Wednesday, September 16, 2020

1983 ஜூலை, இலங்கை இனப்படுகொலை சோமிதரனுடன் ஒரு சந்திப்பு - Kalachuvadu ,2008

 1983 ஜூலை, இலங்கை இனப்படுகொலை

சோமிதரனுடன் ஒரு சந்திப்பு “நினைவூட்டிக்கொள்ள முடியாத அளவுக்கு
அது ஒரு பயங்கரமான நிகழ்வு”
சந்திப்பு: தேவிபாரதி


நூலகம் எரிக்கப்பட்ட அதே 1981ஆம் ஆண்டில் மே மாதம் 11ஆம் தேதி யாழ் பகுதியைச் சேர்ந்த பருத்தித் துறையில் நான் பிறந்தேன். சரியாக 19 நாட்களுக்குப் பிறகு, 1981 ஜூன் மாதம் முதல் தேதி யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. அந்தக் கலவரத்தையோ அதற்குப் பின்னர் 1983 ஜூலையில் நடைபெற்ற பெரும் இனக்கலவரத்தையோ நேரில் அறிந்த தலைமுறையைச் சேர்ந்தவனல்ல நான். கால் நூற்றாண்டு காலமாக ஈழத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரைத் தொடங்கிய தலைமுறையைச் சேர்ந்தவனுமல்ல. குண்டுவெடிப்புகளினூடாகவும் இடப்பெயர்வுகளினூடாகவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தை நோக்கி ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்காணவர்களை உள்ளடக்கிய ஒரு தலைமுறையைச் சேர்ந்த நான் எங்கள் நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றை, அது எரிக்கப்பட்டுப் பல வருடங்கள் கடந்து சென்ற பின்னரே தெரிந்துகொண்டேன்.
என் பத்தாம்வயதில் எரிந்து நின்ற அந்தக் கட்டடத்தை முதன்முதலாகப் பார்த்தேன். அப்பொழுது, பத்தாண்டுகளுக்குப் பிறகு யாருமே அதை நினைவில் வைத்திருக்கவில்லை. நினைவூட்டிக்கொள்ள முடியாத அளவுக்கு அது ஒரு பயங்கரமான நிகழ்வு. அதனால்தான் அதைக் குறித்து பெரிய இலக்கியப் பதிவுகள் உருவாகவில்லை. சேரன் ஒரு கவிதை எழுதினார், எம். ஏ. நுஃமான் ஒரு கவிதை எழுதினார், வேறு சில நல்ல கவிதைகளும் உள்ளன. மற்ற பல கவிதைகளிலும்கூட எரிக்கப்பட்ட யாழ் நுணலகம் பற்றிய சில வரிகள் தென்படுகின்றன. ஆனால், ஒரு பெரிய நாவலோ குறிப்பிடும்படியான திரைப்படமோ ஒரு நாடகமோகூட எம்மிடையே உருவாகியிருக்கவில்லை.
அது தமிழர்களின் பண்பாட்டு மையம், அறிவுத் தேடலின் அடையாளம். பிறகு அது ஈழ விடுதலைப் போராளிகளுக்கான பாசறையாகவும் மாறியது. நூலகத்தை மையமாகக்கொண்டு அப்பொழுது யாழ்ப்பாணத்தில் ஏராளமான வாசக சாலைகள் இருந்தன. அவை எல்லோரும் ஒன்றுகூடுமிடங்களாகவும் விளங்கின. பல்வேறு போராளிக் குழுக்களும்கூட அவற்றில்தான் உருவாயின. பிற்காலங்களில் பல வாசக சாலைகள் போராளிகளுக்கான தங்கும் இடங்களாக மாறியிருந்தன.
எரிக்கப்பட்டுச் சாம்பல் படர்ந்து நின்ற யாழ் நூலகமேகூடப் புலிகளின் ராணுவத்தளமாகத்தான் எனக்கு அறிமுகமாயிற்று. அப்பொழுது யாழ்ப்பாணக் கோட்டை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஒரு நாள் யாழ் கோட்டையில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்காக அழைத்துச்செல்லப்பட்ட மாணவர் குழுவுடன் நானும் கோட்டைக்குள் நுழைந்துவிட்டேன். மற்றவர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த தருணத்தில் நானும் என் தோழன் ஒருவனும் எரிந்து நின்ற அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதிக்குச் சென்றோம். வியப்பூட்டும் விதத்தில் கம்பீரமாக நின்ற அந்தக் கட்டடம்தான் இயக்கத்தின் பேஸ் (படைத்தளம்) என்று சொன்னான் என் தோழன். நான் பார்த்த அந்தக் கட்டடத்தைப் பற்றி அன்றிரவு என் அம்மாவிடம் சொன்னேன். அம்மாதான் எனக்கு அது யாழ் நூலகம் எனச் சொன்னவர். நூலகம் பற்றிய முதலாவது தகவலை எனக்குச் சொன்னவர் என் அம்மாதான்.
பிறகு யாழ் கோட்டை சிங்கள ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பொழுது புலிகளோடு சேர்ந்து அங்கு வசித்துக்கொண்டிருந்த 5 லட்சம் மக்களும் வெளியேறினோம். ஆசியாவின் பெரிய இடப்பெயர்வுகளுள் ஒன்று அது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் வெளியேறிய பிறகு ஆள் நடமாட்ட மற்ற வெற்று நிலமாகத்தான் சிங்கள ராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது. பிறகு யாருமே வசித்திருக்காத ஒரு தருணத்தில் நூலகத்தைப் புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டது சந்திரிகா அரசு. அது ஒரு வகையான நல்லெண்ண நடவடிக்கை போலத் தோன்றினாலும், அதற்குப் பின்னால் இருந்த அரசியல் வேறுவகைப்பட்டது. இடம்பெயர்ந்து சென்றவர்களை யாழ்ப்பாணத்திற்குத் திரும்ப அழைப்பதற்கு அதைப் பயன்படுத்திக்கொண்டது சிங்கள அரசு. நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றை உலகின் நினைவுகளிலிருந்து முற்றாக அழிப்பதற்கு மேற்கொண்ட முயற்சி என்றும்கூட அதைச் சொல்லலாம். அது ஒரு நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டிருக்க வேண்டும்.
1981இல் நடைபெற்ற கொடிய நிகழ்வுகளுக்கான ஒரு வரலாற்றுச் சாட்சியமாக எரிக்கப்பட்ட அந்த நூலகம் அதன் சாம்பல்களோடு அப்படியே பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படிப் பாதுகாக்கப்பட்டிருந்தால் எம் நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு எனக்கும் என் தலைமுறைக்கும் இருபது ஆண்டுகள் தேவைப்பட்டிருக்காது. ஆனால், வரலாற்றின் பக்கங்களிலிருந்து தன் கொடுஞ்செயலை முற்றாகத் துடைத்தெறிய முற்பட்ட சிங்களப் பேரினவாத அரசு எதிர்ப்புகளே இல்லாத ஒரு தருணத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. இப்பொழுது இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு எங்களிடையே அதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. பதற்றத்துடன் இடம்பெயர்ந்து சென்ற யாழ்ப்பாண மக்கள் எந்த ஆதாரத்தையும் எடுத்துச் செல்லவில்லை.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பத்திரிகையாளனாக யாழ் நகருக்குத் திரும்பிவந்தபொழுதுதான் அந்த வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. தெரிந்துகொண்டபொழுது நான் கடும் அதிர்ச்சிக்குள்ளானேன். அநேகமாக அந்தத் தருணத்தில்தான் யாழ் வரலாற்றின் இந்தக் கொடிய பக்கங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்னும் எண்ணம் எனக்குத் தோன்றியிருக்க வேண்டும். காட்சி ஊடகத் துறை மாணவனாக, சென்னை லயோலாக் கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்கியபொழுது அந்த எண்ணம் வலுவடைந்தது. பிறகு நான் அதைப் பற்றிச் சிந்திக்கவும் திட்டமிடவும் தொடங்கினேன். இங்கு சென்னையில் அதற்கு ஊக்கமும் ஒத்துழைப்பும் கிடைத்தன. உயிர்நிழல் இதழ் எனக்குப் பெரிய அளவில் துணை நின்றது. பணம் முதலான அடிப்படை விஷயங்களைச் சேகரித்துக் கொண்டு தயாரானபொழுது மறுபடியும் ஈழத்தில் போர் மூண்டுவிட்டது. பிறகு எனக்கு வேறு வழியே இல்லாமல் போய்விட்டது. என்ன நடந்தாலும் சரி எனச் செயலில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. எதிர்காலத்தில் யாராலும் அந்த வரலாற்றை மீட்டெடுக்க முடியாமல் போய்விடலாம்.
இலங்கையில் அப்போது வெளிவந்துகொண்டிருந்த பத்திரிகைகள் இது குறித்து வெளியிட்டிருந்த செய்திக் கட்டுரைகளும் பிரசுரித்திருந்த புகைப்படங்களும்தான் இப்பொழுது எங்களுக்குக் கிடைக்க வாய்ப்புள்ள சில வகைப்பட்ட ஆவணங்கள். அவை கொழும்பு நூலகத்தில் இருந்தன. அங்கு ஆவணங்களைத் தேடும் முயற்சியை மேற்கொள்வது அபாயகரமானது. நூலகத்திற்கு வரும் தமிழ் வாசகர்கள் எதைப் படிக்கிறார்கள் என்பதுகூடக் கண்காணிப்புக்குட்பட்டதாயிருந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பான செய்திகளை அந்த நூலகத்திலிருந்துதான் நான் திரட்டினேன். அவற்றைத் திரட்டுவதற்கு நான் பெரிய அளவு சிரமப்பட வேண்டியிருந்தது. என் சிங்கள நண்பர்கள் பெருமளவில் உதவினார்கள். நூலகத்தின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்வதற்கான ஆட்களைக் கண்டறிவதிலும் எனக்குப் பல தடைகள் இருந்தன. பெரும் முயற்சிக்குப் பிறகு அதன் ஒரே ஒரு வாசகரைக் கண்டுபிடித்தேன். அப்போதைய நூலகர் இப்போதும் யாழ்ப்பாணத்திலேயே வசித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது யாழ் நகரின் மேயராக இருந்தவரே இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் மேயராக இருந்தார். யாழ் சூறையாடப்பட்டபொழுது எரிக்கப்பட்ட ஈழநாடு பத்திரிகையின் பணியாளர் ஒருவரையும் என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. தன் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டதை எரியும் அந்தக் கட்டடத்தினுள் பதுங்கி நின்று பார்த்துக்கொண்டிருந்த நேரடிச்சாட்சி அவர். ஆனால், முழு நகரமுமே ராணுவத்தின் கண்காணிப்புக்குட்பட்டிருக்கும் ஒரு தருணத்தில் இது போன்ற ஒரு ஆவணப்படத்தைத் தயாரிக்கும் முயற்சி கற்பனை செய்ய முடியாத அளவுக்குச் சவாலானது.
படம் பிடிப்பதற்கும் நேர்காணல்களை எடுப்பதற்கும் நாங்கள் பெரும் சிரமப்பட வேண்டியிருந்தது. நடந்தவற்றை நினைவுகூர்வதிலும் விமர்சனங்களை முன்வைப்பதிலும் எல்லோரிடத்திலும் தயக்கம் நிலவியது. நிச்சயமற்ற ஒரு சூழலில் அது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். நாங்கள் பல பொய்களைச் சொன்னோம். சென்னை லயோலா கல்லூரியின் காட்சி ஊடகத் துறை மாணவன் என்ற அடையாளம் எனக்குப் பெரிய அளவில் உதவியது. அப்படியும் ராணுவத்தினர் எங்களைக் கண்காணித்துக் கொண்டேதான் இருந்தனர். பெரும்பாலும் கையடக்கக் காமிராவைக்கொண்டே படம் பிடித்தேன்.
பிறகு எல்லாவற்றையும் ஹார்ட் டிஸ்க்குகளில் பதிவுசெய்து சென்னைக்கு எடுத்துவந்தேன். இங்கு எல்லாத் தரப்பினரும் மிகச் சிறப்பாக ஒத்துழைத்தனர். நாசர், லெனின் எனப் பலரைச் சொல்லலாம். இங்குள்ள பத்திரிகைகள் எங்களுக்குப் பக்கபலமாக இருந்தன. பல நிர்ப்பந்தங்களுக்கிடையே தமிழகம் எங்களுக்கு உறுதுணையாக நின்றது.
என்னுடைய இந்த ஆவணப்படத்தில் போதாமைகள் உள்ளன என்பதை நான் அறிவேன். கிடைக்கப்பெற்ற ஆதாரங்களைக் கொண்டு சிறப்பாகச் செய்ய முயன்றுள்ளேன். என் இந்தத் தலைமுறைக்கு இருபத்தைந்து வருடங்களுக்கு முந்தைய அந்தக் கொடூர நிகழ்வை நினைவூட்ட வேண்டும். சொந்த நாட்டிற்குள்ளும் அயல் நாடுகளிலும் அகதிகளாக வாழும் எம் மக்களுக்கு அவர்களது உன்னதமான பண்பாட்டு அடையாளத்தை, அது பிறகு எரிக்கப்பட்டதை நினைவூட்ட வேண்டும். யாழ் நூலகம் ஈழத் தமிழர்களின் பழங்கனவாகப் போய்விட்டது.
அதை நினைவுகூரும் திராணிகூட அகதிகளுக்கு இல்லை. கல்வி கற்பதற்கேகூட வாய்ப்பில்லாதவர்களாய் அகதி முகாம்களின் சுகாதாரமற்ற, பத்துக்குப் பத்தடி கொண்ட குறுகிய அறைகளில் வாழும்படி சபிக்கப்பட்டவர்கள் எம் மக்கள். பெரும் சுமையாய் மாறிவிட்ட வாழ்வை எந்தக் கனவுமின்றி வாழ்ந்து தீர்க்க வேண்டியவர்களாய் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் அவர்களுக்கு அவர்களுடைய எரிக்கப்பட்ட கடந்த காலத்தை நினைவூட்ட வேண்டும். சாம்பல் குவியல்களிலிருந்து எம் துயரங்களை மீட்டெடுத்தாக வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது இல்லையா?

 

Wednesday, August 26, 2020

“இலங்கையில் இரண்டு தலைவர்கள் இருந்தார்கள் ஒன்று பிரபாகரன் இன்னொன்று மகிந்த. இப்போது மகிந்த மட்டுமே இருக்கிறார்.”


-- 28.10.2018 இல் ஆநந்த விகடனுக்காக எழுதப் பட்ட க் கட்டுரை.

ஆட்சிக் கவிழ்ப்பு நடகங்கள் நிகழ்ந்த போது


 மகிந்த ராஜபக்சேவின் இந்த திடீர் ஆட்சிக் கைப்பற்றல் பற்றி சிங்கள நண்பர் ஒருவரிடம்கேட்ட போது சொன்னார் “இலங்கையில் இரண்டு தலைவர்கள் இருந்தார்கள் ஒன்று பிரபாகரன் இன்னொன்று மகிந்த. இப்போது மகிந்த மட்டுமே இருக்கிறார்.” என்றார். மகிந்த இன்னமும் பெரு பிம்பமாகவே இலங்கையில் இருக்கிறார்.

மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் இலங்கைத்தீவில் பலம் பொருந்திய மன்னரைக் காலி செய்துவிட்டு ஆட்சிக் கட்டிலில் ஏறுவது அடிக்கடிக்கடி நிகழ்வதுதான். அப்படி அயல் தேச ஆதரவுடன் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வீழ்த்தப்பட்ட மாமன்னர் மஹிந்த ராஜபக்சே இப்போது மீண்டும் முடிசூடிக் கொண்டிருக்கிறார் என்று சிங்களவர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கொண்டாட்டங்கள் பல இடங்களில் வன்முறையாகவும் மாறியிருக்கிறது. சிலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மகிந்த பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே இலங்கையின் அரச தொலைக்காட்சி, வானொலி நிலையங்களில் இருந்த அதிகாரிகள், ஊழியர்கள் மகிந்த ஆதாரவாளர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். சிலர் மீது தாக்குதலும் தொடுக்கப்பட்டது. உடனடியாகவே காவல்துறை மகிந்தவின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. ராணுவமும் மகிந்தவின் உத்தரவுக்கு கட்டுபடும் நிலையில்தான் இருக்கிறது.

பெரும்பான்மைப் பலம் மிக்க அரசு ஒன்றின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க இருக்கும் போது புதிய பிரதமராக மகிந்த பதவியேற்றுக் கொண்டார். அதன் பின்னரே ரணீல் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக இலங்கை அதிபர் அறிவித்தார். ரகசியமாக நடந்த பதவியேற்பு முடிந்த பின்னரே நாட்டு மக்களுக்கும், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இந்தச் சேதி தெரிந்தது. மகிந்த அதிபராக இருந்த போது வெறும் அமைச்சராக இருந்த தற்போதைய அதிபர் மைத்திரி முன்பாக மகிந்த பதவியேற்ற நிலையில், இவ்வளவு நாளும் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான இடைக்காலப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதைக் காலம் தாழ்த்தி வந்த நல்லிணக்க அரசு முடிவுக்கு வந்தது. இலங்கையைப் பொறுத்த வரையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் சர்வ அதிகாரம் படைத்தவர். புதிதாக ஏற்படுத்தப்பட்ட 19வது திருத்தச் சட்டம் முன்னைய அதிபர்களின்

அதிகாரங்களைவிட குறைவான அதிகாரங்களையே இப்போது உள்ள அதிபருக்கு வழங்கியிருக்கிறது. அதன்படி பிரதமரைப் பதவி விலக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை என்று கூறிய ரணில் விக்கிரமசிங்க ”நானே இன்னமும் பிரதமர்” என அறிவித்தார். ஆனால் சட்டபடியே செயல்பட்டதாக அதிபர் விளக்கம் கொடுத்திருக்கிறார். நீதிமன்றத்தைஅணுகினாலும் இலங்கை உச்ச நீதிமன்றமும் அதிபருக்கு எதிராக தீர்ப்பு வழங்க வாய்ப்புக் குறைவு நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமென ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனும் கூறுகிறார்கள். 

ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 105 உறுப்பினர்களும் மகிந்த மற்றும் அதிபர் மைத்திரி அணியினருக்கு 96 உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 16 உறுப்பினர்களுக் ஜேவிப்பிக்கு 6 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். ஜேவிபி யாருக்கும் ஆதரவு இல்லையென அறிவித்து விட்டது.ஆகவே உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டினால் வெற்றிபெற்றுவிடலாம் என்று ரணில் கணக்குப் போடுகிறார். 

நல்லிணக்க அரசு அமைத்து இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் பேசுவதால் அவர்கள் ஆதரவும் கிடைக்கும் என்பது ரணிலின் நம்பிக்கை. ஆனால் அதிபர் மைத்திரியோ நாடளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுவதற்க்குத் தடை போட்டுவிட்டார். தமிழகத்தின் அண்மைய உதாரணமான கூவத்தூர் பார்முலாவுக்கு இதன் மூலம் அதிபர் வழிவகுத்துக் கொடுத்துவிட்டார். இனிப் பேரம் படிந்ததும் நாடாளுமன்றம் கூடும்.

மகிந்த பிரதமராக பதிவியேற்ற இரவிலேயே ரணீல் கட்சியில் இருந்து இருவர் தாவி விட்டார்கள். இந்தியாவில் இருப்பது போல் கடுமையான கட்சித் தாவல்ச் சட்டங்களும் இலங்கையில் இல்லை. ஆகவே அடுத்துவரும் நாட்களில் மகிந்தவுக்கு ஆதரவு பெருக வாய்ப்பிருக்கிறது. 

இதற்கிடையில் பிரதமராக பதவியேற்ற பின்னர் அறிக்கை வெளியிட்டமகிந்த விரைவில் தேர்தலுக்குப் போகப் போவதாகக் கூறியிருக்கிறார்.இப்போது உள்ள நிலையில் தேர்தலுக்குப் போவது மகிந்தவுக்கு சாதகமாகவே இருக்கிறது. பேரத்திற்க்குப் படிந்து மகிந்தவுக்கு ஆதரவு அளிக்காவிட்டால் அதிபர் மைத்திரி ஆட்சியைக் கலைத்துவிடும்அபாயமும் இருக்கிறது. இந்த நிலையில் பல எம்பிகள் உடனடியாக தேர்தலைவிரும்பவில்லை. ஆகவே பதவியும் பெரும் தொகையும் கிடைத்தால் தாவுவதற்க்குத் தயாராகவே இருக்கிறார்கள். தமிழ் எம்பிக்களைப் பொறுத்தவரையில் மலையகத்தில் தொண்டமான் தலைமையிலான தொழிலாளர் காங்கிரசும், யாழ்ப்பாண எம்பியான டக்ளஸ் தேவானந்தாவும் ஏற்கனவே மகிந்தவுடன் இருக்கிறார்கள். அண்மையில் சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பில் மகிந்த இந்தியா வந்த போதும் டக்ளஸ் தேவானந்தாவும் டெல்லி வந்திருந்தார். முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த எம்பிகள் இப்போது ரணில் பக்கம் இருந்தாலும் அவர்கள் இறுதி நேரத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளோர் பக்கமே சாய்வார்கள்.


இந்த நிலையில் தமிழ் கட்சிகளில் அதிக இடங்களை வைத்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கப் போகும் நிலைப்பாடு இன்றைய அரசியல் நெருக்கடியில் முக்கியமானது. ரணில் தலைமையிலான அரசுடன்தமிழர்கள் உரிமைகள் தொடர்பாகவும் அரசியல் கைதிகள் விடுதலை, போரில் காணாமல் போனவர்கள் தொடர்பான உண்மை நிலை குறித்தும் பல முறை பேச்சுகளை நடத்தியிருந்தாலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

 இப்போது உள்ள நிலையில் மகிந்த மற்றும் ரணிலோடு பேசி தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கப் போவதாகவும் அதன் பின்னரே முடிவெடுக்கப் போவதாகவும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன்கூறியிருக்கிறார். ஆனால் இலங்கையின் வரலாற்றில் இதற்க்கு முன்னரும் இப்படி அரசுகளைஆதரித்து பின்னர் தீர்வு எதனையும் தராமல் கழுத்தறுத்த முன்னுதாரணங்களும் உண்டு. 

அதேநேரம் இன்னமும் முற்றாக நீங்கிவிடாத சர்வதேச அழுத்தமும் இன்றைய அரசியல்நெருக்கடிநிலையும் தமிழ்த் தரப்புக்குச் சாதகமாக காய்களை நகர்த்தக் கூடிய சூழலைஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்த் தரப்புக்கு பேரம் பேசும் சக்தி நீண்டகாலத்தின் பின்கிடைத்திருக்கிறது.தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மகிந்தவின் கொடுரமான பழைய காலத்தைமறக்கவில்லை. மீண்டும் அப்படியொரு கொடும் காலம் வந்துவிடக் கூடாது என்ற அச்சஉணர்வு இருக்கிறது. அதற்க்கு வலுச் சேர்ப்பது போல மகிந்த பதவியேற்ற அரை மணிநேரத்தில் மகிந்தவைச் சந்தித்த இலங்கை காவல் துறைத் தலைவர், போர்குற்றங்களின் சூத்திரதாரி என்று பலரும் குற்றஞ்சாட்டும் மகிந்தவின் தம்பி கோத்தபாயவைப் பார்த்து சல்யூட் வைக்கிறார். 

என்னாதான் மகிந்த ஆட்சி மாறி ரணில் ஆட்சி நடைபெற்றிருந்தாலும் இதுவரை வடக்கில் இருந்து ராணூவம் வெளியேறவில்லை. ராணுவ புலனாய்வுக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படவில்லை. ஆகவே பழைய அச்சம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் மகிந்த இம்முறை முன்பு போல இல்லாமல் தமிழர்களுடன் பேசுவார் என்றே தெரிகிறது.

இப்படிப் பதவியில் இருந்து விலக்கப் படுவது ரணிலுக்கு இது இரண்டாவது முறைஏற்கனவே 2004 இல் புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த ரணில்விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்தார் அன்றைய அதிபர் சந்திரிக்கா. அதன்பின்னர் வந்த தேர்தலிலேயே மகிந்த முதல் தடவையாக பிரதமரானார்.பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே காலப் பகுதியில் உக்கிரமான போர் நடந்து

கொண்டிருந்தது. உலக நாடுகள் அனைத்தையும் தன் பக்கம் வைத்துக் கொண்டு போரைநடத்தினார் மகிந்த. தமிழகத்தில் இருந்து வந்த எதிர்ப்பை கருத்தில் எடுக்க முடியாதபடிராஜபக்சேவை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தமான வெளியுறவுக் கொள்கையை வைத்திருந்ததுஇந்தியா. சீனாவோடு இலங்கை நெருக்கமாகிவிடும் ஆகவேதான் இலங்கைக்கு உதவுகிறோம்என்று விளக்கம் கொடுத்தார்கள் இந்திய இராஜதந்திரிகள். ஆனால் போர் முடிந்ததும்இந்தியாவை முற்றாகப் புறம் தள்ளி சீனாவோடு நெருக்கமானர் ராஜபக்சே.

இந்த நிலையில் மகிந்த ராஜபக்சே கட்சி உடைக்கப்பட்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டு எதிர்அணியினர் ஒன்றிணைக்கப்பட்டு அதிபராக மைத்திரிபால தேர்தலைச் சந்தித்தார். அதனைசாத்தியபடுத்தியதில் இந்தியாவுக்குப் பங்கிருந்ததாகச் சொல்லப்பட்டது. மைத்திரிஇந்தியாவுக்கு நெருக்கமானவராகவும் ரணில் அமெரிக்காவுக்கு நெருக்கமனவராகவும்சொல்லப்பட்டனர்.இந்த நிலையில் இப்போது மகிந்த பிரதமராகப் பதவியேற்றதும் அது குறித்து உடனடியாக

இந்தியா கருத்து எதுவும் சொல்லாத நிலையில் சீனாவின் தூதுவர் வெளிப்படையாகமகிந்தவை சந்தித்து பேசினார். இது அவதானமாகப் பார்க்கப்பட வேண்டியது. இந்தநெருக்கடிக்கு ஒருவாரம் முன்பு இந்தியா வந்திருந்த ரணில் விக்கிரமசிங்கே இந்தியப்பிரதமரைச் சந்தித்தார். அப்போது இந்தியா இலங்கையில் முன்னொடுக்கும் வேலைகளுக்குப்

போதிய ஒத்துழைப்பு இல்லையென பிரதமர் மோடி குறைப்பட்டதாக ரணீல் ஊடகங்களிடம் சொன்னார். போருக்குப் பிறகான மீள்கட்டுமானம் என்ற பெயரால் நடைபெறும் பணிகளை இந்தியாவும் சீனாவும் பங்கு போட்டு செய்து வருகின்றன.

இவ்வாறான சூழலில் இன்றைய இலங்கையின் அரசியல் நெருக்கடி வெறும் உள்நாட்டுச் சிக்கலா இல்லை இலங்கையின் மீதான ஆதிக்கம் யாருக்கு அதிகம் என்ற பேட்டியுடன் சேர்ந்தே பார்க்கப்பட வேண்டியதா என்கிற கேள்வி முக்கியமானது. அது இந்தியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான ஒன்றாகவும் இருக்கிறது.

இலங்கை அதிபர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது இலங்கை மிகப் பெரும் பொருளாதர நெருக்கடியில் இருக்கிறது. பிரதமர் ரணில் பொருளதாரத்தை சீர் செய்யவில்லை, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை ஆகவேதான் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்தேன் என்கிறார். ஆகவே சீனாவோடு நெருக்கமான மகிந்த வருவதன் மூலம் மீண்டும் சீனவில் இருந்து பெரும் மூதலீடுகள் இலங்கையை நோக்கி வரும் என்று நம்புகிறார்கள்.

இந்தச் சூழலில் அடுத்துவரும் நாட்களில் பல நூறு கோடிகள் புரளும் எம்பிக்களுக்கான ஏலம் சூடு பிடிக்கும். அதே நேரம் ராஜபக்சே என்பது ராஜபக்சே என்ற ஒருவர் அல்ல அது ஒரு பெரும் குடும்பம்.

Monday, August 17, 2020

” தமிழ் தேசிய கூட்டமைப்பும் அப்புகாத்துகளின் அரசியலும் “

 

2004 ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளியாகியிருந்தது. கொழும்பின் மேட்டுக்குடிகள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள குயின் வீதி அமைந்திருக்கும் குமார் பொன்னம்பலத்தின் இல்லம். தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வருகிறார்கள். நாங்கள் பத்திரிகையாளர்கள், உயர்ந்த மதில்களும் பெரிய இரும்புக் கதவுகளும் கொண்ட அந்த வீட்டிற்கு வெளியே நிற்கிறோம். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்த ஜீஜீபொன்னம்பலம் காலத்தில் இருந்து  அரசியல் பரபரப்பு மிகுந்த அந்த வீட்டில் குமார்பொன்னம்பலத்தின் மகன் கஜேந்திரகுமார் அப்போது  எம்பியாகியிருந்தார். தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அவசரக் கூட்டம்  கூட்டப்பட்டிருந்தது. அப்போது சமாதானப் பேச்சுவார்த்தக்காலம். ஆனாலும், அசாதாரண நிலையில் அந்த கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. அது புலிகளின் கிழக்குத் தளபதி கருணா அம்மான் புலிகளிடமிருந்து பிரிந்திருந்த நேரம் என்று சொன்னால் அந்த சூழலைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது.

இந்த தேர்தலில்தான் இலங்கை நாடளுமன்றத்தில் தமிழ் அரசியல் குழுவொன்று அதிக கூடிய இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு 22 ஆசனங்களைப் பெற்றிருந்தது. இதற்க்கு முன்னர் 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களைப் பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழக் கோரிக்கையை முன்னிறுத்திய அந்த தேர்தலில் கிடைத்த வெற்றிக்குப் பிறகு, 2004 இல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த வெற்றி பெரு வெற்றியாக இருந்தது. கிட்டத்தட்ட இந்த தேர்தலின் மூலம் புலிகளிற்க்கான மக்கள் ஆதரவைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியின் ஊடாக உலகிற்க்குப் பறைசாற்றும் எண்ணம் மறைமுகமாக இருந்தது. வேட்பாளர் தெரிவுகளை தன்னிச்சையாக கூட்டமைப்பு மேற்கொள்ளவில்லை. புலிகளின் ஏக பிரதிநிதித்துவ நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள மறுத்த ஆனந்த சங்கரி வெளியேற்றப்பட்டு சம்பந்தன் தலைமைப் பொறுப்புக்குக் கொண்டுவரப்படுகிறார். 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி மூலம் தேர்தலில் வெற்றிபெற்ற சம்பந்தன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவான பின்னரே திருகோணமலையில் மீண்டும் வெற்றி பெற்றார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தையும் சங்கரி தூக்கிக் கொண்டு போய்விட்டதால், அவசர அவசரமாக தமிழரசுக் கட்சியைத் தேடி எடுத்து அதன் வீட்டுச் சின்னத்தில் கூட்டமைப்பு தேர்தலைச் சந்தித்தது. மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் முக்கிய புள்ளியாக முன்னிறுத்தப்பட்டார். 70களில் இளஜராக தமிழரின் உரிமைப் போராட்டத்தில் இணைந்த மாவை,  தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் புலிகளால் கொல்லப்பட்ட பின்னர் வெற்றிடமான தேசியப்பட்டியல் எம்பிப் பதவி மூலம் பாராளுமன்றத்திற்க்குள் முதல் தடவையாகப் பிரவேசித்தவர். 

2004 தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மொத்தமுள்ள ஐந்து ஆசனங்களில் நான்கைத் தமிழ்தேசிய கூட்டமைப்பு வென்றிருந்தது. இப்போது அந்த வீட்டிற்குள் இருந்த எம்பிகளும் வெளியே இருந்த பத்திரிகையாளர்களும் மட்டக்களப்பு எம்பிகளுக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார்கள். நானும் பத்திரிகையாளர்களோடு பத்திரிகையாளராக அப்போது உட்காந்திருந்தேன். மட்டக்களப்பு எம்பிக்கள் கருணா பேச்சைக் கேட்கப் போகிறார்களா புலிகள் பேச்சைக் கேட்கப் போகிறார்களா?  என்பதுதான் அன்றைய நாளின் பரபரப்பாக இருந்தது. உண்மையில் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் கிடைத்த ஆசனங்கள்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட ஆரம்பகால நோக்கத்திற்க்குக்  கிடைத்த வெற்றி. ஆனால் அது ஒரு இக்கட்டான காலகட்டத்தில் நடந்துவிட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவான கதையை பலரும் எழுதிவிட்டார்கள். விருப்பு ,வெறுப்புகள், உள்ளும், புறமுமாக ஒவ்வொருவருக்கும் தெரிந்த தகவல்களை வைத்து இந்தக் கதைகள் எழுதப்பட்டன. 90களின் இறுதியில் சந்திரிக்கா அரசு மீதான நம்பிக்கையீனங்கள் பரவாலக இருந்தது. இது தமிழ் கட்சிகள் இணைய வேண்டிய  தேவையை அரசுடன் நேரடியாக இணைந்திருக்காத தமிழ் அமைப்புகளுக்கு உருவாக்கியது. 90களின் ஆரம்பத்தில் புலிகளை விமர்சித்து எழுதிய சிவராம் போன்றவர்கள் பின்னாளில் புலிகளை ஆதரிக்கும் நிலைக்கு வந்ததை இந்த பின்னணியில் இருந்துதான் நாம் பார்க்க வேண்டும். இப்படித்தான் 80 களில் புலிகளோடு முரண்பட்டு நின்றவர்கள் படிப்படியாக புலிகளோடு இணக்கமாக  செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். புலிகளும் தங்களுடைய பழைய முரண்பாடுகள் மற்றும் கடுமையான முகத்தை மாற்றி இணக்கமான தொடர்புகளை ஏற்படுத்துவற்கான கதவுகளைத்  திறந்திருந்தார்கள். இந்த காலப்பகுதில் சரிநிகர் பத்திரிகையின் ஒரு தாலையங்கம்  முக்கியமானது “ புலிகளின் வெற்றி தமிழ் மக்களின் வெற்றியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் புலிகளின் தோல்வி தமிழ் மக்களின் தோல்வி” என்பதே அது. இந்த யதார்த்தம் புரிந்த நிலையிலேதான், தங்கள் அமைப்புக்களின் தலைவர்களைக் கொன்றவர்கள் என்று கருதப்படும் விடுதலைப் புலிகளோடு இணைந்து அரசியல் செய்வதற்க்கு ஈபிஆர் எல் எப் மற்றும் டெலோ ஆகியவை முன்வந்ததையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில் ,தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்திற்கான உடனடித் தேவைப்பாடு முதலில் கிழக்கிலேயே உணரப்பட்டது.  திருகோணமலையில் தமிழர்கள் தங்கள் பிரதிநிதித்துவத்தை இழந்தனர். மட்டக்களப்பில் அதற்க்கு முன்னர் மூன்று தமிழர்கள் தேர்வான நிலைமாறி  இருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இதற்க்குக் காரணம் தமிழ்க்கட்சிகள் பிரிந்து நின்று போட்டியிட்டு வாக்குகளைச் சிதறடித்ததே.  இந்த பின்னணியில் கிழக்கில் தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்கிற கருத்து உருவாகிறது. கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் துணையோடு  அதன் போசகர்களில் ஒருவரான சிவராம் இதற்கான காய் நகர்தல்களைச் செய்கின்றார்.  புலிகளின் ஒப்புதல்  கிடைத்துவிடவே தேசிய அளவில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைப்பதற்க்கான  வேலைத் திட்டத்தில் பலரும் இணைகின்றனர். அதுவரை இராணுவப் பாதுகாப்புடன் இயங்கியவர்களுக்கு புலிகளிடமிருந்து உயிருக்கான உத்தராவதம் கிடைத்தது.  இந்த ஒன்றிணைவுக்குப் பிறகும்  இலங்கை `இராணுவத்துடன்  சேர்ந்து செயற்ப்பட்ட சிலரை, டெலோ தலைவர் செல்வம் அடைகலநாதன் தமது அமைப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்படவில்லையென்றாலும் புலிகள் ஆதரவைப் பெற்ற அமைப்பாக அது உருவாகியது.

விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது சிறீலங்கா நாடாளுமன்றத்திற்க்கு தமிழர் சார்பில் அனுப்பட்ட பிரதிநிதிகள் என்பதற்கப்பால் பெரிய முக்கியத்துவம் எதுவும் அப்போது இல்லை. அதுதான் உண்மையும் கூட. அரசுடனான பேச்சுவார்த்தை, அரசியல் முடிவுகள், தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செயற்பாடுகள் என அனைத்தும் புலிகளின் நெறிப்படுத்தலில்தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவ்வப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் நடைபெறும் கூட்டங்களில் புலிகளால் தகவல்கள் பரிமாறப்படும் அவ்வளவே. 

புலிகள்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்பது குறித்து  தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் எப்போதும் இருவேறு கருத்துக்கள் இருந்து வந்தன. இதில் சம்பந்தனும் ஆனந்தசங்கரியும் பெரும்பாலும் ஒரே கருத்துடையவர்களே. சந்திரிக்கா ஆட்சியில், தமிழர் விடுதலைக் கூட்டணி எம்பியான நீலன் திருச்செல்வம் பங்குபற்றுதலோடு ஒரு தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டது. அந்த தீர்வுப் பொதிதான் இதுவரையான இலங்கை அரசின் தீர்வுத் திட்டங்களில் சிறப்பானது எனலாம்.  ஆனால் அது விடுதலைப் புலிகளைப் புறம் தள்ளி  உருவாவதாகக் கூட்டணிக்குள் விமர்சனம் உருவாகியது. ஜோசப் பரராஜசிங்கம் தலைமையிலான மட்டக்களப்புக் கிளை அந்தத் தீர்வுப் பொதி புலிகளுடன் பேசாமல் முன்மொழியபடுவதை ஆதரிக்கப் போவதில்லை என முடிவு செய்திருந்தது அப்போது தமிழர்விடுதலைக் கூட்டணிக்குள் விவாதமானது.

தமிழர் விடுதலைக் கூட்டணி, ஆயுதம் தாங்கிய தமிழ் குழுக்களான ஈபி ஆர் எல் எப் ,டெலோ ஆகிய கட்சிகள் இணைவது இது முதல் முறையல்ல அதாவது அறவழிப் போராட்ட அமைப்பு என்ற பெயரைக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி இந்த ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களோடு முகாம்களில் இருந்த1989 இல் நடைபெற்ற தேர்தலில் கூட்டுச் சேர்ந்திருந்தது.  விடுதலைப் புலிகள் விரும்பியிராத அந்த தேர்தலில் தமிழர்விடுதலைக் கூட்டணி ,ஈபிஆர் எல் எப், டெலோ ஆகியவற்றோடு ஈஎன் டி எல் எப் ஆயுத இயக்கமும்  இணைந்து அந்த தேர்தலில் போட்டியிட்டது. சுரேஸ் பிரேமச்சந்திரன் முதன் முதலில் அந்த தேர்தலில் வெற்றி பெற்றுத்தான் எம்பியானார். சுரேஸ் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டார். எதிர்கட்சித் தலைவராகவெல்லாம் இருந்த தமிழர்விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் மட்டக்களப்பில் போட்டியிட்டு தோல்வியடைகிறார்.  இந்தியாவின் விருப்பமான இந்த க் கூட்டணியை அறிந்த புலிகள் இவர்களைத் தோற்கடிப்பதற்காக, ஈரோஸ் இயக்கத்தை இந்த கூட்டணியை எதிர்த்துப் போட்டியிடுமாறு கூறுகிறார்கள். இந்திய இராணுவம், ஈபிஆர் எல் எப் நடத்தும் மாகாண சபை ஆட்சி என இருந்த சுழலில் கடும் சிரமத்தில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த ஈரோஸ் அதிக இடங்களில் வெற்றி பெறுகிறது. வெற்றி பெற்ற ஈரோஸ் உறுப்பினர்கள் புலிகளின் உத்தரவுக்கு அமைய, எம்பிகளாகப் பதவியேற்காமல் ராஜினாமாச் செய்கிறார்கள். இந்த தேர்தலில் ஈ பி ஆர் எல் எப் சார்பில் மட்டக்களப்பில் வெற்றி பெற்ற சாம் தம்பிமுத்து கொலை செய்யப்பட அந்த இடத்திற்க்கு பத்திரிகையாளரான ஜோசப் பரராஜசிங்கம் தெரிவானார்.  இதே தேர்தலில்தான் புளட் இயக்கத்தின் அரசியல்பிரிவின் செயலாளரான தாராகி சிவாரம், அந்த இயக்கத்தின் சார்பில் தலைமை வேட்பாளராக களமிறங்கி தோல்வியைத் தழுவுகிறார்.

1972 இல் தமிழர் ஐக்கிய கூட்டணி திருகோணமலையில் உதயமாகியது. செளமியமூர்த்தி தொண்டைமான்,ஜீஜீபொன்னம்பலம்,செல்வநாயகம் ஆகிய முப்பெரும் தலைவர்களை இணைத்து உருவான தமிழர் ஐக்கிய கூட்டணி பின்னர் தமிழர்விடுதலைக் கூட்டணி என்றாகியது. தமிழர்கள் பலமிக்க அமைப்பாக இலங்கை அரசுடன் பேசுவதற்காகவே இந்த கூட்டணி உதயமானது. தமிழர்களின் வராலற்றுப் புகழ்மிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானம் இந்தக் கூட்டணியின் பெரும் பிரகடனமாகிறது. 2009 இல் போர் முடிந்த பிறகு இப்படி ஒரு ஒற்றுமைக் கூட்டணியை அமைப்பது தொடர்பான பேச்சுகள் தொடங்கப்பட்டன. சுவிற்சலாந்தில் நடைபெற்ற கூட்டம் பலருக்கும் மறந்து போயிருக்கலாம். தமிழ்தேசியத் தரப்புக்கு எதிர்நிலையில் இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவைக் கூட இணைத்து ஒரே தமிழத் தரப்பாக அரசுடன் பேச வேண்டும் என்கிற கருத்துருவாக்கம் நடந்தது. ஆனால் யதார்த்தம் அதற்க்கு நேர் எதிர் திசையில் இருக்கிறது.

2009 இல் முடிந்துவிட்ட ஆயுதப் போராட்டக் காலத்தின் பின், தோற்றம் பெற்றிருக்கக் கூடிய புதிய காலம் அரசியல் செய்ய வேண்டிய காலம் . சாணக்கியமும் ராஜதந்திரமும் அரசியல் அறிவும் அரசமைப்புச் சட்டம் பற்றிய தெளிவும் கொண்ட புத்திஜீவித்தனமான அரசியலை முன்னெடுப்பதற்க்கு இப்போது களத்தில் உள்ளவர்களில் வல்லவர் சுமந்திரனே. சுருங்கச் சொன்னால் சாணக்கியமிக்க அரசியல்வாதியாக தமிழ்ச் சூழலில் அவர் இருக்கிறார். கலைஞர் கருணாநிதியின் அரசியல் சாணக்கியம் பற்றிச் சொல்லும் போது சொல்லுவார்கள், ஒருவரைக் கட்சியைவிட்டு ஓரங்கட்சி வெளியேற்று வேண்டும் என கலைஞர் நினத்துவிட்டால், குறித்த நபரே வெறுப்பாகி கட்சியைவிட்டு வெளியேறிச் சென்று விடும் சூழலை உருவாக்கிவிடுவார். குறித்த நபருக்கு வெளியேறுவதைத் தவிர வேறு தேர்வுகள் இருக்காது. இதை சுமந்திரன் சிறப்பாக செய்துள்ளார். என்பதில் இருந்தே அவர் அரசியல் செய்ய தெரிந்த அரசியல்வாதியாக தமிழர்கள் மத்தியில் இருக்கிறார் என்பதை விளங்கிக் கொள்ளலாம். தனக்கான ஆதாரவு வளையத்தையும் அவர் வெகுசிறப்பாக வடிவமைத்துக் கொண்டார். இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் அப்புக்காத்து அரசியல்வாதிகளின் தொடர்ச்சியாக அவர் ஊருவாகிவிட்டார். இராமநாதன், பொன்னம்பலம் ,செல்வநாயகம், திருச்செல்வம் என்று தொடரும் தமிழ் மேட்டுகுடி கொழும்பு மைய அப்புக்காத்து அரசியலின் தொடர்ச்சிதான் சுமந்திரன். 

இன்று சுமந்திரன் எப்படி ஐக்கியதேசியக் கட்சியோடு நல்லண்ணத்தின் ஊடாகத் தீர்வைப் பெற்றுக் கொள்ள விளைந்தாரோ அப்படித்தான்டட்லி சேனநாயக்க அரசில் திருச்செல்வம் தமிழரசுக் கட்சியின் சார்பில் அமைச்சருமாகினார். அரசியலமைப்பை மாற்றும் பொறுப்பும் அவருக்கு வழங்கப் பட்டது. அவரும் தன் சட்டத்தரணி மூளையை வைத்து அந்த அரசுக்கு உதவினார். கடைசியில் ஒன்றும் நடக்காமல் தமிழரசுக் கட்சி அந்த அரசில் இருந்து வெளியேறியது ”போன மச்சன் திரும்பி வந்தார்..... .. “ என்ற சொலவடைக் கணக்காக மீண்டும் முதல்ல இருந்து தொடங்கிற அரசியல்.

ஒன்றும் மட்டும் தெளிவு ஆயுதப் போராட்டத்தைக் கருத்தில் எடுக்காமல் அது முடிந்த இடத்தில் இருந்து தொடங்காமல் பழைய மொத்தையில் புதிய கள்ளாக பழைய தமிழரசுக் கட்சியைத் தூக்கி முன்னிறுத்தி புதிய சட்டவாளர் சுமந்திரன் அரசியல் செய்தால் அது எப்படியிருக்கும் என்பதற்க்குக் கடந்த பத்தாண்டுகள் நல்ல உதாரணம். போர் முடிவுக்கு வந்த இறுதி நாட்களிலும் அதற்க்குப் பின்னரும் மஹிந்தவின் மாளிகையிலும் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்திலும் பின்னர் புது டில்லி சந்திப்புக்களிலும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் பணிப்புரைகள், திட்டங்கள் எல்லாவற்றிற்குமான சாட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பே. ஆனால், அந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்போது இல்லை.

Wednesday, March 16, 2016

சாதி ஆணவம்- வில்லன்கள் வாழும் தேசம்

சன நடமாட்டம் உள்ள அந்த வீதியில் ஒரு இளம் தம்பதியினர் நடந்து வருகிறார்கள். அங்காங்கே சிலர் கூடிப் பேசிக் கொள்கிறார்கள். சில நொடிகளில் அந்த இளம் தம்பதியினர் கொடூரமாக தாக்கப்படுகிறார்கள். ஒரு கொலை நடந்து முடிந்தது. சிசிடிவிக் கமராக்களால் பதிவு செய்து விடமுடியாத பல கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழகத்தில் பதிவுசெய்ய முடிந்த ஒரு கொலைக் காட்சி இது. கொலையுண்டு போன அந்த இளைஞனும் வெட்டுக் காயங்களுடன் தப்பித்த அந்த இளம் பெண்ணும் சற்றுநேரத்திற்க்கு முன்னர் என்ன பேசிக் கொண்டிருந்திருப்பார்கள். பெரும்பாலும் தமது எதிர்கால வாழ்வு பற்றிய கனவுகளின் உரையாடலாக அது அமைந்திருக்கக் கூடும்.
  அவளின் 22 வயது இளம் கணவனுக்கு சில நாட்களில் நடக்கும் கல்லூரிப்  பிரியாவிடை நிகழ்ச்சிக்கு புதுச்சட்டை வாங்க வேண்டுமென அழைத்து வருகிறாள் 19 வயதான அந்த இளம் மனைவி. இளம் கணவன் பொறியாளர் படிப்பு முடிந்து  கம்பஸ் இன்ரவியூவில் தேர்வாகி விட்டான். சென்னையில் வேலை. காதல் மனைவிக்கும் காதல் கணவனுக்கும் இதை விட என்ன மகிழ்விருக்கிறது. ஏன் இவர்கள் இத்தனை சின்ன வயதில் திருமணம் முடித்தார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். இந்த சிறு வயதுத் திருமணத்திற்க்கும் இந்த கொடூரக் கொலைக்கும் ஒரே காரணம்தான். அது சாதித் திமிர். காதலை எதிர்க்கும் ஆணவம்.
சில வருடங்களின் முன்னர் தருமபுரியில் இளவரசன் , சில மாதங்கள் முன்பு கோகுல்ராஜ் இப்போது சங்கர். இவர்கள் மூவரின் மரணங்களுக்கும் காரணமான சாதிகள் வேறு வேறானவை. இந்தச் சாதியில் இவ்வளவு கொடூரம் இல்லை அந்த சாதின்னா உடன தூக்கிடுவானுங்க, அவனுங்கன்னா வெட்டிருவானுங்க இவனுங்கன்னா கொழுதிடுவானுங்க என்பது போன்ற உரையாடல்களை தமிழகத்தில் எல்லாரும் கடந்து கொண்டுதானிருகிறோம். வெளித்தெரிந்த இந்த கொலைகள் மூலம் எந்தச் சாதியும் சாது இல்லை என்பது உறுதி. எந்தச் சாதிக்கும் தனிதுவமென்று எதுவுமில்லை. சாதி ஆணவம் என்பதுதான் பொது அடையாளம். இந்த சாதி ஆணவம் கொலைகளின் மூலம் வெளித்தெரிகிறது. பல இடங்களில் அந்த ஆணவம் அமைதியாக இருப்பதற்க்கு காரணம் சாதி ஆணவம் இல்லை என்பதல்ல. கொலை செய்வதற்கான துணிச்சல் இல்லை என்பதும் மேம்போக்காக  பேசப்படும் போலி சமத்துவமும்தான்.
இன்று சமூக வலைத்தளங்களில் சாதிமறுப்புக் காதலுக்கு எதிராக பல கருத்துக்கள் வெளிப்படுகின்றன. சிலர் ஒரு படி மேலே சென்று சாதி மானம் காக்க வந்த சிங்கங்கள் என்று கொலைகாரர்களைக் கொண்டாடுகிறார்கள். இதுதான் சாதி வக்கிரத்தின் வெளிப்பாடு. சமூக வலைத்தளங்களில் வெளிப்படும் இந்த வக்கிரம்தான் சமூகத்தில் இன்னமும் புரையொடிப்போயிருக்கும் சாதிய செருக்கை பறைசாற்றுவன. இன்று சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் எல்லாச் சாதிகளுக்கும் குழுப் பக்கங்கள் இருக்கிறது. ஊரில் இருந்த சாதிச் சங்கங்கள் இணையத்தில் இருக்கிறது. ஊருக்கும் வெளியே இருப்பவர்களின் சாதி வேர் இன்னமும் கெட்டியாக இருக்கிறது. ஊர்ப் பாசம் என்பதும் பற்று என்பதும் சாதி சார்ந்ததுதான். சாதிதான் தமிழர்களின் பண்பாடு என்றாக இருக்கிறது.
இந்த சாதியப் பண்பாட்டின் உதாரணமாக புலம்பெயர் தமிழர்கள் இருக்கிறார்கள். உலகம் முழுவதும் புலம்பெயர்ந்த ஈழத்து தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த வீட்டையும் மண்ணையும் அதன் வாழ்வையும் விட்டுச் சென்றார்களேயொழிய சாதியை விட்டுச் செல்லவில்லை. விமான நிலையங்களின் கழிவறைகளில் பாஸ்போட்டைக் கிழித்துப் போடத் தெரிந்தவர்களால் சாதியைத் தூக்கியெறிய முடியவில்லை.போருக்குள் இருந்த போது அதை நினைப்பதற்கான அவகாசம் இருக்கவில்லை மற்றொன்று சாதித் திமிருக்கெதிரான புலிகளின் கடுமையான சட்டங்கள். இவற்றை வைத்து சாதி பாகுபாடு இல்லாமல் போய்விட்டதாகவே நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் அது போரில் இருந்து வெளியேறியவர்களிடம் மிகக் கவனமாக பாதுக்காத்து வைக்கப்பட்டுள்ளதுஅய்ரோப்பாவில் 30 வருடங்களுக்கு முன்னார் குடியேறிய ஈழத்தின் அடக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்  ஆதிக்க சாதிப் பெண்ணை 40 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்திருந்தார். இன்று வரை அவர் புறக்கணிக்கப்பட்டு வருவதன் வலியைச் சொன்ன போது என்னிடம் பதிலெதுவும் இல்லை.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் அவரவர் சத்துக்கு ஏற்ப அவரவர் கொரூரம் இருக்கிறது. இணயத்தில் இந்த கொலைக்கான ஆதரவும் அப்படிப் பட்டதுதான். ஒரு வகையில் தமிழகத்திலும் சமூக வலைத் தளங்களிலும் நிலவும் போலி சமத்துவ முகத் திரையை கிழித்து போடுபவையாக இந்த பேஸ்புக் ஸ்டேட்டஸ்கள் இருக்கின்றன. ஈழத்திலும் அப்படியான போலி சமத்துவமே போராட்டத்தின் காரணமாக உருவாகியுள்ளது. கலப்பு திருமணத்தை ஆதரிக்காத போதும், கொலை வன்மத்தில் நிறைவுறும் சாதியத்திமிராக ஈழத்தில் அது இல்லையென்பது போராட்டத்தின் பயனான சிறு ஆறுதல். ஆனால் கொலையென்பது சதியத் திமிரின் வெளிப்படையான ஒரு வடிவம் மட்டுமே. தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் சிலர் சொல்வதைப் போல சாதி கொஞ்சம் இருக்கத்தான் செய்யும் அதுக்காக கொலை செய்வதெல்லாம் கொடூரம் என்பதை எவ்வாறு விளங்கிக் கொள்வது. சாதியை எல்லாத் தளங்களிலும் வளர்த்துவிட்டு கொலை செய்வது தவறென்பது எவ்வளவு மோசமானது.
ஒரு முறை நான் தென் தமிழகத்தில் ஒரு ஊருக்குச் சென்ற போது ஈழம் குறித்த உரையாடால் ஒன்று நடந்தது. அது முடிந்து தனியாக பேசும் போது உணர்வாளர் ஒருவர்  “பிரபாகரன் நம்மவாள் தானே என்று கேட்டார் “. நான் முழிப்பதைப் பார்த்ததும் இல்ல அவர் பிள்ளை தானே என்றார். ஆம் அவர் எங்கள் தேசத்தின் பிள்ளை என்றுதான் சொல்லாம் என நினைத்தேன் அதற்குள் பக்கத்தில் இருந்தவர். இல்லைத் தோழர் பிள்ளைமார் சாதி என்று நினைத்து அவருக்காக போஸ்டர் எல்லாம் போட்டார்கள் அதுதான் என்றார்இல்லைங்க பிரபாகரன் மீனவர் சமூகம் என்றேன். அவர் சொன்னார் ஆரம்பத்தில் பல ஈழ இயக்கங்கள் இருந்தபோது வேலுப்பிள்ளை பிரபாகரனில் இருந்த பிள்ளை காரணமாக பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த பலர் விடுதலைப்புலிகளை ஆதரித்தார்களாம்.
பறையர் பையன் பள்ளர் பொண்ணைக் காதலிப்பதையும் அருந்ததியரைப் பறையர் காதலிப்பதையும் இவர்கள் அனைவரையும் ஆதிக்கம் செய்யும் மற்ற சாதியினரை தலித்துக்கள் காதலிப்பதையும் இந்த சமுக ஒழுங்கு ஏற்றுக் கொள்ள மறுப்பது என்பது ஒரு சமூகப் பண்பாடாகவே இருக்கிறது. அது தூய தமிழ்த் தேசியத்திற்க்கு ஒப்பானதா என்ற அச்சமும் எனக்கு இருக்கிறது. இங்கு சாதிச் சங்கங்கள் சாதிகளை இனம் என்று குறிப்பிடுவதும், தூய்மைவாதம் குறித்த எனது இந்த அச்சத்திற்க்கு காரணமாக இருக்கலாம். எங்கள் ஊரில்இரு மரபும் தூய வந்த யாழ்ப்பாணத்து சைவ உயர் வெள்ளாளர்என்கிறதில் வருகிற இரு மரபு என்பது அம்மா பக்கமும் அப்பா பக்கமும் எந்த சாதிக் கலப்பும் இல்லாமல் தூய்மையாக இருத்தல் என்பதாகப் பொருள் படுமென ஒரு முறை எழுத்தளார் எஸ்பொ சொன்னார்.
சாதி கடந்து காதல் செய்வதை, காதலின் உச்சத்தை காலம் காலமாக கதை கதையாகச் சொல்லும் சினிமாத்துறையில் இருந்து இந்த ஆணவக் கொலைகளை எதிர்த்து ஒரு வாட்ஸ் அப் அறிக்கைகூட வரவில்லை. இப்போது இந்த தேர்தலுக்கு இரு பெரும் கட்சிகளுக்கு அதரவு தெரித்து தினமும் சந்திக்கும் சாதி சங்கங்களின் எண்ணிக்கையைப் பார்க்கையில் அச்சம் வருகிறது. இந்த சாதிச் சங்களின் சமூகப் பணி என்னவாக இருக்கும் என்ற சிந்தனையே அந்த அச்சத்திற்க்கு காரணம். தமிழக முக்கிய கட்சிகளின் திரைகிழிந்த முகம்தான் ராமதாஸ். பத்திரிக்கையாளர் முன்பாக நாகரிகத்திற்க்குக் கூட கருத்து சொல்வது அவசியமென அவர் நினைக்கவில்லை. ராமதஸ்தான் நாடகக் காதல் என்ற சொல்லை அறிமுகம் செய்தவர்அண்மையில் நான் பார்த்த முசாபர் நகர் ஆவணப்படத்தில் இந்து வெறியர்கள் லவ் ஜிகாத் பற்றிப் பேசுவார்கள். லவ் ஜிகாத் என்பது முஸ்லிம் ஆண்கள் இந்து பொண்களை ஏமாற்றி காதலித்து திருமணம் செய்வது. பாஜக வின் தேர்தல் வெற்றிக்காக லவ் ஜிகாத் உத்தரப்பிரதேசத்தில் எவ்வாறு பயன்பட்டது என அந்த படத்தில் பதிவு செய்யப் படுகிறது. தமிழகத்தில் லவ் ஜிகாத்துக்கு ஒப்பான வகையில் நாடகக் காதல் என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.

இந்த கொலைகளை அனைத்து ஆதிக்க சாதிகளும் ரசிக்கின்றன. அவர்களின் வீடுகளில் அவர்கள் பிள்ளைகளை அச்சப்டுத்துவதற்க்கும் தலித் பெற்றோர் பிள்ளைகளைப் பயந்து பயந்து வளர்க்கவும் இது காரணமாகிறது. காதலித்தவனுடன் அந்த பெண் நல்லா வாழ்ந்திடக் கூடாதே என்ற பதட்டம்தான்  அவசர அவசரமாக நடந்து முடிந்த இந்த கொலை. சென்னையில் வேலை கிடைத்து சங்கரும் கெளசல்யாவும் சென்று விட்டால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும். இது சாதி ஆணவத்திற்க்கான சவால் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். வர்க்க விடுதலை சாதியத்திற்கான அச்சுறத்தல் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இதை எழுதி முடிக்கும் இந்த தருணத்தில் நண்பன் ஒருவன் பேசினான். ஈரோட்டில் ஆதிக்க சாதிப் பெண்ணை சில நாட்களுக்கு முன்னர் தலித் அல்லாத இன்னுமொரு அடக்கபட்ட சாதிப் பையன் திருமணம் செய்திருக்கிறான்இந்த கொலையைப் பார்த்த பிறகு அந்த பையன் விட்டில் மொத்த குடும்பமும் மரண பீதியிலிருக்கிறார்கள் என்றான் அந்த நண்பன் பதட்டமாக. இந்த பதட்டம்தான் கொலை செய்தவர்களின் வெற்றி. வெளியான அந்த சிசிடிவிக் காட்சியின் வெற்றி. கொலைக் கெதிரான கோபத்தை விடவும் பயத்தையே இது அதிகம் ஏற்படுத்தியிருக்கிறது என்பது இந்த தேசத்தின், சமூகத்தின் மிகப் பெரும் அவமானம்