Monday, August 17, 2020

” தமிழ் தேசிய கூட்டமைப்பும் அப்புகாத்துகளின் அரசியலும் “

 

2004 ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளியாகியிருந்தது. கொழும்பின் மேட்டுக்குடிகள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள குயின் வீதி அமைந்திருக்கும் குமார் பொன்னம்பலத்தின் இல்லம். தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வருகிறார்கள். நாங்கள் பத்திரிகையாளர்கள், உயர்ந்த மதில்களும் பெரிய இரும்புக் கதவுகளும் கொண்ட அந்த வீட்டிற்கு வெளியே நிற்கிறோம். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்த ஜீஜீபொன்னம்பலம் காலத்தில் இருந்து  அரசியல் பரபரப்பு மிகுந்த அந்த வீட்டில் குமார்பொன்னம்பலத்தின் மகன் கஜேந்திரகுமார் அப்போது  எம்பியாகியிருந்தார். தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அவசரக் கூட்டம்  கூட்டப்பட்டிருந்தது. அப்போது சமாதானப் பேச்சுவார்த்தக்காலம். ஆனாலும், அசாதாரண நிலையில் அந்த கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. அது புலிகளின் கிழக்குத் தளபதி கருணா அம்மான் புலிகளிடமிருந்து பிரிந்திருந்த நேரம் என்று சொன்னால் அந்த சூழலைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது.

இந்த தேர்தலில்தான் இலங்கை நாடளுமன்றத்தில் தமிழ் அரசியல் குழுவொன்று அதிக கூடிய இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு 22 ஆசனங்களைப் பெற்றிருந்தது. இதற்க்கு முன்னர் 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களைப் பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழக் கோரிக்கையை முன்னிறுத்திய அந்த தேர்தலில் கிடைத்த வெற்றிக்குப் பிறகு, 2004 இல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த வெற்றி பெரு வெற்றியாக இருந்தது. கிட்டத்தட்ட இந்த தேர்தலின் மூலம் புலிகளிற்க்கான மக்கள் ஆதரவைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியின் ஊடாக உலகிற்க்குப் பறைசாற்றும் எண்ணம் மறைமுகமாக இருந்தது. வேட்பாளர் தெரிவுகளை தன்னிச்சையாக கூட்டமைப்பு மேற்கொள்ளவில்லை. புலிகளின் ஏக பிரதிநிதித்துவ நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள மறுத்த ஆனந்த சங்கரி வெளியேற்றப்பட்டு சம்பந்தன் தலைமைப் பொறுப்புக்குக் கொண்டுவரப்படுகிறார். 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி மூலம் தேர்தலில் வெற்றிபெற்ற சம்பந்தன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவான பின்னரே திருகோணமலையில் மீண்டும் வெற்றி பெற்றார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தையும் சங்கரி தூக்கிக் கொண்டு போய்விட்டதால், அவசர அவசரமாக தமிழரசுக் கட்சியைத் தேடி எடுத்து அதன் வீட்டுச் சின்னத்தில் கூட்டமைப்பு தேர்தலைச் சந்தித்தது. மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் முக்கிய புள்ளியாக முன்னிறுத்தப்பட்டார். 70களில் இளஜராக தமிழரின் உரிமைப் போராட்டத்தில் இணைந்த மாவை,  தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் புலிகளால் கொல்லப்பட்ட பின்னர் வெற்றிடமான தேசியப்பட்டியல் எம்பிப் பதவி மூலம் பாராளுமன்றத்திற்க்குள் முதல் தடவையாகப் பிரவேசித்தவர். 

2004 தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மொத்தமுள்ள ஐந்து ஆசனங்களில் நான்கைத் தமிழ்தேசிய கூட்டமைப்பு வென்றிருந்தது. இப்போது அந்த வீட்டிற்குள் இருந்த எம்பிகளும் வெளியே இருந்த பத்திரிகையாளர்களும் மட்டக்களப்பு எம்பிகளுக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார்கள். நானும் பத்திரிகையாளர்களோடு பத்திரிகையாளராக அப்போது உட்காந்திருந்தேன். மட்டக்களப்பு எம்பிக்கள் கருணா பேச்சைக் கேட்கப் போகிறார்களா புலிகள் பேச்சைக் கேட்கப் போகிறார்களா?  என்பதுதான் அன்றைய நாளின் பரபரப்பாக இருந்தது. உண்மையில் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் கிடைத்த ஆசனங்கள்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட ஆரம்பகால நோக்கத்திற்க்குக்  கிடைத்த வெற்றி. ஆனால் அது ஒரு இக்கட்டான காலகட்டத்தில் நடந்துவிட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவான கதையை பலரும் எழுதிவிட்டார்கள். விருப்பு ,வெறுப்புகள், உள்ளும், புறமுமாக ஒவ்வொருவருக்கும் தெரிந்த தகவல்களை வைத்து இந்தக் கதைகள் எழுதப்பட்டன. 90களின் இறுதியில் சந்திரிக்கா அரசு மீதான நம்பிக்கையீனங்கள் பரவாலக இருந்தது. இது தமிழ் கட்சிகள் இணைய வேண்டிய  தேவையை அரசுடன் நேரடியாக இணைந்திருக்காத தமிழ் அமைப்புகளுக்கு உருவாக்கியது. 90களின் ஆரம்பத்தில் புலிகளை விமர்சித்து எழுதிய சிவராம் போன்றவர்கள் பின்னாளில் புலிகளை ஆதரிக்கும் நிலைக்கு வந்ததை இந்த பின்னணியில் இருந்துதான் நாம் பார்க்க வேண்டும். இப்படித்தான் 80 களில் புலிகளோடு முரண்பட்டு நின்றவர்கள் படிப்படியாக புலிகளோடு இணக்கமாக  செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். புலிகளும் தங்களுடைய பழைய முரண்பாடுகள் மற்றும் கடுமையான முகத்தை மாற்றி இணக்கமான தொடர்புகளை ஏற்படுத்துவற்கான கதவுகளைத்  திறந்திருந்தார்கள். இந்த காலப்பகுதில் சரிநிகர் பத்திரிகையின் ஒரு தாலையங்கம்  முக்கியமானது “ புலிகளின் வெற்றி தமிழ் மக்களின் வெற்றியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் புலிகளின் தோல்வி தமிழ் மக்களின் தோல்வி” என்பதே அது. இந்த யதார்த்தம் புரிந்த நிலையிலேதான், தங்கள் அமைப்புக்களின் தலைவர்களைக் கொன்றவர்கள் என்று கருதப்படும் விடுதலைப் புலிகளோடு இணைந்து அரசியல் செய்வதற்க்கு ஈபிஆர் எல் எப் மற்றும் டெலோ ஆகியவை முன்வந்ததையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில் ,தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்திற்கான உடனடித் தேவைப்பாடு முதலில் கிழக்கிலேயே உணரப்பட்டது.  திருகோணமலையில் தமிழர்கள் தங்கள் பிரதிநிதித்துவத்தை இழந்தனர். மட்டக்களப்பில் அதற்க்கு முன்னர் மூன்று தமிழர்கள் தேர்வான நிலைமாறி  இருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இதற்க்குக் காரணம் தமிழ்க்கட்சிகள் பிரிந்து நின்று போட்டியிட்டு வாக்குகளைச் சிதறடித்ததே.  இந்த பின்னணியில் கிழக்கில் தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்கிற கருத்து உருவாகிறது. கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் துணையோடு  அதன் போசகர்களில் ஒருவரான சிவராம் இதற்கான காய் நகர்தல்களைச் செய்கின்றார்.  புலிகளின் ஒப்புதல்  கிடைத்துவிடவே தேசிய அளவில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைப்பதற்க்கான  வேலைத் திட்டத்தில் பலரும் இணைகின்றனர். அதுவரை இராணுவப் பாதுகாப்புடன் இயங்கியவர்களுக்கு புலிகளிடமிருந்து உயிருக்கான உத்தராவதம் கிடைத்தது.  இந்த ஒன்றிணைவுக்குப் பிறகும்  இலங்கை `இராணுவத்துடன்  சேர்ந்து செயற்ப்பட்ட சிலரை, டெலோ தலைவர் செல்வம் அடைகலநாதன் தமது அமைப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்படவில்லையென்றாலும் புலிகள் ஆதரவைப் பெற்ற அமைப்பாக அது உருவாகியது.

விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது சிறீலங்கா நாடாளுமன்றத்திற்க்கு தமிழர் சார்பில் அனுப்பட்ட பிரதிநிதிகள் என்பதற்கப்பால் பெரிய முக்கியத்துவம் எதுவும் அப்போது இல்லை. அதுதான் உண்மையும் கூட. அரசுடனான பேச்சுவார்த்தை, அரசியல் முடிவுகள், தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செயற்பாடுகள் என அனைத்தும் புலிகளின் நெறிப்படுத்தலில்தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவ்வப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் நடைபெறும் கூட்டங்களில் புலிகளால் தகவல்கள் பரிமாறப்படும் அவ்வளவே. 

புலிகள்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்பது குறித்து  தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் எப்போதும் இருவேறு கருத்துக்கள் இருந்து வந்தன. இதில் சம்பந்தனும் ஆனந்தசங்கரியும் பெரும்பாலும் ஒரே கருத்துடையவர்களே. சந்திரிக்கா ஆட்சியில், தமிழர் விடுதலைக் கூட்டணி எம்பியான நீலன் திருச்செல்வம் பங்குபற்றுதலோடு ஒரு தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டது. அந்த தீர்வுப் பொதிதான் இதுவரையான இலங்கை அரசின் தீர்வுத் திட்டங்களில் சிறப்பானது எனலாம்.  ஆனால் அது விடுதலைப் புலிகளைப் புறம் தள்ளி  உருவாவதாகக் கூட்டணிக்குள் விமர்சனம் உருவாகியது. ஜோசப் பரராஜசிங்கம் தலைமையிலான மட்டக்களப்புக் கிளை அந்தத் தீர்வுப் பொதி புலிகளுடன் பேசாமல் முன்மொழியபடுவதை ஆதரிக்கப் போவதில்லை என முடிவு செய்திருந்தது அப்போது தமிழர்விடுதலைக் கூட்டணிக்குள் விவாதமானது.

தமிழர் விடுதலைக் கூட்டணி, ஆயுதம் தாங்கிய தமிழ் குழுக்களான ஈபி ஆர் எல் எப் ,டெலோ ஆகிய கட்சிகள் இணைவது இது முதல் முறையல்ல அதாவது அறவழிப் போராட்ட அமைப்பு என்ற பெயரைக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி இந்த ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களோடு முகாம்களில் இருந்த1989 இல் நடைபெற்ற தேர்தலில் கூட்டுச் சேர்ந்திருந்தது.  விடுதலைப் புலிகள் விரும்பியிராத அந்த தேர்தலில் தமிழர்விடுதலைக் கூட்டணி ,ஈபிஆர் எல் எப், டெலோ ஆகியவற்றோடு ஈஎன் டி எல் எப் ஆயுத இயக்கமும்  இணைந்து அந்த தேர்தலில் போட்டியிட்டது. சுரேஸ் பிரேமச்சந்திரன் முதன் முதலில் அந்த தேர்தலில் வெற்றி பெற்றுத்தான் எம்பியானார். சுரேஸ் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டார். எதிர்கட்சித் தலைவராகவெல்லாம் இருந்த தமிழர்விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் மட்டக்களப்பில் போட்டியிட்டு தோல்வியடைகிறார்.  இந்தியாவின் விருப்பமான இந்த க் கூட்டணியை அறிந்த புலிகள் இவர்களைத் தோற்கடிப்பதற்காக, ஈரோஸ் இயக்கத்தை இந்த கூட்டணியை எதிர்த்துப் போட்டியிடுமாறு கூறுகிறார்கள். இந்திய இராணுவம், ஈபிஆர் எல் எப் நடத்தும் மாகாண சபை ஆட்சி என இருந்த சுழலில் கடும் சிரமத்தில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த ஈரோஸ் அதிக இடங்களில் வெற்றி பெறுகிறது. வெற்றி பெற்ற ஈரோஸ் உறுப்பினர்கள் புலிகளின் உத்தரவுக்கு அமைய, எம்பிகளாகப் பதவியேற்காமல் ராஜினாமாச் செய்கிறார்கள். இந்த தேர்தலில் ஈ பி ஆர் எல் எப் சார்பில் மட்டக்களப்பில் வெற்றி பெற்ற சாம் தம்பிமுத்து கொலை செய்யப்பட அந்த இடத்திற்க்கு பத்திரிகையாளரான ஜோசப் பரராஜசிங்கம் தெரிவானார்.  இதே தேர்தலில்தான் புளட் இயக்கத்தின் அரசியல்பிரிவின் செயலாளரான தாராகி சிவாரம், அந்த இயக்கத்தின் சார்பில் தலைமை வேட்பாளராக களமிறங்கி தோல்வியைத் தழுவுகிறார்.

1972 இல் தமிழர் ஐக்கிய கூட்டணி திருகோணமலையில் உதயமாகியது. செளமியமூர்த்தி தொண்டைமான்,ஜீஜீபொன்னம்பலம்,செல்வநாயகம் ஆகிய முப்பெரும் தலைவர்களை இணைத்து உருவான தமிழர் ஐக்கிய கூட்டணி பின்னர் தமிழர்விடுதலைக் கூட்டணி என்றாகியது. தமிழர்கள் பலமிக்க அமைப்பாக இலங்கை அரசுடன் பேசுவதற்காகவே இந்த கூட்டணி உதயமானது. தமிழர்களின் வராலற்றுப் புகழ்மிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானம் இந்தக் கூட்டணியின் பெரும் பிரகடனமாகிறது. 2009 இல் போர் முடிந்த பிறகு இப்படி ஒரு ஒற்றுமைக் கூட்டணியை அமைப்பது தொடர்பான பேச்சுகள் தொடங்கப்பட்டன. சுவிற்சலாந்தில் நடைபெற்ற கூட்டம் பலருக்கும் மறந்து போயிருக்கலாம். தமிழ்தேசியத் தரப்புக்கு எதிர்நிலையில் இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவைக் கூட இணைத்து ஒரே தமிழத் தரப்பாக அரசுடன் பேச வேண்டும் என்கிற கருத்துருவாக்கம் நடந்தது. ஆனால் யதார்த்தம் அதற்க்கு நேர் எதிர் திசையில் இருக்கிறது.

2009 இல் முடிந்துவிட்ட ஆயுதப் போராட்டக் காலத்தின் பின், தோற்றம் பெற்றிருக்கக் கூடிய புதிய காலம் அரசியல் செய்ய வேண்டிய காலம் . சாணக்கியமும் ராஜதந்திரமும் அரசியல் அறிவும் அரசமைப்புச் சட்டம் பற்றிய தெளிவும் கொண்ட புத்திஜீவித்தனமான அரசியலை முன்னெடுப்பதற்க்கு இப்போது களத்தில் உள்ளவர்களில் வல்லவர் சுமந்திரனே. சுருங்கச் சொன்னால் சாணக்கியமிக்க அரசியல்வாதியாக தமிழ்ச் சூழலில் அவர் இருக்கிறார். கலைஞர் கருணாநிதியின் அரசியல் சாணக்கியம் பற்றிச் சொல்லும் போது சொல்லுவார்கள், ஒருவரைக் கட்சியைவிட்டு ஓரங்கட்சி வெளியேற்று வேண்டும் என கலைஞர் நினத்துவிட்டால், குறித்த நபரே வெறுப்பாகி கட்சியைவிட்டு வெளியேறிச் சென்று விடும் சூழலை உருவாக்கிவிடுவார். குறித்த நபருக்கு வெளியேறுவதைத் தவிர வேறு தேர்வுகள் இருக்காது. இதை சுமந்திரன் சிறப்பாக செய்துள்ளார். என்பதில் இருந்தே அவர் அரசியல் செய்ய தெரிந்த அரசியல்வாதியாக தமிழர்கள் மத்தியில் இருக்கிறார் என்பதை விளங்கிக் கொள்ளலாம். தனக்கான ஆதாரவு வளையத்தையும் அவர் வெகுசிறப்பாக வடிவமைத்துக் கொண்டார். இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் அப்புக்காத்து அரசியல்வாதிகளின் தொடர்ச்சியாக அவர் ஊருவாகிவிட்டார். இராமநாதன், பொன்னம்பலம் ,செல்வநாயகம், திருச்செல்வம் என்று தொடரும் தமிழ் மேட்டுகுடி கொழும்பு மைய அப்புக்காத்து அரசியலின் தொடர்ச்சிதான் சுமந்திரன். 

இன்று சுமந்திரன் எப்படி ஐக்கியதேசியக் கட்சியோடு நல்லண்ணத்தின் ஊடாகத் தீர்வைப் பெற்றுக் கொள்ள விளைந்தாரோ அப்படித்தான்டட்லி சேனநாயக்க அரசில் திருச்செல்வம் தமிழரசுக் கட்சியின் சார்பில் அமைச்சருமாகினார். அரசியலமைப்பை மாற்றும் பொறுப்பும் அவருக்கு வழங்கப் பட்டது. அவரும் தன் சட்டத்தரணி மூளையை வைத்து அந்த அரசுக்கு உதவினார். கடைசியில் ஒன்றும் நடக்காமல் தமிழரசுக் கட்சி அந்த அரசில் இருந்து வெளியேறியது ”போன மச்சன் திரும்பி வந்தார்..... .. “ என்ற சொலவடைக் கணக்காக மீண்டும் முதல்ல இருந்து தொடங்கிற அரசியல்.

ஒன்றும் மட்டும் தெளிவு ஆயுதப் போராட்டத்தைக் கருத்தில் எடுக்காமல் அது முடிந்த இடத்தில் இருந்து தொடங்காமல் பழைய மொத்தையில் புதிய கள்ளாக பழைய தமிழரசுக் கட்சியைத் தூக்கி முன்னிறுத்தி புதிய சட்டவாளர் சுமந்திரன் அரசியல் செய்தால் அது எப்படியிருக்கும் என்பதற்க்குக் கடந்த பத்தாண்டுகள் நல்ல உதாரணம். போர் முடிவுக்கு வந்த இறுதி நாட்களிலும் அதற்க்குப் பின்னரும் மஹிந்தவின் மாளிகையிலும் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்திலும் பின்னர் புது டில்லி சந்திப்புக்களிலும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் பணிப்புரைகள், திட்டங்கள் எல்லாவற்றிற்குமான சாட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பே. ஆனால், அந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்போது இல்லை.

No comments: