Sunday, May 31, 2009

எரியும் நினைவுகள்- யாழ் நூலக எரிப்பின் 28 ம் ஆண்டு நினைவு நாள்-ஜூன் 1

புத்தரின் படுகொலை


நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.

இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?'
என்று சினந்தனர்.

'இல்லை ஐயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால்
ஆகையினால்......
என்றனர் அவர்கள்.

'சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை'
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.

சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்
*சிகாலோவாத சூத்திரத்தினைக்
கொழுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது
*தம்ம பதமும்தான் சாம்பரானது.

-கவிஞர் எம்.ஏ.நுஃமான்


ருபத்தி எட்டு வருடங்களுக்கு முன்னர் இதே சூன் முதலாம் திகதி காலைப் பொழுது, நன்றாகப் பேசிக்கொண்டிருந்த பாதிரியார் தவீது அடிகள் அவரைத்தேடி வந்த ஒரு சேதி கேட்டு மாரடைப்பால் மரணமடைகிறார்.அவருக்கு கிடைத்த அதே செய்தியை
யாழ்ப்பாணத்தில் கேள்விப்பட்ட ஒவ்வொருவரும் ஒப்பாரி வைத்தபடியே யாழ்ப்பாணத்தின் மையப் பகுதி நோக்கி ஓடுகிறார்கள்.ஒரு பெருங் கூட்டம் அந்த இடத்தில் கூடிவிட்டது.அந்த இடம் முழுவதும் அழுகையும் ஒப்பாரியும் நிறைந்திருந்தது. எரிந்து கொண்டிருக்கும் தணல் மேட்டில் இருந்து புகை கிளம்பிக்கொண்டிருந்தது.அத்தனை பேர்களின் கண்ணீராலும் அந்த தீயை அணைக்க முடியவில்லை.ஈழத்தமிழர்களின் தேசிய நூலகமான யாழ் நூலகத்தில் இருந்த 97,000 புத்தகங்களும் ஓலைச்சுவடிகளும் ,ஒலி ஒளி நாடக்களும் எரிந்து சம்பலாகிக் கொண்டிருந்தன.

யாழ்ப்பணத்தைப் பொறுத்தவரையில் முதல் நூலகம் 1842 இல் ஆரம்பிக்கப்பட்டதாக தகவல் உள்ளது. ஆனலும் அது பெரு வளர்ச்சி பெற்றதாக இல்லை. 1933 இலேயே இன்றைய நூலகத்திற்கான முதல் விதை போடப்பட்டது..சிறிய அளவில் யழ்ப்பாணத்தில் இயங்கிய நூலகத்திற்கான நிரந்தரக் கட்டடத்தின் தேவை உணரப்பட்டது. யாழ் நகரபிதா,வண. லோங் அடிகள்,இந்திய தூதுவராலய செயலர்,அமெரிக்கதூதுவர்,பிரித்தானியத் தூதுவர் ஆகியோரால் புதிய நூலகத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.

யாழ்ப்பாணம் கண்டிராத பெரும் களியாட்ட விழாக்கள்,பரிசு சீட்டு விற்பனை போன்ற பலவற்றின் மூலம் மக்களிடமிருந்து நூலகம் கட்டுவதற்கான பணம் சிறிது சிறிதாக திரட்டப் பட்டது.இந்திய கட்டடக் கலைஞர் நரசிம்மன் என்பவரின் வழிகாட்டுதலில்
யாழ் நூலகக் கட்டடம் உருப் பெறத் தொடங்கியது.பல பேரின் கூட்டுழைபினாலும் யாழ்ப்பாண மக்களின் பங்களிபினாலும் உருபெற்ற நூலகம் கம்பிரமாக தலை நிமிர்ந்து நின்றது

யாழ் நூலகம் ஆசியாவின் மிகப் பெரும் நூலகம்.தமிழர்களின் கல்வி வளத்தின் ஆதரமாகவும் தமிழரின் அடையாளமாகவும் உருபெற்று நின்றது.11.10.1959 இல் பொதுமக்கள் பாவனைக்காக யாழ் மேயர் அல்பிரட் துரையப்பவினால் நூலகம் திறந்துவைக்கப்பட்டது.அன்று தொடக்கம் யாழ்ப்பாணத்தவரின் வாழ்வியலோடு நூலகம் ஒன்றிக்க தொடங்கியது.யாழ்ப்பணத்தில் ஊருக்கு ஊர் இயங்கிய வாசிப்புமையங்கள்,சனசமூக நிலையங்கள் வாசிக சாலைகள் என்பவற்றின் மையப் புள்ளியாக யாழ் பொதுசன நூலகம் உருப்பெறலாயிற்று..

ஏறாத்தாழ 98 வீதம் எழுத்தறிவு உள்ளதான யாழ்ப்பாணச் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு இந்த வாசிகசாலைகளும் நூலகங்களும் உந்து சக்தியாக இருந்தன. யாழ்ப்பணத்தின் பெரும்பாலான வீடுகளில் பத்திரிகை வாங்கும் பழக்கம் இருந்தது.இளைஞர்கள்
கூடும் இடங்களாக வாசிப்பு நிலையங்களும் ,நூலகங்களும் மாறியிருந்தது.சிங்கள இனவாதிகள் தமிழருகெதிரான வன்முறையினைக் கட்டவிழ்த்த பொழுதுகளில் சிங்களவர் கண்களில் தமிழரின் அறிவு வளர்ச்சி உறுத்திக் கொண்டிருந்தது.

சிங்கள இனவெறியர்களுக்கு தமிழர் மீது இருந்த வெறுப்பு இனாவாதத் தீயாக எரிந்து கொண்டிருந்தது.அவர்கள் தருணம் பார்த்திருந்தனர்.1981 மாவட்ட சபைத் தேர்தலையொட்டிய நாட்க்கள் தமிழர் கல்வி ஆதரத்தை அழிப்பதற்கான நாளாக தீர்மானிக்கப்பட்டது .
1981 மே மாதத்தின் இறுதி நாட்கள் மாவட்ட சபைத் தேர்தல் பிரச்சரத்தில் இருந்த பொலிசார் மீது ஒரு சிறிய தாக்குதல் நடத்தப் பட்டது. தருணம் பார்த்துக் காத்திருந்த சிங்கள பொலிஸாரும், இராணுவத்தினரும்,கொழும்பில் இருந்து கொண்டுவரப் பட்ட
சிங்கள குண்டர்களும் யாழ்ப்பாணத்தை எரிக்கத் தொடங்கினர்.

யாழ்ப்ப்பணதில் உள்ள புத்தகக்கடைகளுக்கு தீவைக்கப்பட்டது,தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் யோகேசுவரனின் வீடு ,மகிழூர்ந்து என்பன தீக்கிரையாக்கப் பட்டன.1981 மே 31 நள்ளிரவை எட்டிக் கோண்டிருந்தது யாழ்ப்பாணத்தின் முதல்
தினசரிப் பத்திரிகையான ஈழநாடு பத்திரிகை அலுவலகத்திற்க்கும் தீ வைக்கப்பட்டது.அந்த அலுவலகம் எரிந்து கொண்டிருந்தது.எரிந்து கொண்டிருந்த பத்திரிகை அலுவலகத்தில் பணியில் இருந்தவ்ர்களில் பலரும் சிதறி ஓட இருவர் அலுவலகதினுள் சிக்குண்டனர்.

தீ யாழ்ப்பாண நகரமெங்க்கும் கொழுந்துவிட்டெரிந்த அந்த நள்ளிரவில் யாழ் நூலகத்தின் மேற்க்கு மூலையில் முதல் தீ வைக்கப் பட்டது. ஒவ்வொரு பகுதியாக பார்த்து பார்த்து நூலகம் முழுவது தீ வைக்கப் பட்டது. யாழ்ப்பாண நூலகத்தில் வைக்கப்பட்ட தீ கொழுந்து விட்டு எரிந்தது யாழ்ப்பாண நூலகத் தாய் துடிதுடித்து எரிவதைப் பார்த்த மக்கள்
துடித்தனர். வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற முடியாதவாறு பொலிசார் தடுத்தனர்.தகவல் அறிந்து வந்த யாழ் மாநகராட்சி ஆணையரை இடைவழியில் இரணுவத்தினர் தடுத்து வீட்டுக்கு திரும்புமாறு பணித்தனர்.

யாழ் நூலகத்திற்கு அருகிலேயே யாழ்ப்பாணம் காவல்துறை தலமை அலுவலகம் இருந்தது.அங்கிருந்தும் பெற்றொல் குண்டுகள் வீசப்பட்டதாக அருகில் வீடுகளில் இருந்தவர்கள் சொன்னாகள்.கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்டு நூலகத்திற்கு அருகில் உள்ள யாழ்ப்பாணம் முற்றவெளியில் தங்க வைக்கப் பட்டிருந்த நூற்றுக் காணக்கான சிங்களக் குண்டர்களே இதனைச் செய்தார்கள் என்று அடுத்தடுத்து நடந்த விசாரணைகளில்
தெரியவந்தது.

இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கையில் சிறிலங்கா அரசின் மூத்த அமைச்சர்களும் சனாதிபதி செயவர்த்தனாவின்நெருக்கத்திற்குரியவர்களுமான இரண்டு அமைச்சர்கள் நூலகத்திற்கு அருகில் உள்ள சுபாசு விருந்தினர் விடுதில் தங்கியிருந்தனர்.1983 தமிழர் படுகொலையை முன்னின்று செய்த சிறில் மத்தியூவும்.தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி கலவரங்களைத் தூண்டிய காமினி திசாநாயக்கவுமே அந்த இரு அமைச்சர்களும். இவர்களின் ஏற்பாட்டில்யே சிங்கள குண்டர்கள் யாழ்ப்பாணம் கொண்டுவரப் பட்டனர்.இவர்கள் இருவரும்தான் யாழ் நூலக எரிப்புக்கு காரணம் என்பதைப் பின்னாளில்
சனாதிபதியான பிரேமதாச ஒப்புக்கொண்டார்.

ஒரே நாளில் மொத்த யாழ்ப்பாணக் கல்வி வளத்தையும் எரித்துவிட நினைத்து சிங்கள அரசு வைத்த தீ தமிழரின் உரிமைத் தீப் பிளம்பாக மாறியது.அந்த தீ இன்று கொழுந்துவிட்டு இலங்கையெங்க்கும் எரிகிறது.ஈழத் தமிழரின் தேசிய அடையாளதின் மீது நிகழ்ந்த ஒரு படுகொலையாகவே காலம் முழுவதிலும் யாழ் நூலக எரிப்பு சொல்லப்படும்.
யாழ் நூலகம் பற்றிப் பேசுகிறபோதெல்லம் இப்போதும் பலர் அழுவார்கள்.

உலகில் எந்த வன்முறை பிரதேசத்திலும் நிகழ்ந்திராத ஒரு கொடுமையினை சிங்கள அரசு நிகழ்த்திக்காட்டியது.ஒரு அரசே தனது நாட்டின் மிகப் பெரும் நூலகத்தை எரிகிறதென்றால் அதன் வன்முறை உணர்வு எத்தனை உச்சமாக இருக்கும்.

1984 இல் எரிக்கப்பட்ட நூலகத்தின் ஒரு பகுதி எரிந்த நிலையிலேயே நினைவிடமாக இருக்க மீதிப் பகுதியில் நூலகம் மீளவும் ஆரம்பிக்கப்பட்டது.ஆனால் நூலகம் மீண்டும் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியது.அதன் பின்னர் சண்டைக் களமாக போராளிகளின்
பதுங்கு குழியாக பின்னர் இராணுவதினரின் உயர்பாதுகாப்பு பிரதேசமாக என்று நூலகம் போராட்டதில் பல்வேறு பத்திரங்களைப் பெறலாயிற்று.இந்த கட்டுரையை எழுதும் இந்த கணம் வரைக்கும் நூலகம் இராணுவதினரால் சுற்றிவளைக்கப்பட இராணுவ
அதி உயர் பாதுகாப்பு வலையதுக்குள்ளேயே இருக்கிறது.

இப்போது சர்வதேசகக் கவனத்தைப் பெற்றுவிட்ட நூலகத்தை மீண்டும் சிறிலங்கா அரசு கட்டியிருக்கிறது இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீளவும் நூலகத்தைக் கட்டுவதற்கு உதவின. பலரும் முன் வந்து புத்தகங்கள் வழங்கினர்.இந்திய அரசு முப்பதாயிரம் புத்தகங்களை வழங்கியது. இப்போது நூலகம் மீண்டும் புதுப் பொலிவுடன் காட்சி தருகிறது.
இருப்பினும் எரிந்து போன அந்த நூலகத்தின் சாம்பல் மேட்டின் நினைவில் இருந்து தமிழர்களால் மீள முடியவில்லை.

அரிய ஓலைச் சுவடிகளும், புத்தகங்களும் எரிக்கப்பட்ட அந்த கட்டடம் ஒரு படுகொலையின்
சமாதியாகவே இருகிறது இப்போது மீளவும் கட்டப் பட்டுள்ள அந்த நூலகம் வெள்ளையடிக்கப்பட்ட ஒரு படுகொலையின் சமாதியே.முன்னைப் போல இப்போது மக்கள் அந்த நூலகத்திற்கு போவதில்லை.பெருமபால பொழுதுகளில் சோகமேயுருவாக யாழ் நூலகம்
தனித்தே இருகிறது.அதனிடம் இப்போது நிறையப் படுகொலைகளின் கதைகள் உள்ளது.

( இது கடந்த முறை நான் எழுதிய கட்டுரையின் மீள் பிரசுரமே)
*********** **************** **********
குறிப்பு : எரியும் நினைவுகள் என்ற எமது ஆவணப் படத்தினைப் பலரும் பார்த்திருப்பீர்கள் உண்மையில் அதில் இன்னும் பல தகவல்களும் சேதிகளும் சேர்க்கப்பட வேண்டும் நானும் சிவகுமாரும் முன்னமே திட்டமிட்டபடி ஒரு வரலாற்று ஆவணத்தை தாயாரிக்கும் எங்களின் முயற்சி இன்னமும் முடியவில்லை. உங்களிடம் நூலகம் பற்றிய தகவல்கள் சேதிகள் இருப்பின் அறியத் தரவும்

Friday, May 29, 2009

ஷோபாசக்தி &கோ.. சுகமாத்தான் "பெறுவியளோ" ?

ஆனால் இன்றைய சூழலில் என்னைப் போன்றவர்கள் ஈழத்துக்குப் போய் அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட முடியாதவாறு புலிகளின் துப்பாக்கிகளும் அரசின் சிறைகளும் எம்மைத் தடுத்து வைத்துள்ளன. வாய்ப்புள்ள சூழல் வரும்போது நான் என்னை இயக்கச் செயற்பாடுகளில் முழுமையாக இணைத்துக்கொள்வேன். இப்போது கூட அய்ரோப்பாவில் சிறு அளவில் குழுக்களாக அரசியற் செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டுதானிருக்கிறோம். - ஷோபாசக்தி

எழுத்தாளரும் நம்ம நண்பருமான ஷோபாசக்தி கே. பாலமுருகன் என்பவருக்கு எப்பவோ கொடுத்த நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார். இதை இந்த நேரத்தில் வெளியிட்டிருக்கிறார் போல ... ஆனால் துரதிஸ்ட வசமாக ஷோபா சொல்லும் துப்பாகிகள் அங்கு இப்போது செயலிழந்து விட்டன. வேறு இடங்களிலிருந்து வேண்டுமானால் துப்பாக்கிகள் வரக் கூடும். ஒரு வேளை இப்போது பேட்டி கண்டிருந்தால் கருணாவின், பிள்ளையானின் , டக்ளஸ் அண்ணையின் .... ... ... துப்பாகிகளின் அச்சுறுத்தல் இருக்கிறது என ஷோபா சொல்லியிருக்கக் கூடும்.

அடுத்து அரச அடக்கு முறை தடுத்து வைத்திருக்கிறதாம். அட நாதாரிப் பயலுகளா( நாதாரி பயலு எண்டு ஷோபாவைச் சொல்ல வில்லை இதையெல்லம் கேட்க்கும் வாய்ப்புப் பெற்ற என்னையும் உங்களையும்தான் சொல்கிறேன்) அடக்கு முறைக்கு எதிராக போராடுவதற்க்குத்தானே இயக்கம். அதுக்குப் பெயர்தானே போராட்டம். ஷோபா அந்த பேட்டியில் குட்டிரேவதி ஆதவன் தீட்சண்யா எல்லாரும் இயக்கத்தில் இணைந்து போராடுகிறர்கள் எழுத்தாளர்கள் இயக்கத்தில் சேரக் கூடாது என்பதல்ல என்கிறார்.

இதில ஒரு சின்ன தகவல் இயக்கம் என்கிறது தமிழீழத்தில் உபயோகிக்கும் அர்த்தத்தில் அல்லாமல் பொதுவான அர்த்ததில் சொல்லுறன். ஆதவன் தீட்சண்யா லண்டன் சென்று கூட்டங்களில் கலப்பதால் அவர் அனைத்துலக பிரிவுடன் தொடர்பு என்றோ... குட்டி ரேவதி கவிஞர்களின் ஈழத்தமிழர் பாதுகப்பு முயற்சிகளில் முன்நிற்பதால் அரசியற் துறைத் தொடர்பு என்றோ நினைத்து விட வேண்டாம்.

அட ஆமங்கண்ணு அவுங்க மாதிரி உங்களுக்கு நாட்டின் சூழல் இருந்தால்
அப்ப சுகமா உக்காந்துகின்னு போராடுவிங்களோ. ( அவுங்க நாட்டில போராடுறது அத்தனை சுகம் என்பதில்லை என்பது வேறு கதை. கருணாநிதி மற்றும் செயலலிதா போன்றவர்களின் அரசாட்சியின் சிறைகள், தேசிய பாதுகாப்புச் சட்டம், ரவுடிகளின் துப்பாகிகள் காரணமாக தமிழ்நாட்டிலும் உங்களைப் போன்றவர்களால் தீவிரமாக போராட முடியாது)

உனக்கு வாய்த்த சமூகத்தின் சூழலில் இருந்து போராட வேண்டும் அல்லது நீ வாழும் சமுகத்தில் நாட்டில் போராட வேண்டும் அல்லது உனது மொழிச் சமுகத்தில் போராட வேண்டும் அதை விட்டு விட்டு புலிகளின் ஆயுதம் இலங்கை அரசின் அடக்கு முறையும் முடியட்டும் இயக்கம் அமைத்து போராடுறன் எண்டால்.... ..... ....

புலியெதிர்ப்பு ஆதாரவு பாசிசம் சாதிய ஆதிக்கம் என்பன எல்லாவற்றையும் உங்களால் முன்வைக்கப்பட்ட பல விமர்சனங்களையும் தாண்டி இலங்கையில் இப்போது வரை இருந்து போராடிய அத்தனை பேரும் உங்களைப் பொறுத்த வரையில் ஒரு வேளை முட்டாள்களாக இருக்க முடியுமோ. ஷோபாசக்தியினது இன்னாள் முன்னாள் தோழர்கள் மற்றும் சில நாட்க்கள், மாதங்கள் முன்பு பிரிந்து போன தோழர்கள் என பலரும் பூட்டிய குளிர் அறைகளுக்குள் கணனி முன்னால் உட்கார்ந்து கொண்டும் அல்லது அழுக்கான ஆடைகளுடன் நிறைந்த போதையிலும் விமர்சித்துக் கொண்டிருக்க இயங்கிக் கொண்டிருந்த மனிதர்களின் மரணங்களை கூட நீங்கள் பாசிசத்தின் மரணங்களாகவே சொன்னீர்கள். சிவராம் உட்பட பலரின் மரணங்களையிட்டே நான் பேசுகிறேன்.

தாங்கள் கொண்ட கருத்துக்காக இயங்கிக் கொண்டிருந்தார்கள். சிவராம் எங்க இயக்கத்தில் இருந்தார் என்றால் பத்திரிகையாளர் அமைப்புகளும் இயக்கம்தான். சுனந்த தேசப்பிரிய, சனத் பால சூரிய, சிறித்துங்க ஜெய சூரிய , விக்கிரமபாகு கருனாரட்ண, ரவிராஜ், என அரசியல் சமூக இயக்கம் சார்ந்து பலரும் இயங்கிக் கொண்டுதானிருக்கிறார்கள். ராவிராஜ் தனது அரசியலாக எதை கொண்டிருந்தாலும் நமக்கு ஒத்து வந்தாலும் வராவிட்டாலும் அவர் ஏதோ ஒரு இயக்கத்தில் இயங்கினார்.

மனித உரிமைகளுக்காக இன்னும் வழக்காடும், முடிந்தவரை அவற்றை வெளிக்கொண்டுவரும் எத்தனை அமைப்புகள் தொடர்ந்து இயங்கின. அதில் பணியாற்றிய நண்பர்களுக்கு அச்சுறத்தலே இல்லையா? இப்போதுதான் படிப்படியாக அவர்கள் வெளியேறுகிறார்கள். ஆனால் அவர்கள் நிரந்தரமாக குடிபெயர்ந்து செல்ல வில்லை. சும்மா என்னகடா விடுகை விடுறீங்க. எங்களால போராட முடியல சும்மா எழுதிக்கிட்டும் பேசிக்கிட்டும் இருப்போம். அதுவும் பிரச்சனை வராமலுக்கு ... .... இந்தியாவுக்கு வந்தால் யரைப் போய் பார்கணும் அவர்களைப் பார்ப்பம். எப்ப பேட்டி கொடுக்கணுமோ எதைப் பற்றிக் கொடுக்கணுமோ அதைக் கொடுத்து விட்டு கிளம்பிடுவம். இதுதானே உங்கள் பார்முலா?

அடுத்து நம்ம நண்பன் ஷோபா அண்ணாச்சி ( மட்டக்களப்புல அண்ணன் என்பதை அன்பா அண்ணாச்சி எண்டு சொல்ர நாங்க..மறுகா யாரும் சரவணபவான் அண்ணாச்சி மாதிரி நினைச்சிடக் கூடாது) சின்னதாக தான் வழும் நாட்டில் சிறு சிறு குழுக்களாக இயங்குகிறாராம். நல்லது அங்க உள்ள தொழிளார்கள் குடியேறிகள் குறித்தாவது வேலை செய்வது என்றால் நல்லதுதான். ஆனால் அதை சத்தமாக சொல்லுமளவிற்க்கு இவர்களின் இயக்கம் அத்தனை ஆழமாக இல்லை . கூட்டம் போடுவதற்க்கும் கூடிப் பேசுவதற்க்கும் புத்தகம் எழுதுவதற்க்கும் புலியை விமர்சிப்பதற்க்கும் . ஈழத்தின் எந்த வேலியில் புலியின் குடும்பியில் சாதியாதிக்கம் இருக்கிறது என்பதை புகுந்து தேடுவதற்க்கும் போதையேற்றுவதற்க்குமே இவர்களுக்கு நேரம் போதாமல் இருக்குமே.

சரியப்பா இப்ப பிரச்சனைக்கு வருவம். சதா புலிகளையும் ஈழத்தில் நடக்கும் சாதிய , வர்க்க அடக்க முறையையும் பேசிக் கோண்டும் தமது அரசியலாகக் கொண்டும் தமக்கிருக்கும் எழுத்துவன்மையைக் கொண்டும் இணையத்தில் இயங்கி வந்த தமிழரங்க ,சத்தியகடதாசிக் காரர்களே இப்போதும் உங்களுக்கு பாதுகாப்பான இணையதில் இயக்கம் வளர்க்கிறீர்களோ? நீங்கள் வைத்திருந்த வைத்திருக்கும் மாற்று அரசியல் என்ன? இப்போதுதான் நீங்கள் இதுவரை விமர்சித்த பாசிஸ்டுகள் அழிக்கப் பட்டனரே அப்படியானால் உங்களின் மாற்று அரசியலை இந்நேரம் துக்கிகொண்டு கிளம்பியிருக்கலாமே.

ஓ..... ஒரு வேளை வெளிநாட்டு புலி பாசிஸ்ட்டுகளும் அழிக்கப் பட வேண்டுமோ. எனக்கென்னமோ இப்ப இருக்கும் நிலையில் அவர்கள் துப்பாக்கி தூக்கிக் கொண்டு உங்களைக் கொல்ல வருவதற்க்கான சூழல் இல்லையென்றே தோன்றுகிறது. உங்க கூடவே யாராவது கூட்டத்தில் துப்பாக்கியோடு இருக்கப் போகிறார்கள் பாருங்கள். சைகிள் கப்பில தோழர்கள் யாரவது உங்கள் மாற்றுத் திட்டங்களை அடித்துப் பறித்து விடப் போகிறார்கள்.

சும்மா புலிகள் 100 வீதம் கொடுமைக் காரர்கள் என்றால் இலங்கை அரசு 200 வீதம் கொடுமைக் காரர்கள் என கருணாநிதித்தன டயலக்குகளை ஷோபசக்திகள் இனியும் சொல்லப் போகிறார்களா? ( இந்த 100வீதம் புலி எதிர்ப்பு,200 வீதம் இலங்கை அரசு எதிர்ப்பு எனபதை குறைந்தது 3 பேட்டிகளிலாவது இதுவரை ஷோபாசக்தி சொல்லியிருக்காலாம்)

உங்கள் கதையாடல்களால் மக்களை மயக்க நினைக்கிறீகளா? இதுதான் மக்களை அணி திரட்டி அரசியல் அறிவு பெற வைப்பதா? அய்யாமாரே என்னைவிடவும் நமது மக்களை விடவும் நிறையப் படித்த கருதியல்கள் இசங்கள் அனுபவங்கள் கற்றுகொண்ட நீங்கள் பேசுவதையே விளக்கங்கெட்டதனாமா பார்த்துக் கொண்டிருக்கும் எங்களிடம் எதுக்கு கதையளக்கிறீர்கள். உங்கள் எழுத்துகளின் மயக்கத்தில் ஊசியேற்றப் பார்க்கிறீர்களா?

நீங்கள் நட்டை விட்டு வெளியேறிய பின்னர் , இதுவரை உங்களில் எத்தனை பேருக்கு ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகள் துயரங்கள் செய்திகள் குறித்து நேரடியாக தகவல் பெற முடிந்தது. உங்களின் தொடர்பு எப்படியிருந்தது. ஷோபா , நீங்கள் உங்கள் கிரமாம் பற்றிய ஒரு கொலை பற்றிய கட்டுரை ஒன்றை எழுதும் போது நான் உங்கள் கிராமத்தில் இருந்தேன்.அப்போது நீங்கள் பிரான்ஸில். அப்போது உங்களுக்கு புலியால் ஆபத்து என்பது உங்கள் வாதமாக இருக்கலாம். ஆனால் அந்த சம்பவம் பற்றி எழுதுவதற்கான உங்களின் தொடர்ப்பு என்பது எது? ஒரு வேளை உங்கள் நண்பர்களும் உறவினர்களும் இருக்காலாம். ஆனால் இதே போன்ற பல கதைகளை வெறும் இணைச் செய்திகளை வைத்தே எழுதும் பலர் உங்களின் கூட்டளிகளாக இருந்தார்கள் இருக்கிறார்கள்.

முடிவாக மீண்டும் முன்பு கேட்ட கேள்வியே, இதுவரை உங்களின் அரசியலுக்கு புலிதான் பிரச்சனை என்றால். உங்கள் எதிர்பார்ப்புப் படி புலிகள் வந்து கொண்டிருந்த தவறான அரசியல் ராணுவ வழிமுறை அவர்களைத் தோல்வி நோக்கி இட்டுச் சென்று கொண்டிருந்தது என்றால் அப்போதே உங்களிடம் மாற்று திட்டங்கள் இருந்திருக்க வேண்டுமே அப்படியானால், உங்களின் மாற்று அரசியல் என்ன? இப்போது தவிக்கும் மக்களுக்கு முன்னால் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். இதுவரை செத்து கொண்டிருந்த மக்களுக்கு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்னை போலவே நீங்களும் சும்ம வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் என்றால் வெளிப்படையாச் சொல்லுங்கள் .

இல்லா விட்டால் ரயாகரன் என்பவர் அசிங்கமாய் தனக்கு ஒத்துப் போகும் புலியெதிர்ப்பு பதிவுகளை இப்போது தேடிக் கண்டுபிடித்து, புலியே அழிந்திருக்கும் நிலையில் வேதனைகளை கொட்டும் உணர்வுகளில் இருக்கும் புலியெதிர்ப்பை தனக்கு சாதகமாக்கி மீள் பிரசுரம் செய்வது போல் புலியெதிர்ப்பாளர்களை தேடிக் கொண்டிருந்தீர்களா?

ஒரு வேளை நீங்கள் புலியும் முடிந்து இலங்கையில் மகிந்த ஆட்சியும் ஒழிந்து வேறு புதிய ஆட்சி வந்து ஒரே நாடு ஒரே மக்களாகி வாழும் ஒரு காலத்தில் ஒரு 20 வருடங்களுக்கு பிறகு தலித்துகளுக்காக போராடுவதற்க்கு இலங்கையில் ஓர் அமைப்பை அல்லது இயக்கத்தை தொடங்க போவதாக நினத்து நீங்கள் சொன்னத நாந்தான் தப்பா புரிஞ்சிகிட்டு உணர்ச்சி வசப்பட்டு எழுதிற்றனோ.... சே தமிழனாப் பிறந்ததால எல்லாத்திலையும் கொஞ்சம் உணர்ச்சி அதிகம்தான்.

Thursday, May 28, 2009

பிரபாகரன் தெய்வமானார்...

“”எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு, தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற வகையில் தாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தார்களென்றால் என்னை சுற்றின இந்த பிரம்மாண்டம் இருக்காது. நான் தலைவராகவே உங்களுக்குத் தெரியமாட்டேன்”.
- உங்களை எல்லோரும் அசாத்திய திறமைகளை உடையவர்கள் என்கிறார்களே என்கிற Fr.ஜெகத் காஸ்பரின் கேள்விக்கு வி.பு தலைவர் பிரபாகரன் சொன்ன பதில் இது என காஸ்பர் அவர்கள் எழுதியிருக்கிறார்.

உண்மையில் ஈழத்தில் இந்திய ராணுவம் வெளியேறிய பின்னர் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்த அல்லது பள்ளிக் கூடம் போக ஆராம்பித்த ஈழத்தின் புதிய தலை முறைகளுக்கு பிரபாகரன் ஒரு சாகசக் காரந்தான். மேலே பார்க்கமல் இளநீர் குலையில் இருக்கும் ஒற்றை இளநீர் காயை சுட்டு வீழ்த்துவார். கண்ணைக் கட்டிக் கொண்டு குறிதப்பாமல் சுடுவார். அவர் துப்பாக்கியை சுழற்றி லாவகமாக எடுக்கும் ஸ்டைலே தனி.....இந்தியாவோடு சண்டை பிடிப்பமெண்டு அவர் முன்னமே தீர்கதரிசனமாக சொன்னார்... இப்படி இன்னோரன்ன கதையாடல்களை நாங்கள் சின்ன வயதில் இருந்தே கேட்டு வந்திருக்கிறோம்.

பிரபாகரனை ஆதரித்தும் எதிர்த்தும் பல குரல்களையும் எழுத்துகளையும் அமைப்புகளையும் கடந்தகாலம் முழுவதிலும் கண்டாகிவிட்டது. இந்த அமைப்புகள் அனைத்தினதும் பேச்சுகளில் எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும் எம் மக்கள், இன்னமும் இன்னமும் வலிய துயரத்தில் இருகிறார்கள். அந்த மக்களை பிராபகரன் கை விட்டரா அல்லது அந்த மக்கள் பிரபாகரனை கைவிட்டு வர நினைத்தார்களா என்ற வதங்களுகெல்லாம் விடைதேடிக் கொண்டிருகிறார்கள்.

எனக்கு இப்போது யாருடைய தொலைபேசியை எடுப்பதற்க்கும் பயமாக இருக்கிறது. பிரபாகரன் அல்லது தலைவர் உயிரோடு இருக்கிரார இல்லையா என என்னைத் தொலைத்தெடுக்கும் கேள்விகள் இன்னமும் ஓய்ந்த பாடில்லை. நான் முன்னெப்போதோ பத்திரிகைக்காரனாக இருந்ததன் அவதி இது. யாரவது என் தொலைபேசியை ஒட்டுக் கேட்பானோ என்கிற அநியாயப் பயம் வேறு.

கொஞ்ச நாள் , இணையம் வானொலி தொலைக்காட்சி எல்லத்தையும் பார்த்து நம் நண்பர்கள், ஊடக வட்டம் எல்லாத்திலையும் துலாவி சில பதில்களை வைத்திருந்தேன். இப்போது புலிகளின் அதிகார பூர்வமானவரே சொல்லி விட்டார். கிழக்கில் இப்போது மீதமிருக்கும் போராளிகளின் அரசியற்பிரிவுப்
பொறூப்பாளரே சொல்லியிருக்கிறார். ஆனால் இன்னமும் சந்தேகம் தீரவில்லை.

ஒரு தலைவனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதா இல்லையா என்கிற குழபத்திற்க்கு முடிவே இல்லை. தலைவரால் கைவிடப்பட்ட மக்களையும் மறந்து அவர்கள் முகம்களில் படும் துயரையும் மறந்து. ..இதுவரை ஐநா...ஐநா என்று தவங்கிடந்த தமிழனுக்கு வைக்கப்பட்ட ஆப்பையும் மறந்து இன்னமும் அவர் வருவாரா...இருக்காரா என்ற ஏக்கம் கடுப்பைக் கிளப்புகிறது.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மட்டும் போராடினால் போதாது உலகின் பலமான சக்திகள் ஆசியாவிலேயும் இருக்கிறது என்பதையும் எங்கள் போராட்டத்தின் பெரும் பலவீனத்தையும் ஐநா வில் இலங்கைக்கு அதாரவாக முடிந்த தீர்மானம் சொல்லியிருக்கிறது. மக்கள் போரட்டமல்ல இது ராணுவப் போராட்டம் என்பதையும் உலகின் கவனத்தை நமது அரசியலால் திருப்பாமல் ராணூவ பலத்தாலும் வன்முறையினாலும் திரும்ப வைத்ததன் விளைவு இது . பலஸ்தீனம் ,கியூபா...என சீனாவோடும் இந்தியாவோடும் ரஸ்யாவோடும் இணைந்து இலங்கையை ஆதரித்த நாடுகள் அதிகம்.

இப்ப எனது பதிவின் தலைப்புக்கு வருவம். பிரபாகரன் இருக்கிறார இல்லையா எனக் கேட்கபடும் கேள்விக்கான எனது விடை அவர் தெய்வமாகிவிட்டார். தெய்வம் இருக்கிறது என நம்புபவர்கள் நம்பலாம் தெய்வம் இல்லை என நாத்திகம் பேசுபவர்கள் பேசலாம். ஆனால் நம்மைப் பொறுத்த வரை தெய்வம் நம் கண்ணூக்கு தெரியாத ஒன்றுதான். எமது நாளந்த காரியங்களில் நாம் யாரும் கடவுளைத் தேடிக் கொண்டிருபதில்லை. சைவத்தையும் தமிழையும் சில சாபகேடுகளையும் வளர்த்த தமிழனுக்கு இது தெரியாதா என்ன?

கருணா 2004 இலேயே சொல்லி விட்டார் பிரபாகரன் எங்களுக்கு கடவுள் போன்றவர் என்று.அவரை நாங்கள் தெய்வமாக மனதில் இருத்தி கிழக்கில் தனியான ஒரு நிர்வாக அமைப்பை ஏற்படுத்துகிறோம் என்பதே கருணா என்கிற பூசாரியின் முதல் அறிக்கை. ஒரு போராளியை கடவுளாகி அவரைச் சுற்றி மந்திரம் ஓதும் பூசாரிகளும் பஜனை பாடுபவர்களும் பக்தர்களும் உருவானது துரதிஸ்ட வசமானதுதான். பிரபாகரன் சொன்னது போல யாருடைய தலையிலாவது பிரச்சனையைக் கட்டி விட்டு தப்பித்து போய் வேடிக்கை பார்ப்பது தமிழனின் இயல்பு. அதுக்கு அவனுக்கு சரியான ஆள் கடவுள்தான்.

பிரபாகரனை அதிசயம் செய்யக் கூடிய கடவுளாகவே பலரும் பார்த்தனர். ஆனால் இப்போது கடவுளைக் காணவில்லை. ஆக கடவுளை தேடுவதை விடுத்து மக்களுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிப்பம். கடவுள் வரவேண்டிய நேரத்தில் வந்து தொலைக்கட்டும். இப்போது அந்த கடவுளோடும் அவர் சேனையோடும் இருந்து காத்தருளிய மக்களை காப்பதற்க்கு என்ன செய்ய வேண்டும்.

வன்னியில் இருந்து இப்போது முகாம்களில் இருக்கும் மக்கள்தான் கடந்த முப்பது வருட கால போராட்டதின் முதுகெலும்பாக இருந்தவர்கள். இவர்கள் வன்னி மண்ணின் குடிகள் மட்டுமல்ல. தமிழீழ நிலப்பரப்பின் அத்தனை பகுதிகளிலும் மட்டக்களப்பு அம்பாறை உட்பட எல்லா இடங்களையும் சேர்ந்த மக்கள். இவர்களுக்கான உடனடி உதவிகளும் மனிதாபிமானப் பிரச்சனைகளுமே உடனடியானது. ஒரு போராளி இயக்கத்தின் அழிவுக்கு பின்னால் எழும் பெரும் மக்கள் எழுச்சிக்கான வாய்பை பெற்ற அரசியல்மயப் பட்ட சமூகமாக நாம் இல்லாததால் முதலில் அந்த மக்களைக் காப்பதற்க்கு ஏதாவது செய்ய வேண்டும்.

புலிகளுக்கு எதிரான பேச்சு என்பது இந்த மக்களிடம் எழுவது இயல்பானது. இது துயரத்திலும் ஆற்றாமையிலும் கோபத்திலும் கையறு நிலையிலும் இன்னும் பலவிலும் எழும். இதனையே வாய்ப்பாக்கிக் கொள்ள பல சக்திகள் காத்திருக்கின்றன.இப்படி நான் கூறூவதன் அர்த்தம் எல்லரும் புலிகளை ஆதரியுங்கள் அவர்கள் புனிதர்கள் என்பதாகது. ஆனால் இதனை வைத்து பிழைப்பு நடத்தவும் போராட்டத்தை மழுங்கடிக்கவும் நினைப்பவர்களுக்கு சோரம் போய்விடக்கூடாது.

இப்போது 13 ம் திருத்தச் சட்டம் என்ர ஒன்றுமில்லாத ஒரு தீர்வை முன்வைக்கவே அரசாங்கம் விரும்பவில்லை. (13ம் திருத்தச் சட்டம் அப்பிடீன்னா என்று நிறைய நண்பர்கள் கேட்கிறார்கள் அதுபற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்)13 ம் திருத்தம் தொடர்பாக த.வி கூட்டணி 1987 இல் முன் வைத்த சில திருத்தங்களை இன்று வரை அரசு கண்டு கொள்ளவே இல்லை. அதை வலியுறத்த இப்போதைய அதன் தலைவர் தயாராக இல்லை அவருக்கு வடக்கு முதலமைச்சர் ஆகுவது மட்டுமே கனவு. இதுல டக்ளஸ் க்கு எங்கே ஈபிடிபி யைக் கலைகச் சொல்லிவிடுவார்களோ என்ற கவலை. பிரேமதாசவால் புலிக்கு எதராக தமிழர் தரப்பாக உருவாக்கி சந்திரிக்காவால் வளர்க்கபட்ட அந்த அமைப்பு இப்போதைக்கு மகிந்தவுக்கு தேவையற்றதுதான். மற்றது கருணா நம்பிக்கையோடு இருக்கிறார் ததேகூ கிழக்கு எம்பிக்களில் பலர் தன்னோடு அரச கட்சியில் இணைந்து கொள்வார்கள் என்று.

இவர்கள் யாருக்கும் தமிழருக்கான தீர்வுபற்றிய எந்த திட்டமும் கிடையாது. மகிந்த என்ன சொல்லுகிறாரோ அதுதான் திட்டம். இந்தியாவும் கிட்டத்தட்ட இந்த கட்சிகளின் நிலையில்தான் இருக்கிறது.தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமும் திட்டம் எதுவும் இல்லை. அப்பிடியிருந்தாலும் அதை அவர்கள் சொல்லும் வாய்ப்பு இல்லை. அடுத்து என்ன பேசுவதெனக் கேட்பதற்க்கு ஆளும் இல்லை.

இந்த நிலையில் அரச கட்சி எம்பிகளுக்கு மட்டுமே வவுனியா முகாம்களுக்குள் அனுமதி வழங்கப் படுகிறது. மற்ற எம்பிக்கள் மக்களைச் சந்திக்க வேண்டுமானால் மஹிந்தவின் அரச கட்சியின் இணைய வேண்டும் என்று வெளிப்படையாக அந்த எம்பிக்களிடம் சொல்லப் படுகிறது.அரச தொலைக் காட்சிகள் மட்டுமே மக்களைச் சந்தித்து நிகழ்ச்சி செய்ய முடியும். அல்லது அரசின் சாதனைகள் மட்டுமே தனியார் உட்பட எல்லா ஊடகங்களும் பேச வேண்டும் என்கிற பல நடை முறைகள். தமிழ் தினசரிகளே மகிந்தவின் சேதியை மட்டுமே பிரசுரிக்கின்றன.

அதாவது இலங்கை ஒற்றைக் கட்சியின் அதிகாரத்தினை நோக்கி போய்க் கொண்டிருகிறது. பேருக்கு வேண்டுமானால் ரணில் கட்சி நடதாலாம் என்ற நிலை உருவாகும். தமிழ் கட்சிகளே இல்லை என்ற நிலை வரும். இந்த ஆபத்தான அடுத்த கட்டம் பற்றி யோசிக்க வேண்டிய நேரத்தில் உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

Sunday, May 24, 2009

ஷோபாசக்தியின் F இயக்கமும் நம் இயக்கமும்..

இந்த தலைப்பில் இருக்கும் இரண்டுக்கும் அல்லது நான் எழுதப்போகும் விடையத்துக்கும் எனக்கும் நேரடியாக தொடர்பில்லது விட்டாலும் எனக்கு இப்படி ஒரு தலைப்பிடுவதே பிடித்தமாக இருந்தது. ஷோபாவில் இருக்கும் கிளுகிளுப்பும் இயக்கதில் இருக்கும் வன்முறை நிறைந்த கிளுகிளுப்பும் மசாலாப் படங்களை சின்ன வயதில் இருந்து பார்த்த எனக்கு இப்படியொரு தலைப்பிட வேண்டுமென்ற உந்துதலை ஏற்படுத்தியிருக்க கூடும்.ஆனால் நான் இதுவரை ஷோபா குறித்து பாலுமகேந்திராவிடமோ இயக்கம் குறித்து வட இந்திய நண்பர்களிடமோ பேசியதில்லை.

நான் இப்படிப் பேசாததுக்கு என்னுடைய இருப்பு பற்றிய அக்கறையும் எங்கு போனாலும் பிழைத்துக் கொள்ளும் மனோநிலையும் காரணமாக இருக்கலாம். மற்றது இது நமக்கு புதுசில்லைத்தானே. இந்திய ராணுவம் யாழ் மருத்துவமனைக்குள் புகுந்து சுடும் போது ராஜிவ் வாழ்க இந்திரா வாழ்க என குரல் எழுப்புவதும். இயக்கம் வந்தாலும் இராணுவம் வந்தாலும் கை கட்டி தேனீர் கொடுத்து அவர்கள் என்ன கேட்கிறார்களோ அதுவெல்லாம் கொடுத்து உபசரிப்பதும் நமது பண்பாடுதானே.

சின்ன வயதில் இருந்தே யாரிடம் எது பேச வேண்டும் எப்படி நடக்க வேண்டும் என்று சொல்லியே வளர்க்கப்பட தலைமுறை நாங்கள். யாழ்ப்பாணத்தில் ஒன்பது பத்து வயதுகளில் எங்களுக்கு சினிமாப் பாடல்கள் அவ்வளவாகத் தெரியாது இயக்கப்பாடல்களை சினிமாப் பாடல்களைப் பின்னாளில் எப்படிக் கிளுகிளுப்போடு படித்தோமோ அதே கிளுகிளுப்போடும் அதற்க்கு மேலதிகமாக அதீத உணர்ச்சியோடும் படித்தோம். கிளுகிளுப்பே உணர்ச்சி மயமான மாயைதானே எனச் சொல்லும் கூட்டங்களுக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை.

"புலிக்குப் பயந்து பிரேமதாச கோட்டைய விட்டாரே...." என்ற பிரபலமான பாடல் நான் யாழ்ப்பாணத்தை விட்டுவெளியேறும் நாட்களில் அதிகம் படித்து திரிந்த பாடல்கள்.பெடியன் போறபோக்கு சரியில்லை இப்படியே இருந்தால் இன்னும் நாலு வருசத்தில இயக்கத்துக்கு போடுவான் எனச் சொல்லிக்கொண்டிருந்த அம்மம்மாவின் பேச்சைக் கேட்டோ என்னவோ யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறும் முடிவை அம்மா எடுத்தார்.அப்பா மட்டக்களப்பில் வேலை செய்து கொண்டிருந்தார் என்கிற காரணமும் இருந்தது.

நான் மட்டுமல்ல நிறையப் பேர் நீண்ட பயணத்தின் முடிவில் இராணுவ எல்லைக்குள் வந்தோம். என்னைப் போல பிள்ளையள் எல்லாரிட்டையும் ஊரில இருந்து புறப்பட முதலே இரு வாராமாக திரும்பத் திரும்ப சொன்ன விசயம் வாவுனியா தண்டினா இங்க பாடுற பாட்டுக்களைப் பாடக்கூடாது. ஆமி பாடச் சொல்லிக் கேட்டால் தேவாரம் பாடிக் காட்டுங்கோ எண்டு ஒருவாரம் தேவாரமும் திருப்புகழும் படாமாக்க விட்டர்கள்.இராணுவப் பகுதிக்கு வந்து 10 வருடங்களுக்குப் பிறகு அமைதி ஒப்பந்தத்தின் பின்னர் இயக்கப் பகுதிக்குப் போகும் போது என் நினைவில் தென்னிந்திய சினிமா பாடல்களே அதிகம் ஆக்கிரமித்திருந்தன.வன்னியில் இன்னமும் இயக்கப் பாடல்களையே போட்டுக் கொண்டிருந்தார்கள்.

90களின் ஆரம்பத்திலே எமக்கு அறிவு தெரிந்த நாட்களில் இயக்கம் என்ற பெயருக்கு எங்களிடம் ஒரே அர்த்தம்தான் இருந்தது. அப்போது விஞ்ஞானப் பாடப்புத்தகத்தில் இயக்கம் என்ற சொல் வரும் போது எமது நினைவில் வரி ஆடை அணிந்த உருவங்கள் வந்து போகும். பின்னர் மட்டக்களப்பில் சிறிசபாரத்தினம் என்ற ஒருவருக்காக நினைவஞ்சலி தெரிவித்தது ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களின் அடிப்பாகத்தில் இயக்கம் என்ற எழுத்துக்கள் தெரிந்தன.அப்போதுதான் வேறு இயக்கங்களும் இருப்பது பற்றி நாங்கள் பேசிக் கொண்டோம். பின்னர் 7 அல்லது 8 ஆம் வகுப்பு படிக்கும்போது ஈபீ ..நாய்பீ.. என்றூ ரைய்மிங்காக சொல்லுவது எங்கள் காதுகளில் வந்து விழும். ஆனால் நாங்கள் இதுபோன்ற குழுகள் பற்றி அறிவதில் நாட்டமற்றிருந்தோம்.

புளட் ,ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற அமைப்புக்களின் பெயர் பலகைகள் அதிகம் காணக் கிடைக்கும் பின்னர் ஈபிடிபி பெயர் பலகையும் காணக் கிடைத்தது. இவை தவிர மட்டக்களப்பில் தேர்தல் நடந்த போது ஈரோஸ் என்ற பெயர் அறிமுகமானது. இந்த நாட்களில் இயக்கம் நடத்து சில பல தாகுதல்களின் செய்திகள் படிக்க கிடைக்கும். மற்றம் படி மாத்தையா..ஸ்கூல் மாத்தையா ரியூஸன்...என்று சொல்லியபடி சோதனை சாவடிகளைக் கடந்து கொண்டிருந்தோம்.இந்த மாத்தையா புலிகளின் பிரதிதலைவராக இருந்து மரண தண்டனைவிதிக்கப்பட்ட மாத்தையா இல்லை. சார், ஐயா போன்றவற்றிற்க்கு ஒப்பான மரியாதையான சிங்கள வார்த்தை. இந்த நேரத்தில் ராசிக் குழுதான் இயக்கத்துக்கு அடுத்ததாக எங்களிடத்தில் புகழ் பெற்றிருந்தது.

பொறு ரசிக் குரூப்ல இரிகிற மாமாட்ட சொல்லித் தாரன் என சில பையன்கள் பள்ளீயில் வைத்து மிரட்டுவார்கள். சண்டை பிடித்தால் இப்பிடிப் பயமுறுத்துபவர்களிடம் நாம் எச்சரிக்கையாகவே இருப்பம். ரசிக் குரூபில தன் மாமாவைக் கொண்டிருக்கும் பையனுக்கு இடவேளை நேரத்தில கன்ரீன் கவனிப்புகள் இருக்கும். நம்ம கூட அவன் இருந்தால் மற்றவனுகள் பயப்படுவானுகள் என்பதால் அவனை அடிக்கடி கவனித்தாக வேண்டியிருந்தது.

ராசிக் குரூபில் யார் வேணுமெண்டாலும் சேரலாம். மட்டக்களப்பு வாவியை நோக்கி ஒருதரம் துப்பாக்கியால் சுட்டுக் காட்டினால் போதுமானது, இராணுவச் சீருடையும் எட்டாயிரம் ரூபா சம்பளமும் துப்பாக்கியும் தருவார்கள் என எனது நண்பர்கள் சொல்லுவார்கள்.இந்த நிலையில், புளட்,ரெலொ,எபி.ஆர்.எல்.எப் போன்றவர்களை மற்ற இயக்கம் எண்டு அழைக்க ஆரம்பித்தோம். மட்டக்களப்பில் இயக்கம் ,மற்ற இயக்கம் ,ராசிக் குழு இது மூன்றும் எங்களிடம் பிரபலமான வார்த்தைகள்.

இந்த நேரத்தில் காமினி திஸ்ஸாநாயக்க செத்துபோகவும் தினமுரசில் அற்புதன் ஒரு தொடர் எழுத ஆரம்பித்தார். தினமுரசு ஒரு வாரப் பத்திரிகை. முதன் முதலில் கலர்புள்ளாக வந்த பத்திரிகை. தினமுரசு முதல் இதழில் இருந்து எங்கள் வீட்டில் வாங்கி வந்தார்கள்.என் நண்பர்களிடமும் பிரபலமான ஒரே பேப்பர் அதுதான்.நடுப்பக்கத்தில் கலராக வரும் சினிமா கிசு கிசு வில் இருந்து அரசியல் கட்டுரைகள், செய்திகள் ,இராணூவ ஆய்வுகள், கல்லாறு சதீஸ் கதைகள் வரை உண்மையென்று நம்பிப் படித்துக் கொண்டிருந்தோம்.

தினமுரசு அளவில் கறுப்பு வெள்ளையில் இன்னொரு பத்திரிகையும் வந்தது அதை என் நண்பன் ஒருவனின் அப்பா வாங்கிப் படித்துவிட்டு அலுமாரியின் மேல் வைத்து விடுவார். ஒளித்து வைக்கிறாரே என்ற ஆர்வத்தில் அதை எடுத்துப் படித்தோம் அதன் பெயர் சரிநிகர். நடுப்பக்க கிசுகிசுகளும் இயக்கம் பற்றிய கிளூகிளுப்புகளும் அதில் அவ்வளவாக இல்லை என்றாலும் எதோ ஒரு ஆர்வதில் படித்தோம்.

ஒரு நாள் நண்பனின் அப்பாவிடம் கேட்டம் ஏன் இதை மேல வைக்கிறீங்கள் என்று... இயக்ககாரரின் பேப்பர் என்றார். இயக்கமா மற்ற இயக்கமா என அவர் சொல்ல வில்லை. தினமுரசும் இயக்ககார்ட பேப்பர்தான் எனவும் சொன்னார். அதேபோல மற்ற இயக்கங்கள் இருகிற ரோட்டில போகும் போது 5 ரூபாவோ பத்துரூபாவோ வாங்கிப் போட்டு அவர்களும் பத்திரிகைகள் கொடுத்தார்கள். நாங்கள் ஐஸ்பழம் வாங்கி சூப்பிக் கொண்டும் போகும் வயசு என்பதால் எங்களுக்கு கொடுக்க மாட்டார்கள். இப்போது சின்ன சைஸ் பேப்பரெல்லாம் இயக்கங்கள்தான் அடிக்குது எண்ட முடிவுக்கு வந்திருந்தோம்.

இது இப்படியிருக்க எங்களுக்காக தினமுரசில் அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரையென்ற வராலற்று தொடரை அற்புதன் ஆரம்பித்தார்.அதாவது எங்களுக்கா எண்டால் ஆயுதபோராட்டத்தை ஆரம்பித்தவர்களுக்கா இல்லை ஆயுதப் போரட்டதில் பிறந்தவர்களுக்காக. அந்த நேரதில் தற்கொலைத் தாக்குதலில் பலியான காமினியின் கொலையை இயக்கம்தான் செய்தது எனப் பேசிக் கொண்டார்கள். அல்பிரட் துரையப்ப கொலையை யார் செய்தது என்பதில் ஆராம்பித்து நகரும் தமிழீழ வரலாற்று கிளுகிளுப்பு தொடருக்காக ஒவ்வொரு வியாழனும் நாங்கள் காத்திருந்தோம்.தினமுரசு வியாழனில்தான் கடைக்கு வரும்.

நான் ஒருவேளை சம்மந்த சம்மந்தமில்லாமல் எதை எதையோ எழுதிக் கொண்டிருக்கிரன் என எனக்கே அலுப்புத் தட்டுகிறது. ஆனால் எங்களுரில் எப்போதும் பத்திரிகையாளர்கள் சம்மந்த சம்மந்தமில்லா விசயங்களை எழுதிக் கொண்டிருபார்கள். அதில் ஆகச் சிறபானது ராணுவ ஆயுவுகள். இராணுவம் பரந்தன் தாண்டி புதுகுடியிருப்பு போகும் வரை எழுதிய சில ஆய்வாளர்கள் ஆய்வதை நிறுத்திக் கொண்டார்கள்.

முக்கிய எழுத்தாளர்....ஷோபாசக்தியின் F இயக்கம் என்ற கதையில் ஒரு இடத்தில் 1986இல் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லியிருப்பார். காரை நகரில் இருந்து முன்னேறி வந்த ராணுவம் ஊறாத்துறை அந்தோணியார் கல்லூரியி முகாமிட்டது.அந்த இராணுவத்தை ஒரு இயக்கம் சுற்றி வளைத்தது . 20 பெடியள் சிறிய ஆயுதங்களை வைத்து சண்டையிடுகின்றனர். ஒரு பெடியன் செத்து விழுகிறான். மேலதிக கொமண்டோகளை ஹெலியில் கொண்டுவந்து இறக்குகிறார்கள்.புதிய கொமாண்டோக்கள் முன்னேறிக் கடும் தாக்குதல் நடத்துகின்றனர்.

இப்போது முற்றுகைக்குள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிக்கத் தொடங்கினர் ஆனாலும் அந்த இயக்கப் பெடியள் பின் வாங்காமல் சண்டையிட்டனர். அவர்கள் சண்டையிட்டு சாவதென தீர்மனித்திருக்க கூடும் என சொல்லும் அந்தகதையில் சிறிது நேரத்தில் இன்னுமொரு இயக்கம் வந்து மேலதிகமாக இறக்கப்பட்ட கொமாண்டோக்களை நோக்கி கடுமையாக தக்குதல் நடத்தி நிலை குலையச் செய்தது. மற்றுமொரு இயக்கம் ஏற்கனவே சண்டையிட்டுக் கொண்டிருந்த இயக்கத்தோடு இணைந்து தாக்குதல் நடத்தி காயப்பட்ட பெடியன்களைக் காப்பாற்றுகிறது என்பது போல் அந்தகதையில் வருகிறது. தோள் கொடுத்த தோழர்களுக்கு நன்றி என ஒரு இயக்கம் துண்டுபிரசுரமும் வெளியிட்டதாம்.

ஆனால் ஷோபாசக்தி இந்த சம்பவம் நடந்ததாகச் சொன்ன வருடத்திலும் அதற்க்கு சில வருடங்கள் முன்னும் பின்னுமாக பிறந்த எங்கள் தலை முறைக்கு ரணுவத்திற்க்கு எதிராக போராடியது என்றால் ஒரு இயக்கத்தைத்தான் தெரியும். எங்களில் பெரும்பாலானவர்களுக்கு தினமுரசுதான் வரலாறே சொன்னது. களத்தில் நின்ற சில பேரை சந்தித்து பேசிய போது சொன்னார்கள் நீங்கள் வாசித்த அந்த தொடரை நாங்களும் வாசித்தோமென. ஒரு வேளை அவர்களும் அந்த கிளுகிளுபூட்டும் தொடரை ஆயுதப் போராட்ட வரலாறு என வாசிதிருக்ககூடும்..

இப்போது 20 பேர் அன்று சண்டையிட்ட ஆண்டிலும் அதற்க்கு முன்னும் பின்னுமாக பிறந்த ஆயிரமாயிரம் பேர் எங்கள் தலைமுறையில் இராணுவத்திற்க்கு எதிராகப் போராடினார்கள்.முள்ளிவாய்க்காலில் முற்றுகை வரும் வரை போராடினார்கள் தப்புவதற்க்கான வாய்ப்பைத் தவற விட்டுக் கொண்டே போராடினார்கள். முன்னைபோலவே போராடியே சாவதென அவர்கள் முடிவெடுத்திருக்க கூடும் அல்லது அவர்களின் தளபதிகள் முடிவெடுத்திருக்க கூடும்......

செய்தி 1 : இலங்கை இராணூவம் போரில் வெற்றி பெற்றதை அடுத்து இலங்கை அதிபர் நாடு திரும்பினார்.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிபரைக் கட்டித்தழுவி முத்தமிட்டு வரவேற்றார்.

செய்தி 2 : கர்ணல் கருணா அல்லது அமைச்சர் வி.முரளிதரன் பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டினார்

செய்தி 3 : புளட் சித்தார்த்தன், ஈபிஆர் எல் எப் சிறிதரன், தவிகூ ஆனந்தசங்கரி ஆகியோர் இந்திய தூதுவர்களைச் சந்தித்து விடுவிக்கப்பட மக்களை மீளமர்த்துவது குறித்து பேசினர்.

Wednesday, May 20, 2009

தலைவனைத் தேடும் தமிழர்களே...

எப்போதுமே எழுதிவிட்டு தலைப்பிடும் எனக்கு எழுதுவதற்க்கு முன்பே இந்தலைப்பு வந்து உட்காந்து கொண்டது. தமிழனுக்கு எப்போதுமே தலைவன் தேவை. பாட்டுடைத் தலைவர்களின் வீரமும் காதலும் கலந்த வரலாறுகளில் கதைபேசி கதைபேசி கடந்து போவது எமக்கு பிடித்தமானதுதான். சின்ன வயதில் பாட்டி சொல்லும் கதைகளில் இருந்து விசயகாந்த் படங்கள் பார்க்க ஆரம்பித்த நாட்கள் வரை நமக்குள் கதாநாயக ஆதிக்கம் கால் வைக்கிறது. அப்படி ஒரு கதா நாயகர் என பிரபாகரனை வரிந்து கட்டியிருக்கும் என் தமிழ் உறவுகள் நிறைய நிறைய. எங்கள் எல்லோரும அவர் வீரத்தை ஏற்படுத்தும் தலைவர்தான். 
 5 ம் வகுபில் தமிழீழ தேசம் வேண்டாமா? என 1990 இல் நான் பேச்சுப் போட்டியில் பேசியதக்கு பரிசாக பிரபாகரனின் படம் ஒன்றும் 100 ரூபாவும் தந்தார்கள்.தலைவர் ஒரு புலியின் பக்கத்திலோ சிறுத்தையின் பக்கத்திலோ அமர்ந்திருக்கும் படம் அது.அந்த படமோ 100 ரூபாவோ இல்லை 5 ம் வகுபில் படித்த அந்த பெட்டை என்னை கண்வெட்டாமல் பார்த்தோ என்னை அத்தனை குசிபடுத்தியிருக்கவில்லை. அந்த படத்தின் பின்னால் அண்ணை கையெழுத்துப் போட்டிருந்தார். அந்த கையெழுத்துக்காக என்னை எல்லோரும் மொய்த்துக் கொண்டார்கள். மின்னியல் பிரதியெடுக்க முடியாத அந்த நாளில் மெல்லிய ரிசு பேப்பர் வைத்து அதை பிரதியெடுத்தவ்ர்கள் எத்தனை பேர். நான் யாழ்ப்பாணத்தை விட்டு மட்டக்களப்பு வரும் போது எனது புத்தகங்களில் அதிக பக்கமுடைய கணிதப் புத்தகத்திற்குள் மறைத்து வைத்து இராணுவ பரிசோதனைகளைத் தாண்டி இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்புக்கு அந்த படத்தை கொண்டு வந்தேன். அம்மா பாடம் சொல்லித்தரும் போது அந்த படம் தவறி விழ பதறியடித்து அதனைக் கிழித்து தீ வைத்தர் என் அம்மா. ஆமி செக் பண்ணும் போது பிடித்தால் குடும்பத்தோட பிடிச்சுக்கொண்டு போவாங்கள் எண்ட பயம்தான். நான் இரண்டு மூன்று நாட்கள் சாப்பிடவில்லை . வாரம் தண்டி படிக்காமல் அடம்பிடித்தேன். 

அண்ணை எங்களுக்கு தலைவன், கதாநாயகன் ,ஒரு உந்துதல் எல்லாமும் தான். எங்களின் அண்ணையை பின்னாளில் எல்லோருமே தலைவர் என விழித்தார்கள். தலைவர் என்பது இன்னும் மிடுக்காக இருந்தது. நாங்கள் உரத்து சொன்னோம் தலைவன் இருக்கிறான் கலங்காதே தமிழீழம் பிறக்கும். அவன் காலத்தில் அதை வெல்வோம். அந்த தலைவன் தேசிய தலைவன் ஆகினான்.எங்களின் தலைவன் முன்னால் மேதகுவும் வந்து விழுந்தது. ஒரு மாதிரி அரசு( Demo State) உருவானது. இந்த இடைவெளியில் நம் தலைவர் தலமையிலான இயக்கம் ஒரு அரச படைகளுக்கான வளம் கொண்ட கொரில்லா போராட்ட அமைப்பு என்பதை நம்மில் பெருந்தொகையோர் மறந்தே போனோம். தமிழீழ அசரின் அரச படைகளாகவும் அந்த மாதிரி தேசதின் அதிபர் எங்களின் அண்ணை எனவும் உருவாகிப் போனது.வெளிநாடுகளில் இருந்து நிதியும் உள்நாட்டில் வரியும் கிடைக்கப்பெற்றது. மக்களும் சில பல போராளிகளுமே இந்த மதிரியை நம்ப ஆரம்பித்தார்கள்.இப்போது அந்த தேசத்தின் வீழ்ச்சியில் எல்லோருமே துவண்டு போயிருக்கிறோம். 

 இதைபோல கடந்த 25 வருடங்களாக ஒரு திரைப் படத்தைப் போல பார்த்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டுக் காரருக்கு இந்த கிளைமாஸ் காட்சிகள் அதிர்ச்சியைத் தருகிறது. நிதானம் தவறுகிறார்கள். நெடுமாறன் அய்யா போன்றவர்களின் மிக நிதானமான பதில்கள்தான் அவர்களை ஆசுவாசப் படுத்துகிறது. இந்த பின்னணியில் இப்போது எல்லோரும் தலைவரைத் தேடுகிறார்கள். நானும்தான் தேடுகிறேன். பிரபாகரன் என்கிற பெயரும் அந்த முகமும் உருவமும் ஒவ்வொரு தமிழனையும் உறுதி கொள்ளச் செய்யும், வீரம் கொள்ளச் செய்யும். வீழ்ந்தவனை எழச் செய்யும் மந்திரமாகும். இது எங்கள் வரலாறும் வாழ்க்கையும் இயல்பும். இது தமிழனின் இயல்பு . தலைவனின் வீரத்திலும் , கதைகளிலும் அவன் பார்வையிலும் வீறு கொண்டெழுவது எங்கள் பாரம்பரியம். வெளிநாடுகளில் இசங்கள் படித்தவர்கள் புதுக் கருத்தியல்களால் புது அறிவு பெற்று மறுகணமே எம் மறவர்களையும் மக்களையும் மாற்றுவதற்க்காக அவர்கள் செய்யும் இணையப் புரட்சிகளில் இவை மாறிவிடப் போவதில்லை. - - - 

 இப்போது தமிழனின் அரசை வீழ்த்திய வீர மன்னனாகவே ராஜபக்சே இருக்கிறார். துட்டகைமுனு எல்லாள மன்னை வீழ்த்தியது போல் என என் சிங்கள நண்பன் குறுஞ் சேதி கொழும்பில் இருந்து அனுப்புகிறான். (எல்லாளன் படை என்ற பெயரில் புலிகளின் குழுவொன்று யாழ்ப்பணத்தில் உலாவியதையும் கெமுனு படையணி சிங்கள ராணுவத்தில் இருப்பதையும் வைத்து இதைச் சொல்ல வில்லை) அவர்கள் இன்னமும் மன்னர் காலத்தில்தான் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு நாட்டை வென்று ஒரே தேசமாக்கும் அந்த கணத்தில் எதிரி தேசத் தலைவன் அல்லது மன்னன் போரில் மாண்ட சேதி அவசியமாகிறது. எதிரி நாட்டு மன்னை போர்களத்தில் கொன்று வீழ்த்திய வெற்றிச் செய்தியை அறிவிக்கிறார்கள். எதிரி மன்னனை நேரடியாகக் கொல்வது வஞ்சகமகக் கொல்வது துட்டகைமுனு போல் தன் தாயைக் காட்டி மயக்கிக் எல்லாளனை கொன்றது போல.பெண்களை காட்டிச் சபலமுறச் செய்து கொல்வது என மன்னர் காலத்தில் பல முறைகள் இருபது போல இப்போது ஏதோ ஒரு உடலை பிரபாகரன் உடல் என கூறுவது கூட புது முறையாகலாம். ஆஸ்கார் ரவிச்சந்திரன் என்கிற சாதாரண தயாரிப்பாளரால் கமலை புஸ் மாதிரி ஆக்க முடியுமானால எத்தனை பேரிடம் காசு வாங்கிப் போர் நடத்தும் இலங்கையால் முடியாதா என்ன. அந்த உண்மை பொய்களுக்குள் நாம் சிக்குப் பட வேண்டாம். பல தேசங்களாக பிரிந்திருந்த இலங்கைத் தீவை பண்டாரவன்னியைக் கொன்றும் கண்டி மன்னனை கபடமாகக் கவிழ்த்தும் இறுதியாக ஒன்றுபடுத்தி ஒரே தேசமாகினான் ஆங்கிலேயன். இப்போதுதான் இலங்கை விடுதலை பெற்றதாக சிங்களவன் கூக்குரலிடுகிறான். அப்படியெனில் ஆங்கிலேயன் வெளியேறியதும் இலங்கை இரண்டாக பிரிய தொடங்கியது என்பதை அவன் ஒத்துக் கொள்கிறான். அப்படி பிரிந்த தேசம் நம் தலைவன் தலைமையில் இரு நாடானது என்று அவன் நம்புகிறான். இப்போது அந்த தேசத்தை வென்றாகிவிட்டது.அந்த மக்களை அடிமையாக்கிவிட்டோம் என்பது அவனிடம் ஒளிந்து தெரியும் சேதி.

 இதே முல்லைத்தீவு சமர்க்களத்தில் பண்டார வன்னியனை ஆங்கிலேயருக்கு காக்கை வன்னியன் இனம் காட்டினான். அப்போது நெடில் கா செய்த வேலையை இப்போது குறில் க செய்திருக்கிறது. அப்படியானல் இது பிரபாகரனின் உடலா? நம் தலைவன் போய் விட்டானா? உங்களுக்கு வாய்த்த தலைவன் எங்களுக்கு வாய்க்கவில்லையே என முத்துக்குமார் சொன்னானே அந்த தலைவனும் போய்விட்டானா? அழுகுரல்களும் பதட்டமாகும் குரல்களும் கடந்த 3 நாட்களாக என்னை உலுப்பிக் கொண்டேயிருந்தன. நானும் அழுது தெளிந்து பின்னர் மீண்டும் அதிர்ந்து இல்லை இது அவர் இல்லை என தன் நம்பிக்கை ஊட்டி ஆராய்ந்து ஆரய்ந்து....... - - - - கோடி தமிழர்கள் தலைவனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது இந்திய மற்றூம் உலக உளவுத் துறையை விட அதிகமாக இந்திய தமிழர்களும் உலகத் தமிழர்களும் பிரபாகரனைத் தேடுகிறார்கள். உண்மையில் பிரபாகரனின் மரணம் தமிழனின் மீது வீழும் அடி மிகப் பெரும் அடி. மண்சுமக்காமல் மதுரையில் அடிவாங்கிய சிவபெருமானுக்கு விழுந்த அடி எல்லோருக்கும் விழுந்தது என்ற கதை போல இதுவும் எல்லோருக்கும் விழுந்த அடிதான். அதாற்காக அவரைத் தேடுவதில் நேரத்தையும் வளத்தையும் எங்கள் சிந்தனையையும் செலவிடுவது சிங்களவன் எதை எதிர்பார்த்தானோ அதைப் பரிசளிப்பதாகவே முடியும். 

இதுவரை தான் செய்த கொலைகளையும் இப்போது செய்வதையும் இனிச் செய்யப் போவதையும் சிங்கள அரசு இதன் மூலம் திசை திருப்பி விடும் இது புலிகளின் வீழ்ச்சிதான். அவர்களின் அரசியல் இராணுவ பலகீனத்தின் வீழ்ச்சிதான். கொரில்லா அமைப்பு தன்னை அரசாக ஆசுவாசப் படுத்திக் கொண்டதின் வீழ்ச்சிதான். நாம் எல்லோரும் புலிகள் என்ற போராளி அமைப்பை எமது தமிழ் தேசிய ராணுவமாக பார்த்து நமக்காக போராடச் சொன்னதன் விளைவால் உருவான வீழ்ச்சிதான். ஒன்று திரளாமல் இதுவரை வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு சாவின் விளிம்புக்கு மக்களும் நம் போரளிகளும் வந்த போது அவசரமாக கை கோர்த்தோமே....அதன் விளைவுதான்...இத்தனை இழப்புகள். எத்தனை தளபதிகள், எத்தனை என் வயசு தோழர்களும் தோழிகளும். அக்காக்கள் அண்ணன்கள். நான் சமாதான காலத்துஇல் சந்தித்த எத்தனை அறிவாளிகள். ஆழுமை மிக்க போராளிகள். அய்யோ.......வெள்ளைக் கொடி ஏந்த வைத்து கொன்றார்களே. குப்பி கடித்தார்களே, எரிந்து மாண்டார்களே, இரசாயங்களில் உடல் வெந்தார்களே....கடைசி நான்கு நாட்களில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகள். பத்தாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் என கணக்கு வைக்கிறார்கள். இன்னமும் ஒளிந்து ஒளீந்து வெளியே வருபவர்களைக் கொன்று புதைக் கிறார்கள். விரும்பியும் விரும்பாமலும் போர் களத்தில் நின்ற எத்தனை பேர் மாண்டு போயிருக்கிறார்கள். போராளிகளையும் போரட்டத்தையும் முப்பது வருடாமாகக் காத்த மக்கள் அதன் பலனை இப்போது கம்பி வேலிகளுக்குள் அனுபவிக்கிறார்கள். நாங்கள் கம்பியூட்டர் முன்னால் இருந்து தலைவரைத் தேடிக் கொண்டிருகிறோம். 

தலைவரும் அவரின் சில தளபதிகளும் போராளிகளும் ஏதோ ஒரு காட்டில் இருக்கக் கூடும். அது இப்போது எதற்க்கு இப்போது ஏன் தலைவரையும் புலிகளையும் தேடிக் கொண்டிருக்கிறோம். திரும்பவும் அவர்களைப் போராடவிட்டு வேடிக்கை பார்க்கவா? ஈழத்தமிழர் பிரச்சனையின் அரசியலை தமிழ் நட்டு மக்களிடம் எடுது சென்று தெளிவூட்ட முடியாத தமிழக தமிழர்கள் தங்கள் சக தமிழர்களின் வீரதில் கிளுகிளுப்புக் கொள்ளாவா? நாம் பேசிக் கொண்டிருக்கும் கணம் வரை அழிவின் துயரின் விழிம்பில் நிற்க்கும் தமிழனை காப்பாற்ற ஐநா தலைமையில் படை அனுப்பி இலங்கையில் சனநாயகத்தை உறுதிப் படுத்தி தமிழர்கள் இனியும் இரத்தம் சிந்தாமல் பாதுகாக்க தமிழகத்தில் ஓட்டு அரசியலுக்காக பிழைப்பு நடத்தும் கட்சி அரசியல் தாண்டிஒன்று படவேண்டும். உலகம் பூராவும் இருக்கும் தமிழர்கள் அணி திரண்டாக வேண்டிய இறுதிக் கணம் இது. உலகத்தால் தடை செய்யப்பட்ட இயக்கம் இல்லை தலைவனைக் கொன்று விட்டதாகவும் சொல்கிறார்கள். அப்படியானால் இனி உலகம் எதற்காக தாமதிக்கிறது. ஈழத் தமிழர்களின் விருப்பதை கேட்குமாறு இன்னும் வீச்சோடு போராட வேண்டாமா. தனக்காக போராடிய இயக்கமும் தலைமையும் முற்றாக அழிந்த போது வீதிக்கு வந்து 2 வருடங்கள் வீட்டுக்குள் போக்கமல் வீதிகளிலேயே இருந்து விடுதலை பெற்ற அல்ஜீரியர்களைப் போல் போராடும் வலுவில் இலங்கையில் உள்ளவர்கள் இல்லை. அவர்கள் அனைவரும் துப்பாக்கி முனைகளில் இருகிறார்கள். அவர்களுக்கு சாப்பாடு போடக்கூட ஆளில்லை. இப்போது வதை முகாமில் இருக்கும் அந்த மக்கள் போராளிகளுக்கு வருசக்கணக்கில் சாப்பாடு போட்டவர்கள். உங்கள் அனைவரையும் வீரம் பேச வைத்தவர்கள். இப்போது அவர்களுக்கு என்ன செய்யப் போக்கிறோம். புலிகள் இருக்கும் வரை பாசிசம் பேசிய சிலதுகள் இப்போது புலிகள் தோற்றதுக்கு என்ன காரணம் என ஆரச்சி நடத்துகிறார்கள். தாங்கள் சொன்னது நடந்து விட்டது என்கிறார்கள். அடேய் ........ போய் வவுனியாவில நிக்கிற சனத்தை பாருங்கடா.....புலிகளை வலிமையாக ஆதரித்தவர்கள் போக முடியாது என்பது யதார்த்தம். நீங்களாவது போய் அவர்களுக்காக காசு சேருங்கள் உதவுங்கள். வணங்கா மண் கப்பலுக்காக சேர்த்த பொருட்களை வவுனியா முகாமில் உள்ள மக்களுக்கு கொடுக்க உலக வல்லரசுகளின் அனுமதியைக் கேளூங்கள். இலங்கையில் அடுத்து நிகழப் போவதுதான் பெரும் கோரம் , அழிவு,கொடுமை இதுவரைதான் நாம் தடுத்து நிறுத்தவில்லை. புலிகள் மக்களை தடுத்து வைதிருக்கிறார்கள் என்றார்கள். இப்போது..? தயவு செய்து அனைவரும் வீதிக்கு வரவேண்டிய கடைசித் தருணம் இது.

 இந்தியாவுக்கு வெளீயே இந்திய விடுதலைக்காக போராட்டம் நடத்திய நேதாஜிதானே தலைவனுக்கு முன்னுதாரணம்.அப்போது இலங்கையில் அடுத்து நிகழப் போகும் அழிவைத் தடுக்க அணிதிரள ஏன் தாமதம். முதலில் முகாம் களில் இருக்கும் 3 லட்சம் தமிழர்கள் அடுத்து ஒட்டு மொத்த ஈழத்தமிழர்கள். மகிந்தவின் அடுத்த அடக்குமுறை தாக்குதல்கள் சிங்களவர்கள் பலரையும் கூட உலகத்தை நோக்கி அவலக் குரல் எழுப்ப வைக்கப் போகிறது. உலகை அழைத்து வருவதற்க்குச் சரியான அரசியல் வேலையைச் செய்வோம். தலைவனைத் தேடாமல் தமிழனைக் காக்க அரசியல் போராட்டம் செய்து உலகை நம் பக்கம் இழுத்து வருவோம்.

Friday, May 01, 2009

மே -3 உலக ஊடக தினம் - சிறீல்ங்காவில் மரணத்தின் நாள்

மே 3 ம் திகதி 2006 ஆம் ஆண்டு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்க்கு அருகில் ஊடக சுதந்திரத்திற்க்கான போராடமும் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களுக்கான அஞ்சலியும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாலை 5.30 மணிக்கு தமிழ் சிங்கள முஸ்லிம் ஊடகவியலாளர்கள் ஏறத்தாள 100 பேர் வரையில் கூடியிருந்தோம். சிவாரம்,நடேசன்,ரிச்சட் டி சொய்சா என இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் சிங்கள பத்திரிகையாளர்களின் படங்கள் வரிசைப் படுத்தப் பட்டிருந்தன. கடைசியாக கொல்லப்பட்டதால் சிவராமின் படம் பெரிதாக வைகப் பட்டிருந்தது.

இரவு 6.45 வரை மெழுகு வர்த்திகளைக் கையில் ஏந்தியபடி பத்திரிகைகாரர்கள் இணைந்திருக்க..சுனந்த தேசபிரிய உள்ளிட்டவர்கள் உரத்துக் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். சனத், மஞ்சுள,சுனந்த,ஹராவ பத்திரிகை நண்பர்களின் சிங்களத்திலான கோஷங்களுக்கிடையில் தமிழ் கோஷங்கள் அடங்கிப் போயிருந்தன. தமிழ் பத்திரிகைக்காரகளின் எண்ணிக்கையும் குறைவுதனே..சிவராம் கொலைக்குப் பின்னர் தமிழ் பத்திரிகையாளர்களில் பெரும்பாலனாவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். மீதி உள்ளவர்கள் தலைமறைவு வாழ்க்கையில் ....

வித்தியாதரன் நான் சிவாகுமார் ருஷாங்கன் ஆகியோர் போராட்டம் முடிந்ததும் பேசிய படி விடைபெற்றோம், ஆளுக்கொரு திசையில். இதற்கிடையில் சுதந்திர ஊடக இயக்கம் எழுதுவதற்க்கும் பேசுவதற்க்குமான உரிமையை வலியுறுத்தி அச்சடிக்கப்பட்ட வாசகங்களுடானான ரீ-சேட்டுகளைக் கொடுத்தார்கள் 150 ரூபா கொடுத்து அவற்றை வாங்கிக் கொண்டோம்.

சிவராம் கொலையின் மர்மத்தை விலக்கி குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் பட வேண்டுமென்பதே பிரதான கோரிக்கை. ஏனெனில் இதுவரை கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்களின் கொலை விசாரணைகளில் அதிக ஆதாரம் சிவராம் கொலையில் கிடைத்திருக்கிறது. புளட் இயக்க உறுப்பினரின் வாகனம்தான் கொலைக்கு பயன்படுத்தப் பட்டது என்பது கண்டுபிடிக்கப் பட்டு வாகனமும் கைப்பற்றப் பட்டது. சிவராமின் கைபேசியை வைத்திருந்த நபரை கண்டுபிடித்திருந்தார்கள்.

சிவாராம் தமிழ்நெற்க்கு விரைவாக செய்தி அனுபுவதற்க்காக பல்வசதி கொண்ட விலையுயர்ந்த கைபேசி வைத்திருந்தார். கொலை செய்தவர்களோடு இருந்த ஒருவருக்கு அந்த கைபேசியில் விருப்பம் இருந்திருக்குப் போல அவர் அந்த கைபேசியை ஆன் செய்து வைத்திருந்தார். சிவராம் இறந்து சில நாட்களில் அவரின் தொலைபேசிக்கு அழைப்பெடுக்கும் போதெல்லாம் அந்த இனிய பாடல் ஒலிக்கும். இதனை பல முறை காவல்துறைக்கு சொன்ன பின்னர் வேறு வழியில்லாமல் அந்த நபரை சில வாரம் கழித்து கைது செய்தார்கள்.

ஆகா இதைவிட போதிய ஆதராங்கள் ஒரு கொலைவிசாரணைக்கு கிடைக்கது என்றாலும் கூட இலங்கை காவல்துறை ஆதாரங்களைத் தேடியது. இந்த சூழலில் சிவாரம் கொலை நடந்து ஒரு வருடத்தின் பின்னர் நாம் போராட்டம் நடத்தினோம்( இப்ப நாலு வருசமாச்சு.. கடதலுக்கு பயன்பட்ட ஜீப் வைத்திருந்தவர் செல்போன் வைத்திருந்தவர் இருவரையும் விடுவித்துவிட்டார்கள் ஆனல் இன்னமும் ஆதாரம் தேடுகிறார்களாம்)

போராடம் முடிந்து எட்டு மணியளவில் வெள்ளவத்தைக்கு வந்து சேர்ந்த போது தொலைபேசி அலறியது. இப்ப 7 மணிக்கு யாழ்ப்பாணம் உதயன் பேப்பருக்குள் புகுந்து சுட்டிருக்கிறார்கள். 2 பேர் சரியாம்( கொல்லப்பட்டார்கள் என்பதன் கொலோக்கியல்) எடிற்றோறியலுக்குள்ளும் புகுந்து சுட்டிருகிறார்கள். பின்புறமாக இருந்த எடிற்றோறீயலுக்குள் போவதற்க்குள் அங்கிருந்தவர்கள் தப்பித்துவிட்டதால் சாவகாசமாக கணணிகளூக்கு சுட்டு விட்டு கொலையாளிகள் கிளம்பிச் சென்றார்கள் என்ற தகவல் எனக்கு சொல்லப்பட்டது.

நிமலராஜன்,நடேசன்,சிவராம் உள்ளீடவர்களின் கொலைகளுக்காவும் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப் பட்டதற்க்காகவும் போராட்டம் செய்து முடித்த ஊடகதினதின் இரவு 7 மணிக்கு கொலை நடக்குது. நடேசன் கொல்லப்பட்டு ஒருவருடத்தில் சிவராம் கொல்லப் பட்டார். சிவாராம் கொலை செய்யப் பட்டு சரியாக ஒரு வருடமும் 4 நாட்களும் ஆன நிலையில் உதயன் பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்து கொலை....

இப்போது இன்னுமோர் ஊடக தினம் வருகிறது.. இலங்கை அரசு போர் வெற்றியின் போதையில் இருக்கும் ஒரு நிலையில் முன்னணி ஊடகவியலாளர்கள் செயற்பாட்டாளர்கள் எல்லாம் நட்டை விட்டு வெளியேறி விட்ட நிலையில் உரத்து ஊடக சுதந்திரம் பற்றி கத்துவதற்க்கு அங்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள்.

ஆனால் மகிந்த அரசே ஏதாவதுவிழா எடுக்கக் கூடும் சிறந்த ஊடகவியலாளருக்கு விருது கொடுக்கக் கூடும். வன்னியில் இருந்து ரூபவாகினிக்கு செய்திகள் வழங்கியவ்ர் இலங்கையில் சிறந்த பத்திரிகையாலாளராக தேர்ந்தெடுகப் படலாம். ஏற்கனவே இலங்கை அரசின் பல பரிசுகாளைப் பெற்ற" லங்கரட்னா" என்ர இலங்கையின் உயரிய விருதுபெற்ற என் . ராம் (இந்து என்ற சென்னை ஆங்கில பத்திரிகை ஆசிரியர்) ஏதும் விருதுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடும்.

இப்போது அங்கே கடந்த இரண்டு வருடத்தில் 60 முதன்மைப் பத்திரிகையாளர்கள் வெளியேறியிருக்கிரார்கள். இவர்களில் பாதிக்கு மேல் சிங்களவர்கள். லசந்த விக்கிரமதுங்க வரை 19 ஊடகப் பணீயாளர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். திசநாயகம் ஜசிதரன், வளர்மதி என சிறையில் அடைக்கப்டிருக்கும். டைக்கபட்டு விடுதலையான விசாரிக்கப்பட்ட கடத்தப்பட்ட தொடர்ந்தும் அச்சுறுத்தப் படும் பத்திரிகையாளர்களின் எண்ணிகை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

சாவை எதிர்கொண்டு நெஞ்சு நிமிர்த்தி நிற்க்கும் என் பத்திரிகைத் துறை தோழர்களூக்கு வாழ்த்துக்கள். நமீதா நெஞ்சு நிமிர்த்தி நிற்க்கும் புகைப்படத்தோடு கிசுகிசுகும் பத்திரிகையாளரும் சேர்த்திதாணெ எண்டு கேட்டு அவர்கள் மனதை புண்படுத்த வேண்டாம். மனிதத்தை தொலைத்துவிடாத பத்திரிகைக்காரனுக்கு.....அவன் கிசு கிசு எழுதுபவனாலும் சரி இந்து நாளிதழில் வேலை செய்பவனாக இருந்தாலும் சரி....ஊடகதினத்தில் உறூதியேற்போம்.