Thursday, February 27, 2014

ஜக்கி வாசுதேவும் சீக்கிய இராணூவச் சிப்பாயும் சிவராத்திரியும்

ராத்திரி...சிவ ராத்திரி...ஜக்கி வாசுதேவ் ஆட்டம் பாட்டம் சூப்பர்...ஊருல தூங்கமல் கொட்டக் கொட்ட கோயிலடியில் விழித்திருந்த போது நமெக்கெல்லாம் இப்படிக் குத்தாட்டம் போட்டால் தூக்கம் போகும் என்ற எண்ணம் வராமல் போச்சே...பல தடவை நம்மால் பார்க்க அரிதான இரவுப் பொழுதை கோயிலிலும் தெருவிலும் கழிக்க இந்த சிவராத்திரி வழிவிட்டிருக்கிறது. மற்ற நேரங்களில் இரவில் வெளியே  வந்தால் துப்பாக்கியால் சுடப்படுவீர்கள் அல்லது காணாமல் போவீர்கள். அரிதாக சில வேளை சிறிய எச்சரிக்கையுடன் வீடு வந்து சேரலாம். பல காதல்களைச் சேர்த்ததும் பிரித்ததும் இந்த சிவராத்திரிதான். விடலைப் பருவத்தில் ஆண்கள் பாடசாலை மாணவர்களான எங்களுக்கு இதைவிட அற்புதமான வேறெந்த தருணமும் வாய்க்க வாய்ப்பிலை.
           இரவில் கோயிலில் எங்களுக்கிருந்த மற்றுமொரு என்ரடெயின்ற்மென்ற் டெக் டிவியில் போடும், நாங்கள் வருடா வருடம் பார்த்து சலிக்கும் திருவிளையாடல்,சரஸ்வதி சபதம் இவற்றுடன் ஏதோவொரு புது சாமி படம். நான் 2ம் வகுப்பில் இருந்து சிவராத்திரி விழிக்கிறேன்(கடவுள் நம்பிக்கை இல்லாது போன இன்றைய காலம் வரை சிவராத்திரிக்கு நித்திரை விழிக்கிறேன் )அதற்க்கு ஒரு முட்டாள் காரணமுண்டு. மட்டக்களப்பு ஏறாவூரில் நான் 2 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் ஊரில் இந்திய ராணுவம் இருந்தது. அந்த  சிவராத்திரி இரவில் அந்த சிறிய நாக தாம்பிரான் கோயிலில் தேவாரப் போட்டி நடந்தது அதில் நானும் தேவராம் படி பரிசும் பெற்றேன் அந்த உற்சாகத்தில் பெரியவர்களோடு சேர்ந்து இரவிரவாக படம் பார்த்து நானும் விழித்திருந்தேன். மற்ற சிறுவர்கள் நித்திரை. அடுத்த நாள் விடிந்த போது எங்கோ இரண்டு இந்திய ராணுவ படையினரை இயக்கம் போட்டு விட்டது.  புத்த விகாரையான பன்சாலையில் முகாமிட்டிருந்த இந்திய ரணுவத்தினர் வீதிகளை மறித்தனர்.  வந்த அத்தனை பேரையும் பொல்லுகளால் தடிகளால் திருக்கை வாலால் அடித்தனர். ஆனால் எனோ தெரியவில்லை அவர்கள் என் அப்பாவை மட்டும் அடிக்காமல் அலுவலகம் செல்ல அனுமதித்தனர். அது முதல் எல்லோரும் என்னிடம் சொன்னார்கள் “ நீ சிவராத்திரி முழிச்சதாலதான் இந்தியன் ஆமிகாரன் அப்பாவை அடிக்காமல் விட்டவங்கள் என்று” அதை நான் பல காலம் நம்பினேன்.ஒவ்வொரு சிவராத்திரியும் விழித்திருக்க ஆரம்பித்தேன்.அது காலப் போக்கில் எனக்கு சிவராத்திரி மேல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பை இன்று வரை ஏற்படுத்தியிருக்கிறது.
            இன்னொன்று எனக்கு சிவன் கரெக்டர் மீது மிகுந்த விருப்பும் உண்டு. ஆனால் அப்பாவை விட்டதற்க்கு வேறு காரணங்களும் இருக்க கூடும். ஒன்று அப்பா அப்போது அகதிகளுக்கான அரசின் நிவாரண ரேசன் பொருட்களை விநியோகிக்கும் அத்தியாவசிய பணிகளில் இருந்தது மற்றொன்று ஒல்லியான அப்பாவின் தோற்றம். ஆனாலும் இன்றய இந்த இராவில் தலைப்பாகை கட்டி ஜக்கி வாசுதேவின் ஆட்டம், 25 வருடங்களின் முன்னர் தலப்பாகை கட்டிய  சீக்கிய வீரனையும் சிவராத்திரியையும் நினைக்க வைத்தது.. மஸ்த்து மஸ்த்து மஸ்த்து கலண்டர்.... என  எதையோ இந்தியில் பாடியபாடி கோவையில் ஜக்கியின் சிவராத்திரியில் இதை எழுதி முடிக்கும் இந்த நொடியில் பாடிக் கொண்டிருக்கிறார்கள்....