Wednesday, August 26, 2020

“இலங்கையில் இரண்டு தலைவர்கள் இருந்தார்கள் ஒன்று பிரபாகரன் இன்னொன்று மகிந்த. இப்போது மகிந்த மட்டுமே இருக்கிறார்.”


-- 28.10.2018 இல் ஆநந்த விகடனுக்காக எழுதப் பட்ட க் கட்டுரை.

ஆட்சிக் கவிழ்ப்பு நடகங்கள் நிகழ்ந்த போது


 மகிந்த ராஜபக்சேவின் இந்த திடீர் ஆட்சிக் கைப்பற்றல் பற்றி சிங்கள நண்பர் ஒருவரிடம்கேட்ட போது சொன்னார் “இலங்கையில் இரண்டு தலைவர்கள் இருந்தார்கள் ஒன்று பிரபாகரன் இன்னொன்று மகிந்த. இப்போது மகிந்த மட்டுமே இருக்கிறார்.” என்றார். மகிந்த இன்னமும் பெரு பிம்பமாகவே இலங்கையில் இருக்கிறார்.

மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் இலங்கைத்தீவில் பலம் பொருந்திய மன்னரைக் காலி செய்துவிட்டு ஆட்சிக் கட்டிலில் ஏறுவது அடிக்கடிக்கடி நிகழ்வதுதான். அப்படி அயல் தேச ஆதரவுடன் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வீழ்த்தப்பட்ட மாமன்னர் மஹிந்த ராஜபக்சே இப்போது மீண்டும் முடிசூடிக் கொண்டிருக்கிறார் என்று சிங்களவர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கொண்டாட்டங்கள் பல இடங்களில் வன்முறையாகவும் மாறியிருக்கிறது. சிலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மகிந்த பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே இலங்கையின் அரச தொலைக்காட்சி, வானொலி நிலையங்களில் இருந்த அதிகாரிகள், ஊழியர்கள் மகிந்த ஆதாரவாளர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். சிலர் மீது தாக்குதலும் தொடுக்கப்பட்டது. உடனடியாகவே காவல்துறை மகிந்தவின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. ராணுவமும் மகிந்தவின் உத்தரவுக்கு கட்டுபடும் நிலையில்தான் இருக்கிறது.

பெரும்பான்மைப் பலம் மிக்க அரசு ஒன்றின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க இருக்கும் போது புதிய பிரதமராக மகிந்த பதவியேற்றுக் கொண்டார். அதன் பின்னரே ரணீல் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக இலங்கை அதிபர் அறிவித்தார். ரகசியமாக நடந்த பதவியேற்பு முடிந்த பின்னரே நாட்டு மக்களுக்கும், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இந்தச் சேதி தெரிந்தது. மகிந்த அதிபராக இருந்த போது வெறும் அமைச்சராக இருந்த தற்போதைய அதிபர் மைத்திரி முன்பாக மகிந்த பதவியேற்ற நிலையில், இவ்வளவு நாளும் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான இடைக்காலப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதைக் காலம் தாழ்த்தி வந்த நல்லிணக்க அரசு முடிவுக்கு வந்தது. இலங்கையைப் பொறுத்த வரையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் சர்வ அதிகாரம் படைத்தவர். புதிதாக ஏற்படுத்தப்பட்ட 19வது திருத்தச் சட்டம் முன்னைய அதிபர்களின்

அதிகாரங்களைவிட குறைவான அதிகாரங்களையே இப்போது உள்ள அதிபருக்கு வழங்கியிருக்கிறது. அதன்படி பிரதமரைப் பதவி விலக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை என்று கூறிய ரணில் விக்கிரமசிங்க ”நானே இன்னமும் பிரதமர்” என அறிவித்தார். ஆனால் சட்டபடியே செயல்பட்டதாக அதிபர் விளக்கம் கொடுத்திருக்கிறார். நீதிமன்றத்தைஅணுகினாலும் இலங்கை உச்ச நீதிமன்றமும் அதிபருக்கு எதிராக தீர்ப்பு வழங்க வாய்ப்புக் குறைவு நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமென ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனும் கூறுகிறார்கள். 

ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 105 உறுப்பினர்களும் மகிந்த மற்றும் அதிபர் மைத்திரி அணியினருக்கு 96 உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 16 உறுப்பினர்களுக் ஜேவிப்பிக்கு 6 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். ஜேவிபி யாருக்கும் ஆதரவு இல்லையென அறிவித்து விட்டது.ஆகவே உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டினால் வெற்றிபெற்றுவிடலாம் என்று ரணில் கணக்குப் போடுகிறார். 

நல்லிணக்க அரசு அமைத்து இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் பேசுவதால் அவர்கள் ஆதரவும் கிடைக்கும் என்பது ரணிலின் நம்பிக்கை. ஆனால் அதிபர் மைத்திரியோ நாடளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுவதற்க்குத் தடை போட்டுவிட்டார். தமிழகத்தின் அண்மைய உதாரணமான கூவத்தூர் பார்முலாவுக்கு இதன் மூலம் அதிபர் வழிவகுத்துக் கொடுத்துவிட்டார். இனிப் பேரம் படிந்ததும் நாடாளுமன்றம் கூடும்.

மகிந்த பிரதமராக பதிவியேற்ற இரவிலேயே ரணீல் கட்சியில் இருந்து இருவர் தாவி விட்டார்கள். இந்தியாவில் இருப்பது போல் கடுமையான கட்சித் தாவல்ச் சட்டங்களும் இலங்கையில் இல்லை. ஆகவே அடுத்துவரும் நாட்களில் மகிந்தவுக்கு ஆதரவு பெருக வாய்ப்பிருக்கிறது. 

இதற்கிடையில் பிரதமராக பதவியேற்ற பின்னர் அறிக்கை வெளியிட்டமகிந்த விரைவில் தேர்தலுக்குப் போகப் போவதாகக் கூறியிருக்கிறார்.இப்போது உள்ள நிலையில் தேர்தலுக்குப் போவது மகிந்தவுக்கு சாதகமாகவே இருக்கிறது. பேரத்திற்க்குப் படிந்து மகிந்தவுக்கு ஆதரவு அளிக்காவிட்டால் அதிபர் மைத்திரி ஆட்சியைக் கலைத்துவிடும்அபாயமும் இருக்கிறது. இந்த நிலையில் பல எம்பிகள் உடனடியாக தேர்தலைவிரும்பவில்லை. ஆகவே பதவியும் பெரும் தொகையும் கிடைத்தால் தாவுவதற்க்குத் தயாராகவே இருக்கிறார்கள். தமிழ் எம்பிக்களைப் பொறுத்தவரையில் மலையகத்தில் தொண்டமான் தலைமையிலான தொழிலாளர் காங்கிரசும், யாழ்ப்பாண எம்பியான டக்ளஸ் தேவானந்தாவும் ஏற்கனவே மகிந்தவுடன் இருக்கிறார்கள். அண்மையில் சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பில் மகிந்த இந்தியா வந்த போதும் டக்ளஸ் தேவானந்தாவும் டெல்லி வந்திருந்தார். முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த எம்பிகள் இப்போது ரணில் பக்கம் இருந்தாலும் அவர்கள் இறுதி நேரத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளோர் பக்கமே சாய்வார்கள்.


இந்த நிலையில் தமிழ் கட்சிகளில் அதிக இடங்களை வைத்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கப் போகும் நிலைப்பாடு இன்றைய அரசியல் நெருக்கடியில் முக்கியமானது. ரணில் தலைமையிலான அரசுடன்தமிழர்கள் உரிமைகள் தொடர்பாகவும் அரசியல் கைதிகள் விடுதலை, போரில் காணாமல் போனவர்கள் தொடர்பான உண்மை நிலை குறித்தும் பல முறை பேச்சுகளை நடத்தியிருந்தாலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

 இப்போது உள்ள நிலையில் மகிந்த மற்றும் ரணிலோடு பேசி தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கப் போவதாகவும் அதன் பின்னரே முடிவெடுக்கப் போவதாகவும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன்கூறியிருக்கிறார். ஆனால் இலங்கையின் வரலாற்றில் இதற்க்கு முன்னரும் இப்படி அரசுகளைஆதரித்து பின்னர் தீர்வு எதனையும் தராமல் கழுத்தறுத்த முன்னுதாரணங்களும் உண்டு. 

அதேநேரம் இன்னமும் முற்றாக நீங்கிவிடாத சர்வதேச அழுத்தமும் இன்றைய அரசியல்நெருக்கடிநிலையும் தமிழ்த் தரப்புக்குச் சாதகமாக காய்களை நகர்த்தக் கூடிய சூழலைஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்த் தரப்புக்கு பேரம் பேசும் சக்தி நீண்டகாலத்தின் பின்கிடைத்திருக்கிறது.தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மகிந்தவின் கொடுரமான பழைய காலத்தைமறக்கவில்லை. மீண்டும் அப்படியொரு கொடும் காலம் வந்துவிடக் கூடாது என்ற அச்சஉணர்வு இருக்கிறது. அதற்க்கு வலுச் சேர்ப்பது போல மகிந்த பதவியேற்ற அரை மணிநேரத்தில் மகிந்தவைச் சந்தித்த இலங்கை காவல் துறைத் தலைவர், போர்குற்றங்களின் சூத்திரதாரி என்று பலரும் குற்றஞ்சாட்டும் மகிந்தவின் தம்பி கோத்தபாயவைப் பார்த்து சல்யூட் வைக்கிறார். 

என்னாதான் மகிந்த ஆட்சி மாறி ரணில் ஆட்சி நடைபெற்றிருந்தாலும் இதுவரை வடக்கில் இருந்து ராணூவம் வெளியேறவில்லை. ராணுவ புலனாய்வுக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படவில்லை. ஆகவே பழைய அச்சம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் மகிந்த இம்முறை முன்பு போல இல்லாமல் தமிழர்களுடன் பேசுவார் என்றே தெரிகிறது.

இப்படிப் பதவியில் இருந்து விலக்கப் படுவது ரணிலுக்கு இது இரண்டாவது முறைஏற்கனவே 2004 இல் புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த ரணில்விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்தார் அன்றைய அதிபர் சந்திரிக்கா. அதன்பின்னர் வந்த தேர்தலிலேயே மகிந்த முதல் தடவையாக பிரதமரானார்.பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே காலப் பகுதியில் உக்கிரமான போர் நடந்து

கொண்டிருந்தது. உலக நாடுகள் அனைத்தையும் தன் பக்கம் வைத்துக் கொண்டு போரைநடத்தினார் மகிந்த. தமிழகத்தில் இருந்து வந்த எதிர்ப்பை கருத்தில் எடுக்க முடியாதபடிராஜபக்சேவை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தமான வெளியுறவுக் கொள்கையை வைத்திருந்ததுஇந்தியா. சீனாவோடு இலங்கை நெருக்கமாகிவிடும் ஆகவேதான் இலங்கைக்கு உதவுகிறோம்என்று விளக்கம் கொடுத்தார்கள் இந்திய இராஜதந்திரிகள். ஆனால் போர் முடிந்ததும்இந்தியாவை முற்றாகப் புறம் தள்ளி சீனாவோடு நெருக்கமானர் ராஜபக்சே.

இந்த நிலையில் மகிந்த ராஜபக்சே கட்சி உடைக்கப்பட்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டு எதிர்அணியினர் ஒன்றிணைக்கப்பட்டு அதிபராக மைத்திரிபால தேர்தலைச் சந்தித்தார். அதனைசாத்தியபடுத்தியதில் இந்தியாவுக்குப் பங்கிருந்ததாகச் சொல்லப்பட்டது. மைத்திரிஇந்தியாவுக்கு நெருக்கமானவராகவும் ரணில் அமெரிக்காவுக்கு நெருக்கமனவராகவும்சொல்லப்பட்டனர்.இந்த நிலையில் இப்போது மகிந்த பிரதமராகப் பதவியேற்றதும் அது குறித்து உடனடியாக

இந்தியா கருத்து எதுவும் சொல்லாத நிலையில் சீனாவின் தூதுவர் வெளிப்படையாகமகிந்தவை சந்தித்து பேசினார். இது அவதானமாகப் பார்க்கப்பட வேண்டியது. இந்தநெருக்கடிக்கு ஒருவாரம் முன்பு இந்தியா வந்திருந்த ரணில் விக்கிரமசிங்கே இந்தியப்பிரதமரைச் சந்தித்தார். அப்போது இந்தியா இலங்கையில் முன்னொடுக்கும் வேலைகளுக்குப்

போதிய ஒத்துழைப்பு இல்லையென பிரதமர் மோடி குறைப்பட்டதாக ரணீல் ஊடகங்களிடம் சொன்னார். போருக்குப் பிறகான மீள்கட்டுமானம் என்ற பெயரால் நடைபெறும் பணிகளை இந்தியாவும் சீனாவும் பங்கு போட்டு செய்து வருகின்றன.

இவ்வாறான சூழலில் இன்றைய இலங்கையின் அரசியல் நெருக்கடி வெறும் உள்நாட்டுச் சிக்கலா இல்லை இலங்கையின் மீதான ஆதிக்கம் யாருக்கு அதிகம் என்ற பேட்டியுடன் சேர்ந்தே பார்க்கப்பட வேண்டியதா என்கிற கேள்வி முக்கியமானது. அது இந்தியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான ஒன்றாகவும் இருக்கிறது.

இலங்கை அதிபர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது இலங்கை மிகப் பெரும் பொருளாதர நெருக்கடியில் இருக்கிறது. பிரதமர் ரணில் பொருளதாரத்தை சீர் செய்யவில்லை, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை ஆகவேதான் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்தேன் என்கிறார். ஆகவே சீனாவோடு நெருக்கமான மகிந்த வருவதன் மூலம் மீண்டும் சீனவில் இருந்து பெரும் மூதலீடுகள் இலங்கையை நோக்கி வரும் என்று நம்புகிறார்கள்.

இந்தச் சூழலில் அடுத்துவரும் நாட்களில் பல நூறு கோடிகள் புரளும் எம்பிக்களுக்கான ஏலம் சூடு பிடிக்கும். அதே நேரம் ராஜபக்சே என்பது ராஜபக்சே என்ற ஒருவர் அல்ல அது ஒரு பெரும் குடும்பம்.

No comments: