடுத்து வீட்டுக்கு திரும்புமாறு பணித்தனர்.

யாழ் நூலகத்திற்கு அருகிலேயே யாழ்ப்பாணம் காவல்துறை தலமை அலுவலகம் இருந்தது.அங்கிருந்தும் பெற்றொல் குண்டுகள் வீசப்பட்டதாக அருகில் வீடுகளில் இருந்தவர்கள் சொன்னாகள்.கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்டு நூலகத்திற்கு அருகில் உள்ள யாழ்ப்பாணம் முற்றவெளியில் தங்க வைக்கப் பட்டிருந்த நூற்றுக் காணக்கான சிங்களக் குண்டர்களே இதனைச் செய்தார்கள் என்று அடுத்தடுத்து நடந்த விசாரணைகளில்
தெரியவந்தது.

இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கையில் சிறிலங்கா அரசின் மூத்த அமைச்சர்களும் சனாதிபதி செயவர்த்தனாவின்நெருக்கத்திற்குரியவர்களுமான இரண்டு அமைச்சர்கள் நூலகத்திற்கு அருகில் உள்ள சுபாசு விருந்தினர் விடுதில் தங்கியிருந்தனர்.1983 தமிழர் படுகொலையை முன்னின்று செய்த சிறில் மத்தியூவும்.தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி கலவரங்களைத் தூண்டிய காமினி திசாநாயக்கவுமே அந்த இரு அமைச்சர்களும். இவர்களின் ஏற்பாட்டில்யே சிங்கள குண்டர்கள் யாழ்ப்பாணம் கொண்டுவரப் பட்டனர்.இவர்கள் இருவரும்தான் யாழ் நூலக எரிப்புக்கு காரணம் என்பதைப் பின்னாளில்
சனாதிபதியான பிரேமதாச ஒப்புக்கொண்டார்.

ஒரே நாளில் மொத்த யாழ்ப்பாணக் கல்வி வளத்தையும் எரித்துவிட நினைத்து சிங்கள அரசு வைத்த தீ தமிழரின் உரிமைத் தீப் பிளம்பாக மாறியது.அந்த தீ இன்று கொழுந்துவிட்டு இலங்கையெங்க்கும் எரிகிறது.ஈழத் தமிழரின் தேசிய அடையாளதின் மீது நிகழ்ந்த ஒரு படுகொலையாகவே காலம் முழுவதிலும் யாழ் நூலக எரிப்பு சொல்லப்படும்.
யாழ் நூலகம் பற்றிப் பேசுகிறபோதெல்லம் இப்போதும் பலர் அழுவார்கள்.

உலகில் எந்த வன்முறை பிரதேசத்திலும் நிகழ்ந்திராத ஒரு கொடுமையினை சிங்கள அரசு நிகழ்த்திக்காட்டியது.ஒரு அரசே தனது நாட்டின் மிகப் பெரும் நூலகத்தை எரிகிறதென்றால் அதன் வன்முறை உணர்வு எத்தனை உச்சமாக இருக்கும்.

1984 இல் எரிக்கப்பட்ட நூலகத்தின் ஒரு பகுதி எரிந்த நிலையிலேயே நினைவிடமாக இருக்க மீதிப் பகுதியில் நூலகம் மீளவும் ஆரம்பிக்கப்பட்டது.ஆனால் நூலகம் மீண்டும் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியது.அதன் பின்னர் சண்டைக் களமாக போராளிகளின்
பதுங்கு குழியாக பின்னர் இராணுவதினரின் உயர்பாதுகாப்பு பிரதேசமாக என்று நூலகம் போராட்டதில் பல்வேறு பத்திரங்களைப் பெறலாயிற்று.இந்த கட்டுரையை எழுதும் இந்த கணம் வரைக்கும் நூலகம் இராணுவதினரால் சுற்றிவளைக்கப்பட இராணுவ
அதி உயர் பாதுகாப்பு வலையதுக்குள்ளேயே இருக்கிறது.

இப்போது சர்வதேசகக் கவனத்தைப் பெற்றுவிட்ட நூலகத்தை மீண்டும் சிறிலங்கா அரசு கட்டியிருக்கிறது இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீளவும் நூலகத்தைக் கட்டுவதற்கு உதவின. பலரும் முன் வந்து புத்தகங்கள் வழங்கினர்.இந்திய அரசு முப்பதாயிரம் புத்தகங்களை வழங்கியது. இப்போது நூலகம் மீண்டும் புதுப் பொலிவுடன் காட்சி தருகிறது.
இருப்பினும் எரிந்து போன அந்த நூலகத்தின் சாம்பல் மேட்டின் நினைவில் இருந்து தமிழர்களால் மீள முடியவில்லை.

அரிய ஓலைச் சுவடிகளும், புத்தகங்களும் எரிக்கப்பட்ட அந்த கட்டடம் ஒரு படுகொலையின்
சமாதியாகவே இருகிறது இப்போது மீளவும் கட்டப் பட்டுள்ள அந்த நூலகம் வெள்ளையடிக்கப்பட்ட ஒரு படுகொலையின் சமாதியே.முன்னைப் போல இப்போது மக்கள் அந்த நூலகத்திற்கு போவதில்லை.பெருமபால பொழுதுகளில் சோகமேயுருவாக யாழ் நூலகம்
தனித்தே இருகிறது.அதனிடம் இப்போது நிறையப் படுகொலைகளின் கதைகள் உள்ளது.

( இது கடந்த முறை நான் எழுதிய கட்டுரையின் மீள் பிரசுரமே)
*********** **************** **********
குறிப்பு : எரியும் நினைவுகள் என்ற எமது ஆவணப் படத்தினைப் பலரும் பார்த்திருப்பீர்கள் உண்மையில் அதில் இன்னும் பல தகவல்களும் சேதிகளும் சேர்க்கப்பட வேண்டும் நானும் சிவகுமாரும் முன்னமே திட்டமிட்டபடி ஒரு வரலாற்று ஆவணத்தை தாயாரிக்கும் எங்களின் முயற்சி இன்னமும் முடியவில்லை. உங்களிடம் நூலகம் பற்றிய தகவல்கள் சேதிகள் இருப்பின் அறியத் தரவும்

3 comments:

பதி said...

//இது கடந்த முறை நான் எழுதிய கட்டுரையின் மீள் பிரசுரமே//

மீள் பதிவு செய்தே ஆகவேண்டிய தேவையுள்ள பதிவு. வாழ்வில் துக்கங்களும் துயரங்களும் மீள் பதிவு செய்வது நிற்கும் வரை இது போன்ற பதிவுகளும் மீள்பிரசுரிக்கப்படும்....

:(

சென்ற முறையே இப்பதிவினை ஓர்குட் மூலமும் மின்னஞ்சல் மூலமும் நண்பர்களிடம் பகிர்ந்திருந்தேன்...

தங்க முகுந்தன் said...

அன்புள்ள சோமி!

நான் தொடர்பு கொண்டது ஞாபகம் இருக்கும் என நம்புகிறேன். முடிந்தால் ஒரு துண்டிப்பு அழைப்புத் தாருங்கள்! நான் பின்பு உங்களுடன் பேசுகிறேன்.

நேசமித்ரன் said...

சக கைதியை வன்புணர்ந்து
தீர்க்கும் காமம் எரிய வேண்டும்
உங்கள் புலன்களில்

இகழ்ந்து பெற்ற களிப்பில்
திரள வேண்டும்
பச்சை உதிரம் ருசித்துப் பழகிய விலங்கின்
கூரிய பல் பழுப்பு நிறம்

தேர்ந்த மருத்துவனின்
பிரேதம் திறக்கும் கருவிகள்
பெரிதும் உதவுகின்றன
வதைத்துச் சுகிக்கும் ரகசிய விளையாட்டில்

கருவை கலைக்கும் வேளைகளில்
உங்கள் சீருடை கறைபடாமல் பார்த்துக் கொள்வதும்
ஒரு நீண்ட இறைஞ்சுதலுக்கு
பின் புகைத்தபடி காட்டும் கருணையில்
சடலத்தின் முகம் சிதையாதிருத்தலும் அவசியம்

இப்போது நீங்கள் தயார்

இனி முன்னறிவிக்கபட்ட
உங்கள் முகாம்களுக்குச் செல்லலாம்