Wednesday, January 31, 2007

முற்றவெளி -

மட்டக்களப்பின் மையப்பகுதி,
'மட்டக்களப்பு மாநகரசபை'என்ற பெரிய பெயர் பலகை,உயர்ந்து நிற்கும் காட்டடம் அதன் அருகே வாவியோரத்து முற்றவெளி, முன்னால் வெபர் மைதானம் அல்லது முற்றவெளி மைதானம்.கோட்டைச் சுவர் இவையனைத்தையும் இராணுவகச் சுருள் முட்கம்பிகளினூடே ஆவலாய்ப் பார்த்தன என் கண்கள் ஆயுதம் தரித்த 3 இராணுவத்தினரது கண்களும் 2 பொரிஸ்காரரது கண்களும் ஆயுதம் வைத்திருக்கும் இன்னுமொரு நபரது கண்களும் சமகாலத்தில் என்னைப் பார்த்தன.இண்டைக்கு இதை பார்க்கும் எனக்கு வயது 25.இன்றைய தேதி ஜூன் 15,2006.



(மட்டக்கள்ப்பு உயர் பதுக்கப்பு வலையம்)


ஒரு நாள் மட்டக்களப்பு முற்றவெளி அலங்கரிக்கப் பட்டிருந்தது. மாலைப் பொழுதிலிருந்தே எக்கச்சக்க கூட்டம். சிறிதரன், மாபி என்கிற சிறீபவன்(மாப்பிளையின் சுருக்கம்) பவுச்சா இன்னும் சிலர் வின்சற் மகளீர் பாடசாலைக்கு அருகில் இருக்கும் மகளிர் விடுதிக்கு முன்பு சீமைப் பனைகளுக்கு கீழே நின்று கொண்டிருந்தனர்.
அன்றைய காலகட்டத்து இளைஞர்களுக்கு இந்தப் பகுதி மிகப் பெரும் பொழுது போக்குப் பிரதேசம்."இண்டைக்கு யாரெல்லம் பாடபோறாங்களாம்" என்று கேட்கும் சிறிதரனுக்கும் வயது 25 தான்.

அது ஒரு பெரிய இசை விழா, ஏ.ஈ.மனோகரன் குரல் மட்டக்களப்பு மையப் பகுதி வரை ஒலிக்கிறது. "மட்டு நகர் மரகத வீணை மீன்பாடும்..... " இலங்கையின் முன்னணி பொப் இசை பாடகர்களும் மெல்லிசைப் பாடகர்களும் பாடிகொண்டிருகிறார்கள்.பொப் பாடல்களுக்கு மட்டக்களப்பு இளைஞர்களின் ஆட்டம் பலமாக இருகிறது.

முற்றவெளி முழுவதும் சரியான கூட்டம். மாநகரசபைப் பகுதி ஒளிவெள்ளத்தில் தெரிகிறது. சறோயினி,மலர்,தேவகி இன்னும் சில பெண்கள் அப்பா அம்மவோடு கோட்டைக்கும் அரச அதிபர் பங்களாவுக்குமிடைப்பட்ட ஆற்றங்கரைப்பகுதியில் உட்காந்திருக்கிறர்கள்.எல்லா இடமும் துள்ளல் பாட்டும் மெல்லிசைப் பட்டும் இரவு 11 மணி தாண்டிக் கேட்டுக் கொண்டிருகிறது.

தா தையத்தைய தா தையத்தைய....... வந்தேன் இராவண மகாராசன்.... தென்மொடிக் கூத்து சத்தம் முத்தவெளியில் இருந்து வருகிறது.

"என்ன கூத்துக்கு போறயா? ஆரு நம்மட கன்னங்குடா சினத்தம்பி அண்ணாவியாரா போடுறாரு?"

"ஓண்டா......"

"மறுகான்ன நானும் வாறன் அவர் போடுற கூத்த பாத்திட்டே இரிக்கலாமெல்லுவா....."
"அவளுகளும் கூத்து பாக்க போயிரிக்களுகள்......நீ அவளுகளப் பாத்து கூத்தாடாமவுட்டா சரி"


(இது இன்றைய கூத்துப் படம் 2003 இல் மட்ட்க்களப்பில் நடந்தது.)

முழுநிலவு நாளில வருசா வருசாம் முத்தவெளியில நடக்கிற கூத்து அதிகம் பிரபலமானது.தென்மோடி வடமோடி 2 வகை கூத்தும் வருசா வருசம் மாறி மாறி நடக்கும்.தர்மபுத்திரன் கூத்தும் இராவணன் கூத்தும் பிரபல்யமானவை விடிய விடிய முற்றவெளி களை கட்டியிருக்கும்.

என்ன....இதெல்லம் எப்ப நடந்திச்சு தெரியுமா? நான் பிறக்கிறதுக்கு முந்தி அதாவது 25 வருசத்துக்கு முந்தி. அப்பாதான் இந்தக் கதையளச் சொன்னார்.அதில இருக்கிற சிறீதரன் என்ர அப்பாதான்.நான் பிறந்த பிறகும் கூட மட்டக்களப்பில கூத்து நடந்ததாம்.90க்கு பிறகுதான் முற்றாக நின்று போய் விட்டது.அதுக்குப் பிறகு இந்தப் பகுதி முழுமையான இரணுவலையமாகப் போய்விட்டது.இந்தியன் ஆமியும் முத்தவெளியில தங்கியிருந்தவனுகள்.இப்ப இலங்கை இரணுவம் இருக்கு.

92 இல் நான் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மாணவனாக சேர்ந்து கொண்டேன்.

"சேர் றில்(உடற் பயிற்சி கண்காட்சி க்கான தயார்ப் படுத்தல்) பழகுறதுக்கு இண்டைக்கு எத்தினை மணிவரைக்கும் முத்தவெளிக்குள்ள விடுவானுகள்".

"காலையில 7 மணியில இருந்து 11 மணிவரைக்கும் "
எனது கேள்விக்கு சுரேசாநந்தம் சேரிடமிருந்து வந்த பதிலிது.

இப்ப நாங்க போவதற்கு அனுமதிக்கப்படும் முற்றவெளி முன்பு டச்சு மற்றும் ஆங்கிலேயர் காலத்து மயானமாக இருந்ததாம்.அருட் தந்தை வெபர் அவர்களின் முயற்சியால் இது பின்னர் மைதானமாக மற்றப் பட்டது இதனால் இதற்கு வெபர் மைதானம் என்று பெயர் சூட்டப் பட்டது. உணமையில ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் முற்றவெளியிலதான் கூத்து நடந்தது.அந்தப் பகுதியை இதுவரை நான் கண்ணால் கூடப் பார்த்தது இல்லை.எங்களுக்கு இது மட்டும்தான் முத்தவெளி.

இதுதான் மட்டக்களப்பு நகரில் இருக்கும் நான்கு பாடசாலைகளுக்கான ஒரே மைதானம்(புனித மிக்கேல் கல்லூரி,மெதடிஸ்த மத்திய கல்லூரி,விசன்ற் மகளிர் உயர்தப் பாடசாலை,புனித சிசிலியா மகளிர் பாடசாலை ஆகியவை அந்த நான்கு பாடசாலைகளுமாகும்) எங்கள் பாடசாலை விளையாட்டுப் போட்டி காலத்தில் மட்டும் இந்த மைதானத்தை முழுமையாக எங்களால் உபயோகப் படுத்த முடியும்.மைதானத்தை சுற்றி இராணுவ பாதுகாப்பு அரண்கள் இருக்கும்.கிட்டத்தட்ட ஒரு இராணுவப் பாடசாலை மாணவர்களைப் போல சூழல் எங்களை மாற்றி விட்டிருக்கும்.

ஆன, அப்ப எங்களுக்கு அது பெரிய பிரச்சனையே அல்ல வின்சன்ட் ,கொன்வெண்ட் பொம்பிளப்பிள்ளையள் வரும் அதுகளும் நாங்களும் ஒரே மைதனத்தில் இருப்பது என்பது ........எவ்வளவு பெரிய நிகழ்வு.நான் மாணவத் தலைவனாக இருக்கையில் மற்ற மாணவர்களை ஒழுங்கு படுத்துறது. உத்தியோக பூர்வத்த தொடர்புகளை வைத்துக் கொள்ளுவது எண்டு வின்சன்ற் ,கொன்வென்ற் பிள்ளையளுக்க அறிமுகமாகிறதுக்கு எடுத்த பிராயத்தனங்கள் எத்தனை நான் மட்டுமில்ல என் சக மாணவ தலைவர்களும் எனக்கு முன்பிருந்தவர்களும் கூட......நாலு பொம்பிளப் பிள்ளையளுக்கு நம்மள தெரிஞ்சா அது நமக்குப் பெருமை எண்டுற காலமது.

வருசத்தில ஒருக்கா வெசாக் பண்டிகை(புத்த பகவான் ஞானம் பெற்ற காலம் இது யுனஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட சர்வதேசப் பண்டிகை) இந்த மைதானத்தில கொண்டாடப் படும் அண்டைக்கு மட்டுதான் நங்கள் இந்தப் பகுதியில் ஒளியூட்டப் பட்ட இரவினைப் பார்க்க முடியும்.

"ஆச்சித்தப்பர லாளிலா பீச்சித்தப்பர லாளிலா ஆச்சித்தப்பர பீச்சித்தப்பர லாளிலாளி லாளிலா...."
சிறிலங்கா இராணுவ இசைகுழுவின் சிங்களப் பைலாப் பாடல்கள் அந்த முத்தவெளியை வியாபித்திருக்கும்.அன்றைக்கு ஒருநாள்தான் இரவில் வெளியில் வருவதற்கு அனுமதி என்பதால் சிங்களப் பாடல்களின் இடையே ஒலிக்கும் தமிழ்படல்களையாவது கேட்போம் என்று ஒரு பெரிய கூட்டம் வரும்.

விளையாடுவதற்கு இராணுவம் அனுமதித்த நாட்களில் இந்த பகுதி முழுமயினையும் பார்ப்பதற்கு ஆர்வப்பட்டு இரணுவப் பகுதிகளுக்குள் ஒரு நாள் உள்நுழைந்தோம்.துப்பாக்கி முனையில் ஒருமணி நேரம் வைத்திருந்துவிட்டு பின்னர் ஆசிரியர் முன்னால் எங்களை விடுவித்தனர் அதுவும் தண்ணிகுடிக்க வந்தம் தெரியாமல் வந்து விட்டோம் என்று சொன்ன பிறகு.

இலங்கை இராணுவத்தின் மட்டக்களப்பு தலைமையகம் இதுதான். எமது முத்தவெளியில்தான் இராணுவ உலங்கு வானூர்திகள் தரையிறங்கும்.இராணுவத்திற்கு பயிற்சிகளும் இந்த மைதானத்தில் வைத்து கொடுக்கப்படும்.
பெண்கள் பாடசாலை மாணவிகள் பயிற்சியில் ஈடுபடும் சமயங்களில் பெரும்பாலும் ஆண்கள் பாடசாலை மாணவர்களை உள்ளே விடுவதில்லை.இந்தப் பொழுதுகளில் அரைக் காற்சட்டை இராணுவத்தினர் மைதனத்தில் நிறைந்திருப்பர்.அவர்கள் செய்யும் பல சேட்டைகளை என் தங்கைகள் சொல்லக் கேட்டிருகிறேன்.

அப்போது என்னோடு படித்த ஒரு நண்பனொருவனுக்கு இதெல்லம் பார்க்கும் போது ஆத்திரமாதிரமாக வரும்.அவனுக்கு மட்டுமல்ல நாங்களும் இராணுவத்தை திட்டிகொள்ளாத நாட்கள் குறைவுதான்.மட்டக்களப்பின் மிக அழகான பகுதியொன்றை மயானமாக்கிவிட்டிருக்கும் இராணுவம் எங்களுக்கு பயங்கரமாகவே தெரிந்தனர்.

"இவனுகளை இங்கயிருந்து விரட்டணும்.நம்மட மைதானத்தில விளையாட நம்மள வுடுறதுக்கு அவனிட்ட கையேந்தோனுமாம் நிங்க போய் இளிச்சிக் கொண்டு நில்லுங்க.....அவனுகள் என்ன சோக்கா நம்மட இடத்துல விளையாடுறானுகள்"

இரணுவத்தினர் கிறீக்கற் உதைப்பந்தாட்டம், கூடைபந்தாட்டமெல்லம் வேளையாடுறதை மைதானத்தின் கம்பி வேலிகளுக்கு வெளியே இருந்து பார்க்கும் எங்களுக்கு கோவம் வரும்.அவன் இதையெல்லம் பார்த்து கொதித்துப் போவான்.

அந்த நண்பன் 1998 இல் படுவான்கரைக்குப் போனான். சமதான பேச்சுவார்த்தக் காலத்தில் அவனை கொக்கட்டிச்சோலையில் சந்திதேன். விடுதலைப் புலிகள் இயக்கதில் இருப்பதாக சொன்னான்.அவனை சந்த்தித்துவிட்டு வரும் போது என்னை கூட்டிச் சென்ற இன்னுமொரு நண்பன் சொன்னான்
"இவன் இப்ப ஆட்லறி பிரிவில இரிக்காண்டா............."

இப்போது 2006 இல் நிலமை இன்னும் மோசம் இந்தப் பகுதிக்கு அவசரத் தேவைக்கு மட்டும் என் நண்பர்கள் போய் வருவதாகச் சொன்னர்கள்.என்னையும் சும்மா போகத்தேவையில்லை என்றார்கள். அஞ்சல் அலுவலகம்,மெத்டிஸ்ட் ஆலாயம்,வில்லியம் ஓல்ட் மண்டபம்,மகளிர் விடுதி, வின்சன்ற் பாடசாலை இவற்றுக்கு போபவர்கள் மட்டும் போய்வருகிறார்கள்.முன்புபோல் சீமைப் பனைகளுக்கு கீழ் இராணுவம் விளையாடுவதை வேடிக்கை பார்க்கும் இளைஞர்களைக் கூடக் காணவில்லை.(கிளைவிடும் பனைமரமே சீமை பனைகள் இவை பனங்காய் போல ஒருவகை காய்களை காய்க்கும். ஒரு சில இடங்களில் மட்டும் இருக்கும் அரிய வகை இனம்)

துப்பாக்கி ஏந்திய அவர்களின் கண்கள் தொடர்ந்தும் என்னை நோக்கியே இருந்தன நண்பன் அவசரப் படுத்தினான் டேய் அவனுகள் உன்னப் பாக்கிறானுகள். நீ புது ஆள் பிரச்சனை வாரதுக்குள்ள கிளம்பணுண்டா.

சரியென்று ஹாயியார் ஹொட்டலுக்கு போவதற்காக வண்டியைத்திருப்பினோம்....

பெரியதொரு வெடியோசை ...

ஒரு பதட்டம்.....

ஹாயியார் கடைக்குள் நாம் ....

இன்னுமோரு சத்தம்......

பதட்டம் கூடியது.......

நண்பன் சொன்னான் படுவங்கரையில் இருந்து ஆட்லெறி வருகுது. முத்தவெளிக்கு பின்னால விழுந்திரிக்கலாம் இவனுகளுக்கு எதும் சேதமெண்டால் சிக்கல்.

என் பழைய நண்பண் எனக்கு நம்பிக்கை தருவதற்க்காக இதை அடித்திருக்க கூடுமோ....
என் மனது சொல்லியது. . .

***

(படுவான்கரை மாட்டக்களப்பு ஆற்றின் மேற்க்கு பகுதி இங்கு சூரியன் படுவதால்(மறைவதால்) இந்தப் பெயர் வந்தது கிழக்கு பகுதியில் சூரியன் எழுந்து(உதிப்பது) வருவதால் மட்ட்க்கள்ப்பு நகரம் இருக்கும் பகுதிக்கு எழுவான்கரையென்று பெயர்.படுவான்கரை முழுவதும் புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ளது.)

Wednesday, January 24, 2007

பெண்களின் சேலை எத்தினை அழகானது தெரியுமா?

"ஒருகையில் கைப் பையும் மறுகையை பேருந்தில் பிடிப்பதுமாக நான் இருக்கையில் சேலை கட்டச் சொல்லும் உங்கள் காலாச்சாரக் காவலர்கள் எங்கள் இடுப்பில் தேடுவார்கள் நீங்கள் சொல்லும் தமிழையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும்.."

ஒரு வலைத்தளம் இருக்கு.அதில் அவர் எழுறதும் அதுக்கு சிலர் போடுகிற பின்னூட்டமும் எரிச்சலூட்டுபவைகளாக இருக்கிறது என்று எனது நண்பர் ஒருவர் சொன்னார்.சரியெண்டு நானும் போய் பார்த்தன்.பின்னூட்டமும் போட்டன். சாதி,திராவிடம்,தலித் என்ற விவாதத்துக்குரிய பரபரப்புக்கு பஞ்சமில்லாத தலப்புகளின் வரிசையில் இப்ப பெண்கள் பஞ்சாபி வகையறாக்களைப் போடுறது கலாச்சார(?) வீழ்ச்சி எண்டுறார்.

உனமையிலையே இது பெரும் காலாச்சார வீழ்ச்சிதான் பெண்கள் என்பவர்கள் எங்கள் இனத்தின் கலாசாரக் காவலர்கள்.சினிமாவில் துகிலுரிந்து எங்கள் கலாசாரக் கட்டுமானங்களய் சீரழிப்பவர்களும் அவர்களே.டேய் பொட்டய்.. .என்று உச்சத் தொனியில் கத்தி பெண்கள் அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு என்ற அணிகலன்களுக்கு உரித்துடையவர்கள் என்பதை உலகறியச் செய்து எமது பாரம் பரியத்தைக் கலாச்சாரத்தப் பாதுக்காப்பவர்கள் நமது ஆண்கள்.

இப்போது சென்னையிலும் காவல் துறை முதற்கொண்டு நமது துணைவேந்தர் விஸ்வநாதன்(அண்ணா பல்கலைக்கழகம்) ஈறாக பெண்களின் உடை விசயத்தில் அக்கறை செலுத்தி எமது உயர்ந்த கலாச்சாரத்தை காக்கும் ஆண்களுக்கு எமது ஒத்துழைப்பை குறைந்த பட்சம் இது போன்ற பதிவுகளிலாவது குடுப்பதுதானே நியாயம்.

இந்த விசயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழினத்துக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டதாகவே தெரிகிறது. பெண் போராளிகளுக்கு ஜீன்ஸ்,சேர்ட் போட்டு விட்டு அல்லது போடச் சொல்லி தமிழரின் கலாச்சாரத்தை கெடுத்து பிரபாகரன் துரோகம் இழைத்துவிட்டார் குறந்த பட்சம் அரசியல் பணியில் உள்ள போராளிகளையாவது சேலைகட்டச் சொல்லியிருக்கலாம். ம்...என்ன செய்வது அவர்களும் நீங்கள் சொன்ன பஞ்சாபியையோ அல்லது ஆண்கள் அணியும் ஆடைகளையோதான் அணிகிறார்கள்.

போர்புரிதலுக்கு இதுதான் வசதியென்று தலைவர் நினைத்ததினாலேயே பெண்களுக்கு இந்த உடை வந்ததென்று புலிகளின்மகளிர்அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி சொல்கிறார்.என்ன மடமையிது மதுரையை ஆட்சி செய்த மீனாட்சி,பல சமஸ்தானங்களை ஆண்ட நாச்சியார்கள் எல்லம் சேலைதானே அணிந்தார்கள் என்பது ஏன் இவர்களுக்கு புரியவில்லை.யாராவது இது குறித்து கூட பதிவு போடலாம்.

என்னதான் இத்தாலியில பிறந்தாலும் எல்லா இடமும் சேலை அணிந்தே செல்லும் சோனியா காந்தியை இவர்களுகெல்லாம் உதாரணம் காட்ட வேண்டும்.அண்மையில் அவர் பெல்ஜியம் போன போது கூட அந்த குளிரிலும் சேலயணிந்தே கோட் போட்டிருந்தார் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அட பவிகளா உங்கள் கலாச்சாரம் அந்த அம்மவின் சகிப்புதன்மையினை எவ்வளவுதூரம் சோதிக்குது

கடந்த வருடத்தில் ஒரு சர்ச்சை வந்தது செயலலிதா அணிவது சேலையா இல்லையா என்று. இன்றைய சட்டசபையாக இருந்தால் ஒரு தனி விவாதமே நடந்திருக்கும் (கணிதத்தில் 100 புள்ளியா 98 புள்ளியா என்பதெல்லாம் விவாதமாகும் போது இது எம்மாம் பெரிய பிரச்சனை).செயலலிதா அணிவது செலையில்லை யென்றால் உடனே அதிமுக உறுபினர்கள் கலைஞ்சர் பொண்ணு கனிமொழி என்ன அணிகிறார் என்ற அறிவு பூர்வமான கேள்வியை உணர்வுகள் நண்பர் கேட்டது போல சட்டசபையிலேயே கேட்டுவிடுவார்கள். தமிழகப் பத்திரிகைகளும் கலாச்சாரத்தின் பெயரால் 1 மாதம் நல்ல விற்பனையைப் பார்த்திருக்கும்.

ம்.....இதையெல்லம் விட எங்கள் ஆண்கள் படும் வேதனை யாருக்கு தெரியப் போகுது. எங்கள் கல்லூரியில் ஒரு விழா அடக்கும் பாரம்பரிய தினம் எண்டு அதுக்குப் பெயர்(அது பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்) அண்டைக்கு மட்டும்தான் பெண்கள் சேலை கட்டி வருவார்கள்.எல்லப் பெடியளும் அதை பற்றியே பேசுவார்கள். அவளின் இடுப்பு சின்னது இவளுக்கு லேசா தொப்பை எண்டு தொடங்கி இன்னும் இன்னும் பலவற்றையெல்லம் பேசுவர்கள்.

இப்பிடி தமிழ் படத்தில பாலியல் வன்புணர்வுக்காட்சிகளில் துகிலுரியவும் பாடல்களின் கதாநாயகன் இழுக்கவும் பயன் படும் பெண்களின் சேலை எத்தினை அழகானது தெரியுமா? ம்...சேலை உண்மையிலேயே செக்ஸியும் அழகும்தாண்டா என் நண்பர்கள் சொல்லும் வார்த்தைகள் இவை.நானும் என்ன விதிவில்க்கா என்னையும் சேர்த்துதான். எல்லா அலுவலகங்களும் கல்லூரிகளும் பெண்கள் கட்டாயம் சேலை அணிய வேண்டுமென்று உத்தரவு போட்டால். என் நிறைய நண்பர்கள் பேருந்துக்காக காத்திருக்க ஆரம்பித்து விடுவார்கள்.

என்னையா.....கேட்க இனிமையாக இருகிறதா? கலாச்சாரத்தினை பெண்களின் சேலைகளுக்குள் முடிவதற்கு இனியும் நாம் வெட்க்கப்படாதிருப்பது எத்தன பெரிய .......தனம். என் தோழியொருத்தி என்றைக்கோ சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

"ஒருகையில் கைப் பையும் மறுகையை பேருந்தில் பிடிப்பதுமாக நான் இருக்கையில் சேலை கட்டச் சொல்லும் உங்கள் காலாச்சாரக் காவலர்கள் எங்கள் இடுப்பில் தேடுவார்கள் நீங்கள் சொல்லும் தமிழையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும்...."

நண்பர்களே ஒரு ஆணாக உங்கள் நண்பனாக கேட்கிறேன் கலாச்சாரத்த தனியே பெண்களோடு முடிச்சுப் போடாதீர்கள். இது என்னை அடையாளப் படுத்துவற்காக சொல்லுகிற விசயமல்ல என் தங்கைகளும் தோழிகளும் எனக்கு புரிய வைத்தவைகள். ஏனெனில் நானும் சேலை கட்டுவதுதான் கலாச்சாரப் பாதுகாப்பு என்று நினைத்தவன்தான். எமது வளர்ப்பும் சூழலும் எங்களை அப்படி நினைக்க வைத்தன.

மாற்றம் ஒன்றே மாறாதது- கார்ல் மார்க்ஸ்.

Tuesday, January 23, 2007

வானம் ஏன் மேலே போனது-சிறுகதைத்தொகுப்பு

பிரபஞ்சத்தின் பல சூனியப் பிரதேசங்களுக்கு
நான் சொந்தக்காரியாய் இருந்தேன்.

வாயில்லாக் காற்றுடன் பேசினேன்.
நட்சத்திரக்கூட்டத்தின் ஏணி தொலைத்தேன்
காற்றில் தடம் பதித்தேன்
காற்றில் கிறுக்கினேன்
காற்றுண்டேன்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
பொதுவாய்ப் பெருவெளியில்
நான் மட்டும் நான் மட்டும்
தனிமையை சிறகு விரித்தேன்
அலைந்தேன்..

என்று சொல்லும் விஜயலட்சுமி சேகர் மட்டக்களப்பு சூரியா பெண்கள் அமைப்பினைச் சேர்ந்தவர்.அண்மையில் வெளிவந்த "வானம் ஏன் மேலே போனது" என்ற அவரது சிறுகதைத் தொகுப்பில் அவர் பேசும் மொழியிது.

ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் உணர்வுகள் கொலைசெய்யப் படும் பெண்களின் வலிகளை சாதாரண மொழி நடையில் சொல்லியிருகிறார்.சிறுகதைகளில் மட்டக்களப்பு பேச்சு வழக்கும் சூழலும் நிறையவே தெரிகிறது.

ஒவ்வொரு கதயிலும் சாதாரண பெண்களின் வலி தெரிகிறது.ஒவ்வொரு வீட்டுகுள்ளும் பெண்களுகெதிராய் நடக்கும் வன்கொடுமைகளை சாதரண வாசகனுக்கும் புரியும் படியான இலகுவான சொல்லாடலும் யதார்த்தத்தனமும் கதைகளில் தெரிகிறது.கிழக்கில் இருந்து வரும் குறைந்தளவான பெண் எழுத்துகளில் விஜயலட்சுமியின் எழுத்துகளும் இப்போது சேர்ந்துள்ளன.

'எண்ணை வற்றிய குப்பி விளக்கின் மங்கிய ஒளியில் இவளது முகத்தில் அப்பிக் கிடக்கும் வேதனை, விளக்கிற்கு மட்டுமே புரிகிறது.'
என்ற வார்த்தயில் உள்ள கனதியை எல்லாக் கதைகளிலும் காண முடிகிறது. இந்தக் கதைகளுக்கு என்னால் எந்த விமர்சனமும் சொல்ல முடியவில்லை வாசிக்க மட்டுமே முடிந்தது. ஒரு வகை நெருடலும் வலியும் மட்டுமே எனக்கு இந்த கதைகளை வாசித்த போது மீதியாய் வந்தன.

"நிச்சயமாக அசோக்குமார்,பாலு மகேந்திரா,மணிரத்தினம் எவரது கமராக்களுக்கும் அவளது முகத்தில் தெரியும் கவலையின் கோடுகளைக் காட்டும் திறமை இருக்காது" என்ற விஜயலட்சுமியின் வரிகளினையே என்னாலும் உங்களிடம் இந்தச் சிறுகதைகள் குறித்து சொல்ல முடியும்.

வெளியீடு: பனிக்குடம் பதிப்பகம்,சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்.
மின்னஞ்சல்:panikkudam@gmail.com
விலை:ரூ.30

Friday, January 05, 2007

திறந்த வெளிச்சிறைச்சாலை..விகடன் கட்டுரை

யாழ்ப்பணம் திறந்த வெளிச்சிறைச்சாலை.......

யாழ்ப் பாணம் பற்றிய எனது கட்டுரை ஒன்று இந்தவார ஆனந்தவிகடனில் வெளிவந்துள்ளது.இன்றைய யாழ்ப்பாணச் சூழல் பற்றிய நேரடிப் பதிவாக அங்குள்ளவர்களோடு பேசி இந்த கட்டுரையை எழுதினேன்.

http://www.vikatan.com

இந்தப் பக்கதில் விகடன் கட்டுரைகளைப் பார்க்க முடியும்.

சில படங்களை மட்டும் உங்களுக்கு தருகிறேன்.


யாழ் நகரப் ப்குதியில் கெடுபிடியான இராணுவப் படையினன்


யாழ் பேருந்து நிலையம் அருகே இருக்கும் இராணுவ உயர் பாதுகாபு வலையம்.இதனைச் சூழவுள்ள 3 பிரதான வீதிகளும் பல வீதிகளும் மூடப் பட்டுள்ளன. யாழ் வைத்திய சாலை இந்த உயர் பாதுகப்பு வலையத்தின் எல்லையிலேயே உள்ளது. இப்போது பேருந்து தரிப்பிடம் இப்பகுதியில் இருந்து மாற்றப் பட்டுள்ளது.


இது கட்ந்த வருடத்தில் என்னால் எடுக்கப் பட்ட படம் அரியாலைப் பகுதியில் உள்ள இராணுவ உயர் பாதுகாப்பு வலையப் பிரதேசம். அரியாலை யாழ் மாநகரசபையின் எல்லைப் பகுதி. 2000 த்தில் விடுதலைப் புலிகளால் கைபற்றப் பட்டு இந்திய அழுத்தத்தினால் இலங்கை இராணுவ வசமானது.

Tuesday, January 02, 2007

சங்கத்தானை இரயில் நிலையம்.

சங்கத்தானை இரயில் நிலையத்தின் பின்பகுதித் தோற்றமிது. அ 9 சாலை பின்பகுதியில் தெரிகிறது.சாவகச்சேரி சந்தியிலிருந்து தொலைவில் இந்த இரயில் நிலையம் உள்ளது. இதற்க்கு முன்பாகவே சங்கத்தானை இந்து கல்லூரியும் உள்ளது. 200 தொலைவில் சாவகச்சேரி வைத்திய சாஅலை உள்ளது.

இதனை தவறுதலாக சாவகச்சேரி இரயில் நிலையம் என்று குறிப்பிட்டு விட்டேன். அதனைத் திருத்திய அனானிக்கு நன்றி.



ஒருகாலத்தில் யாழ்தேவி புகையிரதம் தரித்து நின்ற பகுதி இன்று இராணுவ பாதுகாப்பு அரண்.
கடந்த வருடத்தில் மட்டும் இந்தப் பகுதியில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 வதுக்கும் அதிகம்
இந்தப் பகுதியில் கடந்த வருடத்தில் மட்டும் குறைந்தது 3 கிளைமோராவது வெடித்திருக்கும்.

Monday, January 01, 2007

நிர்வாண ராணுவம்!

ஆண்குறிகளோடு அலையிற ராணுவம் எங்களுக்கு புதிசில்லை. சண்டை கோரமா நடக்கிற இந்த 25 வருசத்தில துப்பாக்கிகளை பிடிக்க மறக்கிற சந்தர்ப்பத்திலையும் தங்கடை ஆண்குறிகளை தூக்கிப்பிடிச்சுக்கொண்டு என்ர தோழிகளையும் அக்காக்களையும் தங்கைகளையும் அம்மாக்களையும் தேடி அலையும் கேவல ராணுவத்தை வீதியெங்கும் பாக்கிறன்.

நேற்று மன்னார் வங்காலையில நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இண்டைக்கு இந்தப் பதிவை நான் இட்டுக்கொண்டிருக்கிற இந்தக் கணத்தில எங்கோ தமிழர் தாயகத்தின் ஏதோ ஒரு மூலையில் வெளித்தெரியாமல் வேட்டையாடப்படும் என் சக மனிதனின் என் சகோதரியின் கதறல் ஒலி என் காதுகளுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. கோணேஸ்வரி, கிருசாந்தி, சாராதாம்பாள், தர்சினி, என்று நீளும் பட்டியல் மட்டுமே நமக்கு தெரியும். வேட்டையாடப்பட்டு தன் ஆண்குறி அடங்கியும் கோரமடங்காமல், இரத்தம் பார்க்கும் ராணுவ வேட்டைகளின் கொல்லப்பட்ட ஒரு சிலரைப் பற்றியே நாம் அறிந்திருக்கிறோம். தினம் தினம் உடலில் உயிர் இருந்தாலும் நிர்வாணமாய் அலையும் ராணுவப் பசிக்கு இரையான எத்தனை என் தோழிகளை அவர்களின் உணர்வுகளை இன்னும் எத்தனை நாள் சுமக்க போகிறோம்.

ஆண்குறியோடு அலையும் ராணுவத்திற்குள் பிரிவுகள் இல்லை. உலகின் எல்லா ஆக்கிரமிப்பு ராணுவத்திற்கும் தங்கள் பசியை அடக்க கிடைத்த ஒரே வழி பெண்கள்.

80 களின் இறுதிப் பகுதிகளில் ஒரு நாள் என் காது கேட்க என் அம்மாவிடம் பக்கத்து வீட்டு அக்கா கதறியபடி ஏதோ சொல்லி கொண்டிருந்தார். அதற்கு சற்று முன்னர் தான் இந்திய ராணுவத்தால் 3 மணி நேரமாய் என் கிராமம் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. அண்டைக்கு ஒலிக்க தொடங்கின அந்த கதறல் குரல் இன்னும் எனக்குள்ளை ஒலிக்குது.

சமாதானம் சமாதானம் எண்டு நாலு வருசம் ஆடின நாடகத்தில பார்வையாளராய் இருந்த எங்கடை சனம் எல்லாம் இப்ப மரணத்தின்ர பிரதான பங்காளியாய் மாறிப்போயிருக்கு. ஆனா அந்த நாடகத்தில நடிச்சவைக்கு இருக்கிற பாதுகாப்பு நாடகத்தை பாத்துக்கொண்டிருந்த சனத்துக்கு இல்லை.நாடகம் நடக்கேக்கை வெறியோடை பாத்துக்கொண்டிருந்த ராணுவம் இப்ப வேட்டையாடத்தொடங்கிட்டுது. வேட்டைக்காரனுக்கு இப்ப வேட்டை இலக்கில்லை. கைக்குள்ளை அகப்படுற எல்லாத் தமிழரின் இரத்தங்களையும் பெண்களின் உடல்களையும் ஆண்குறி ஏந்தி திரியும் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் ருசிக்கத் தொடங்கி விட்டன.நாலு வருச சமாதான காலத்தில வீதியில போற எங்கடை பொம்பிளைப்பிள்ளையளை நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு ஆண்குறி பிடித்தபடி பாத்தக்கொண்டிருந்த 'வெறிலங்கா'ப்படைகள் மன்னிக்க வேணும் "சிறிலங்கா"ப் படைகள் இப்ப தங்கள் ஆண்குறி அடக்க ஆணுறைகள் சகிதம் வேட்டையாட புறப்பட்டு விட்டன.

விடுதலைப்புலிகள் பலம் வாய்ந்த பெண்கள் படையணிகளை உலகம் வியக்க உருவாக்கினர். வேட்டையாடும் வெறிகார ராணுவத்தை அடக்க பல வெற்றி சமர்களை நடத்தியது. ஆனாலும் இண்டைக்கும் இந்தக்கணத்திலையும் குருதிக்குள் உறைந்து போன என் அக்காளின் கோரப் பிணத்தை பார்க்கும் துரதிஸ்டம்...
என்னைக் கேட்டால் ஆயுதம் தூக்கின என்ர அக்காக்களே, தோழிகளே, தங்கச்சிகளே, முடிஞ்சால் அடியுங்கோ.. தயவு செய்து ஆண்குறியோடு அலையும் ராணுவ வெறியர்களுக்கு எங்கடை பெண்களை தேடியலைய நேரம் குடுக்காதேங்கோ..வன்னிக்குள் எல்லோரும் போய் ஒழிய முடியாத யதார்த்த சூழலில் ஓநாய்களின் காவலில் நாங்கள் வாழுகிறோம். அவர்களுக்கு பசிக்கிற போதெல்லாம் எங்கள் பெண்களை புசிக்கலாம். குழந்தைகளின் இளம் குருதி குடித்து கூத்தாடலாம். இது கோரம்..இதை பேசுகிற போது கோவத்தையும் விரக்தியையும் தவிர எதுவும் செய்ய முடியாத வெறும் கையாலாகததனம் மட்டுமே மிஞ்சி நிக்கிறது.. .

எங்கள் இணைத்தளங்களினதும் பத்திரிகைகளினதும் இடங்களை நிரப்ப , இனியும் இந்தப் படங்கள் வேண்டாம். ஐயோ.. என நாங்கள் வைக்கும் ஒப்பாரி உலகத்திற்கு கேட்பதற்கான வாய்ப்புக்கள் எவ்வளவு இருக்கெண்டு எனக்கு தெரியேல்லை. ஒரு வேளை உலகில் நடக்கும் இந்தக் கோரங்களைப் போன்ற கோரங்களுக்குள் என் வீட்டுக் கொல்லைப் புறத்திலிருந்து வீறிட்டெழும் அலறலும் அடங்கிப் போகலாம்.

இதுக்குமேல பேச எதுவுமில்லை..

இன்னும் எத்தனை நாள் என்ரை பேனாவுக்குள்ளை இரத்தம் ஊத்தி எழுதப்போறனோ தெரியேல்லை..

இவ்வளவு நேரம் எழுதினது வார்த்தையில்லை..
என்ர வலி இது எங்கடை இனத்தின்ர வலி..


ஜனாதிபதி மகிந்தவுக்கு:தயவு செய்து உங்கடை ராணுவத்திற்கு ஆண்குறி அடக்க ஏதாவது வழி செய்யுங்கோ..இரணுவத்தினரை மட்டும் இதுக்கு குறை சொல்லேலாது.. அவையள் கூலிக்கு மாரடிக்கினம். புலிகள் மாதிரி போராளிகள் இல்லை. யாழ்ப்பாணத்தில இருந்து தன்ர ஊருக்கு போகேலாமல் தன்ர மனிசியை பாக்கேலாமல் விரக்தியோடை இருக்கிறவைக்கு ஆண்குறி அடக்கிறதுக்கு என்ர உறவுகளை பலியாக்க வேணாம். எதுக்கெல்லாமோ பாதுகாப்பு கவுண்சிலையோ சர்வ கட்சி மாநாட்டையோ கூட்டுறனிங்கள் இதுக்குமொருக்கா கூட்டிப்பாருங்கோ.. கொழும்பில கூத்தாடுற மேற்தட்டு வர்க்கம் பாதுகாப்பா தாகம் தணிக்குது. அங்கை பாதுகாப்பு படைக்கு வெறியெடுக்குது. அவங்களுக்கும் தாகம் தணிக்க ஒரு அமைச்சை உருவாக்கி அமைச்சரையும் போட்டு ஏதேனும் செய்யுங்கோ.. தயவு செய்து உங்களின்ர கொண்டாட்டங்களுக்கு எங்களை பலியெடுக்காதைங்கோ..