Thursday, October 25, 2007

நிர்வாண இராணுவம்..

ஆண்குறிகளோடு அலையிற ராணுவம் எங்களுக்கு புதிசில்லை. சண்டை கோரமா நடக்கிற இந்த 25 வருசத்தில துப்பாக்கிகளை பிடிக்க மறக்கிற சந்தர்ப்பத்திலையும் தங்கடை ஆண்குறிகளை தூக்கிப்பிடிச்சுக்கொண்டு என்ர தோழிகளையும் அக்காக்களையும் தங்கைகளையும் அம்மாக்களையும் தேடி அலையும் கேவல ராணுவத்தை வீதியெங்கும் பாக்கிறன்.

நேற்று மன்னார் வங்காலையில நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இண்டைக்கு இந்தப் பதிவை நான் இட்டுக்கொண்டிருக்கிற இந்தக் கணத்தில எங்கோ தமிழர் தாயகத்தின் ஏதோ ஒரு மூலையில் வெளித்தெரியாமல் வேட்டையாடப்படும் என் சக மனிதனின் என் சகோதரியின் கதறல் ஒலி என் காதுகளுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. கோணேஸ்வரி, கிருசாந்தி, சாராதாம்பாள், தர்சினி, என்று நீளும் பட்டியல் மட்டுமே நமக்கு தெரியும். வேட்டையாடப்பட்டு தன் ஆண்குறி அடங்கியும் கோரமடங்காமல், இரத்தம் பார்க்கும் ராணுவ வேட்டைகளின் கொல்லப்பட்ட ஒரு சிலரைப் பற்றியே நாம் அறிந்திருக்கிறோம். தினம் தினம் உடலில் உயிர் இருந்தாலும் நிர்வாணமாய் அலையும் ராணுவப் பசிக்கு இரையான எத்தனை என் தோழிகளை அவர்களின் உணர்வுகளை இன்னும் எத்தனை நாள் சுமக்க போகிறோம்.

ஆண்குறியோடு அலையும் ராணுவத்திற்குள் பிரிவுகள் இல்லை. உலகின் எல்லா ஆக்கிரமிப்பு ராணுவத்திற்கும் தங்கள் பசியை அடக்க கிடைத்த ஒரே வழி பெண்கள்.

80 களின் இறுதிப் பகுதிகளில் ஒரு நாள் என் காது கேட்க என் அம்மாவிடம் பக்கத்து வீட்டு அக்கா கதறியபடி ஏதோ சொல்லி கொண்டிருந்தார். அதற்கு சற்று முன்னர் தான் இந்திய ராணுவத்தால் 3 மணி நேரமாய் என் கிராமம் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. அண்டைக்கு ஒலிக்க தொடங்கின அந்த கதறல் குரல் இன்னும் எனக்குள்ளை ஒலிக்குது.

சமாதானம் சமாதானம் எண்டு நாலு வருசம் ஆடின நாடகத்தில பார்வையாளராய் இருந்த எங்கடை சனம் எல்லாம் இப்ப மரணத்தின்ர பிரதான பங்காளியாய் மாறிப்போயிருக்கு. ஆனா அந்த நாடகத்தில நடிச்சவைக்கு இருக்கிற பாதுகாப்பு நாடகத்தை பாத்துக்கொண்டிருந்த சனத்துக்கு இல்லை.நாடகம் நடக்கேக்கை வெறியோடை பாத்துக்கொண்டிருந்த ராணுவம் இப்ப வேட்டையாடத்தொடங்கிட்டுது. வேட்டைக்காரனுக்கு இப்ப வேட்டை இலக்கில்லை. கைக்குள்ளை அகப்படுற எல்லாத் தமிழரின் இரத்தங்களையும் பெண்களின் உடல்களையும் ஆண்குறி ஏந்தி திரியும் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் ருசிக்கத் தொடங்கி விட்டன.நாலு வருச சமாதான காலத்தில வீதியில போற எங்கடை பொம்பிளைப்பிள்ளையளை நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு ஆண்குறி பிடித்தபடி பாத்தக்கொண்டிருந்த 'வெறிலங்கா'ப்படைகள் மன்னிக்க வேணும் "சிறிலங்கா"ப் படைகள் இப்ப தங்கள் ஆண்குறி அடக்க ஆணுறைகள் சகிதம் வேட்டையாட புறப்பட்டு விட்டன.

விடுதலைப்புலிகள் பலம் வாய்ந்த பெண்கள் படையணிகளை உலகம் வியக்க உருவாக்கினர். வேட்டையாடும் வெறிகார ராணுவத்தை அடக்க பல வெற்றி சமர்களை நடத்தியது. ஆனாலும் இண்டைக்கும் இந்தக்கணத்திலையும் குருதிக்குள் உறைந்து போன என் அக்காளின் கோரப் பிணத்தை பார்க்கும் துரதிஸ்டம்...
என்னைக் கேட்டால் ஆயுதம் தூக்கின என்ர அக்காக்களே, தோழிகளே, தங்கச்சிகளே, முடிஞ்சால் அடியுங்கோ.. தயவு செய்து ஆண்குறியோடு அலையும் ராணுவ வெறியர்களுக்கு எங்கடை பெண்களை தேடியலைய நேரம் குடுக்காதேங்கோ..வன்னிக்குள் எல்லோரும் போய் ஒழிய முடியாத யதார்த்த சூழலில் ஓநாய்களின் காவலில் நாங்கள் வாழுகிறோம். அவர்களுக்கு பசிக்கிற போதெல்லாம் எங்கள் பெண்களை புசிக்கலாம். குழந்தைகளின் இளம் குருதி குடித்து கூத்தாடலாம். இது கோரம்..இதை பேசுகிற போது கோவத்தையும் விரக்தியையும் தவிர எதுவும் செய்ய முடியாத வெறும் கையாலாகததனம் மட்டுமே மிஞ்சி நிக்கிறது.. .

எங்கள் இணைத்தளங்களினதும் பத்திரிகைகளினதும் இடங்களை நிரப்ப , இனியும் இந்தப் படங்கள் வேண்டாம். ஐயோ.. என நாங்கள் வைக்கும் ஒப்பாரி உலகத்திற்கு கேட்பதற்கான வாய்ப்புக்கள் எவ்வளவு இருக்கெண்டு எனக்கு தெரியேல்லை. ஒரு வேளை உலகில் நடக்கும் இந்தக் கோரங்களைப் போன்ற கோரங்களுக்குள் என் வீட்டுக் கொல்லைப் புறத்திலிருந்து வீறிட்டெழும் அலறலும் அடங்கிப் போகலாம்.

இதுக்குமேல பேச எதுவுமில்லை..

இன்னும் எத்தனை நாள் என்ரை பேனாவுக்குள்ளை இரத்தம் ஊத்தி எழுதப்போறனோ தெரியேல்லை..

இவ்வளவு நேரம் எழுதினது வார்த்தையில்லை..
என்ர வலி இது எங்கடை இனத்தின்ர வலி..


ஜனாதிபதி மகிந்தவுக்கு:தயவு செய்து உங்கடை ராணுவத்திற்கு ஆண்குறி அடக்க ஏதாவது வழி செய்யுங்கோ..இரணுவத்தினரை மட்டும் இதுக்கு குறை சொல்லேலாது.. அவையள் கூலிக்கு மாரடிக்கினம். புலிகள் மாதிரி போராளிகள் இல்லை. யாழ்ப்பாணத்தில இருந்து தன்ர ஊருக்கு போகேலாமல் தன்ர மனிசியை பாக்கேலாமல் விரக்தியோடை இருக்கிறவைக்கு ஆண்குறி அடக்கிறதுக்கு என்ர உறவுகளை பலியாக்க வேணாம். எதுக்கெல்லாமோ பாதுகாப்பு கவுண்சிலையோ சர்வ கட்சி மாநாட்டையோ கூட்டுறனிங்கள் இதுக்குமொருக்கா கூட்டிப்பாருங்கோ.. கொழும்பில கூத்தாடுற மேற்தட்டு வர்க்கம் பாதுகாப்பா தாகம் தணிக்குது. அங்கை பாதுகாப்பு படைக்கு வெறியெடுக்குது. அவங்களுக்கும் தாகம் தணிக்க ஒரு அமைச்சை உருவாக்கி அமைச்சரையும் போட்டு ஏதேனும் செய்யுங்கோ.. தயவு செய்து உங்களின்ர கொண்டாட்டங்களுக்கு எங்களை பலியெடுக்காதைங்கோ..

புலிகளை நிர்வாணப்படுத்தி காட்சிக்கு வைத்த வன்மம் நிறைந்த இராணுவமும்.வன்மத்தை ரசிக்க சிங்களவர்களை பழக்கப்படுத்தும் சிங்கள அரசும் தன்னைத் தானே அழித்துக்க கொள்ளும் ஒரு வன்முறைச் சமுகத்தையே உருவாக்கும்.புத்தரின் புனித அரசமரம் உள்ள அநுராதபுரத்தில் நடந்த வன்மம்>

இக்கட்டுரை மீள்பதிவிடப் படுகிறது.

2 comments:

Sundar Padmanaban said...

//இதை பேசுகிற போது கோவத்தையும் விரக்தியையும் தவிர எதுவும் செய்ய முடியாத வெறும் கையாலாகததனம் மட்டுமே மிஞ்சி நிக்கிறது.. .
//

படிக்கிறபோதும்தான்! :-((

Anonymous said...

:( :(