Wednesday, May 30, 2007

ஒரு படுகொலையின் நினைவு-யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 26 வருடங்கள்

புத்தரின் படுகொலை


நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.

இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?'
என்று சினந்தனர்.

'இல்லை ஐயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால்
ஆகையினால்......
என்றனர் அவர்கள்.

'சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை'
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.

சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்
*சிகாலோவாத சூத்திரத்தினைக்
கொழுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது
*தம்ம பதமும்தான் சாம்பரானது.

-கவிஞர் எம்.ஏ.நுஃமான்


ப்பத்தியாறு வருடங்களுக்கு முன்னர் இதே சூன் முதலாம் திகதி காலைப் பொழுது, நன்றாகப் பேசிக்கொண்டிருந்த பாதிரியார் தவீது அடிகள் அவரைத்தேடி வந்த ஒரு சேதி கேட்டு மாரடைப்பால் மரணமடைகிறார்.அவருக்கு கிடைத்த அதே செய்தியை
யாழ்ப்பாணத்தில் கேள்விப்பட்ட ஒவ்வொருவரும் ஒப்பாரி வைத்தபடியே யாழ்ப்பாணத்தின் மையப் பகுதி நோக்கி ஓடுகிறார்கள்.ஒரு பெருங் கூட்டம் அந்த இடத்தில் கூடிவிட்டது.அந்த இடம் முழுவதும் அழுகையும் ஒப்பாரியும் நிறைந்திருந்தது. எரிந்து கொண்டிருக்கும் தணல் மேட்டில் இருந்து புகை கிளம்பிக்கொண்டிருந்தது.அத்தனை பேர்களின் கண்ணீராலும் அந்த தீயை அணைக்க முடியவில்லை.ஈழத்தமிழர்களின் தேசிய நூலகமான யாழ் நூலகத்தில் இருந்த 97,000 புத்தகங்களும் ஓலைச்சுவடிகளும் ,ஒலி ஒளி நாடக்களும் எரிந்து சம்பலாகிக் கொண்டிருந்தன.

யாழ்ப்பணத்தைப் பொறுத்தவரையில் முதல் நூலகம் 1842 இல் ஆரம்பிக்கப்பட்டதாக தகவல் உள்ளது. ஆனலும் அது பெரு வளர்ச்சி பெற்றதாக இல்லை. 1933 இலேயே இன்றைய நூலகத்திற்கான முதல் விதை போடப்பட்டது..சிறிய அளவில் யழ்ப்பாணத்தில் இயங்கிய நூலகத்திற்கான நிரந்தரக் கட்டடத்தின் தேவை உணரப்பட்டது. யாழ் நகரபிதா,வண. லோங் அடிகள்,இந்திய தூதுவராலய செயலர்,அமெரிக்கதூதுவர்,பிரித்தானியத் தூதுவர் ஆகியோரால் புதிய நூலகத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.

யாழ்ப்பாணம் கண்டிராத பெரும் களியாட்ட விழாக்கள்,பரிசு சீட்டு விற்பனை போன்ற பலவற்றின் மூலம் மக்களிடமிருந்து நூலகம் கட்டுவதற்கான பணம் சிறிது சிறிதாக திரட்டப் பட்டது.இந்திய கட்டடக் கலைஞர் நரசிம்மன் என்பவரின் வழிகாட்டுதலில்
யாழ் நூலகக் கட்டடம் உருப் பெறத் தொடங்கியது.பல பேரின் கூட்டுழைபினாலும் யாழ்ப்பாண மக்களின் பங்களிபினாலும் உருபெற்ற நூலகம் கம்பிரமாக தலை நிமிர்ந்து நின்றது

யாழ் நூலகம் ஆசியாவின் மிகப் பெரும் நூலகம்.தமிழர்களின் கல்வி வளத்தின் ஆதரமாகவும் தமிழரின் அடையாளமாகவும் உருபெற்று நின்றது.11.10.1959 இல் பொதுமக்கள் பாவனைக்காக யாழ் மேயர் அல்பிரட் துரையப்பவினால் நூலகம் திறந்துவைக்கப்பட்டது.அன்று தொடக்கம் யாழ்ப்பாணத்தவரின் வாழ்வியலோடு நூலகம் ஒன்றிக்க தொடங்கியது.யாழ்ப்பணத்தில் ஊருக்கு ஊர் இயங்கிய வாசிப்புமையங்கள்,சனசமூக நிலையங்கள் வாசிக சாலைகள் என்பவற்றின் மையப் புள்ளியாக யாழ் பொதுசன நூலகம் உருப்பெறலாயிற்று..

ஏறாத்தாழ 98 வீதம் எழுத்தறிவு உள்ளதான யாழ்ப்பாணச் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு இந்த வாசிகசாலைகளும் நூலகங்களும் உந்து சக்தியாக இருந்தன. யாழ்ப்பணத்தின் பெரும்பாலான வீடுகளில் பத்திரிகை வாங்கும் பழக்கம் இருந்தது.இளைஞர்கள்
கூடும் இடங்களாக வாசிப்பு நிலையங்களும் ,நூலகங்களும் மாறியிருந்தது.சிங்கள இனவாதிகள் தமிழருகெதிரான வன்முறையினைக் கட்டவிழ்த்த பொழுதுகளில் சிங்களவர் கண்களில் தமிழரின் அறிவு வளர்ச்சி உறுத்திக் கொண்டிருந்தது.

சிங்கள இனவெறியர்களுக்கு தமிழர் மீது இருந்த வெறுப்பு இனாவாதத் தீயாக எரிந்து கொண்டிருந்தது.அவர்கள் தருணம் பார்த்திருந்தனர்.1981 மாவட்ட சபைத் தேர்தலையொட்டிய நாட்க்கள் தமிழர் கல்வி ஆதரத்தை அழிப்பதற்கான நாளாக தீர்மானிக்கப்பட்டது .
1981 மே மாதத்தின் இறுதி நாட்கள் மாவட்ட சபைத் தேர்தல் பிரச்சரத்தில் இருந்த பொலிசார் மீது ஒரு சிறிய தாக்குதல் நடத்தப் பட்டது. தருணம் பார்த்துக் காத்திருந்த சிங்கள பொலிஸாரும், இராணுவத்தினரும்,கொழும்பில் இருந்து கொண்டுவரப் பட்ட
சிங்கள குண்டர்களும் யாழ்ப்பாணத்தை எரிக்கத் தொடங்கினர்.

யாழ்ப்ப்பணதில் உள்ள புத்தகக்கடைகளுக்கு தீவைக்கப்பட்டது,தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் யோகேசுவரனின் வீடு ,மகிழூர்ந்து என்பன தீக்கிரையாக்கப் பட்டன.1981 மே 31 நள்ளிரவை எட்டிக் கோண்டிருந்தது யாழ்ப்பாணத்தின் முதல்
தினசரிப் பத்திரிகையான ஈழநாடு பத்திரிகை அலுவலகத்திற்க்கும் தீ வைக்கப்பட்டது.அந்த அலுவலகம் எரிந்து கொண்டிருந்தது.எரிந்து கொண்டிருந்த பத்திரிகை அலுவலகத்தில் பணியில் இருந்தவ்ர்களில் பலரும் சிதறி ஓட இருவர் அலுவலகதினுள் சிக்குண்டனர்.

தீ யாழ்ப்பாண நகரமெங்க்கும் கொழுந்துவிட்டெரிந்த அந்த நள்ளிரவில் யாழ் நூலகத்தின் மேற்க்கு மூலையில் முதல் தீ வைக்கப் பட்டது. ஒவ்வொரு பகுதியாக பார்த்து பார்த்து நூலகம் முழுவது தீ வைக்கப் பட்டது. யாழ்ப்பாண நூலகத்தில் வைக்கப்பட்ட தீ கொழுந்து விட்டு எரிந்தது யாழ்ப்பாண நூலகத் தாய் துடிதுடித்து எரிவதைப் பார்த்த மக்கள்
துடித்தனர். வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற முடியாதவாறு பொலிசார் தடுத்தனர்.தகவல் அறிந்து வந்த யாழ் மாநகராட்சி ஆணையரை இடைவழியில் இரணுவத்தினர் தடுத்து வீட்டுக்கு திரும்புமாறு பணித்தனர்.

யாழ் நூலகத்திற்கு அருகிலேயே யாழ்ப்பாணம் காவல்துறை தலமை அலுவலகம் இருந்தது.அங்கிருந்தும் பெற்றொல் குண்டுகள் வீசப்பட்டதாக அருகில் வீடுகளில் இருந்தவர்கள் சொன்னாகள்.கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்டு நூலகத்திற்கு அருகில் உள்ள யாழ்ப்பாணம் முற்றவெளியில் தங்க வைக்கப் பட்டிருந்த நூற்றுக் காணக்கான சிங்களக் குண்டர்களே இதனைச் செய்தார்கள் என்று அடுத்தடுத்து நடந்த விசாரணைகளில்
தெரியவந்தது.

இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கையில் சிறிலங்கா அரசின் மூத்த அமைச்சர்களும் சனாதிபதி செயவர்த்தனாவின்நெருக்கத்திற்குரியவர்களுமான இரண்டு அமைச்சர்கள் நூலகத்திற்கு அருகில் உள்ள சுபாசு விருந்தினர் விடுதில் தங்கியிருந்தனர்.1983 தமிழர் படுகொலையை முன்னின்று செய்த சிறில் மத்தியூவும்.தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி கலவரங்களைத் தூண்டிய காமினி திசாநாயக்கவுமே அந்த இரு அமைச்சர்களும். இவர்களின் ஏற்பாட்டில்யே சிங்கள குண்டர்கள் யாழ்ப்பாணம் கொண்டுவரப் பட்டனர்.இவர்கள் இருவரும்தான் யாழ் நூலக எரிப்புக்கு காரணம் என்பதைப் பின்னாளில்
சனாதிபதியான பிரேமதாச ஒப்புக்கொண்டார்.

ஒரே நாளில் மொத்த யாழ்ப்பாணக் கல்வி வளத்தையும் எரித்துவிட நினைத்து சிங்கள அரசு வைத்த தீ தமிழரின் உரிமைத் தீப் பிளம்பாக மாறியது.அந்த தீ இன்று கொழுந்துவிட்டு இலங்கையெங்க்கும் எரிகிறது.ஈழத் தமிழரின் தேசிய அடையாளதின் மீது நிகழ்ந்த ஒரு படுகொலையாகவே காலம் முழுவதிலும் யாழ் நூலக எரிப்பு சொல்லப்படும்.
யாழ் நூலகம் பற்றிப் பேசுகிறபோதெல்லம் இப்போதும் பலர் அழுவார்கள்.

உலகில் எந்த வன்முறை பிரதேசத்திலும் நிகழ்ந்திராத ஒரு கொடுமையினை சிங்கள அரசு நிகழ்த்திக்காட்டியது.ஒரு அரசே தனது நாட்டின் மிகப் பெரும் நூலகத்தை எரிகிறதென்றால் அதன் வன்முறை உணர்வு எத்தனை உச்சமாக இருக்கும்.

1984 இல் எரிக்கப்பட்ட நூலகத்தின் ஒரு பகுதி எரிந்த நிலையிலேயே நினைவிடமாக இருக்க மீதிப் பகுதியில் நூலகம் மீளவும் ஆரம்பிக்கப்பட்டது.ஆனால் நூலகம் மீண்டும் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியது.அதன் பின்னர் சண்டைக் களமாக போராளிகளின்
பதுங்கு குழியாக பின்னர் இராணுவதினரின் உயர்பாதுகாப்பு பிரதேசமாக என்று நூலகம் போராட்டதில் பல்வேறு பத்திரங்களைப் பெறலாயிற்று.இந்த கட்டுரையை எழுதும் இந்த கணம் வரைக்கும் நூலகம் இராணுவதினரால் சுற்றிவளைக்கப்பட இராணுவ
அதி உயர் பாதுகாப்பு வலையதுக்குள்ளேயே இருக்கிறது.

இப்போது சர்வதேசகக் கவனத்தைப் பெற்றுவிட்ட நூலகத்தை மீண்டும் சிறிலங்கா அரசு கட்டியிருக்கிறது இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீளவும் நூலகத்தைக் கட்டுவதற்கு உதவின. பலரும் முன் வந்து புத்தகங்கள் வழங்கினர்.இந்திய அரசு முப்பதாயிரம் புத்தகங்களை வழங்கியது. இப்போது நூலகம் மீண்டும் புதுப் பொலிவுடன் காட்சி தருகிறது.
இருப்பினும் எரிந்து போன அந்த நூலகத்தின் சாம்பல் மேட்டின் நினைவில் இருந்து தமிழர்களால் மீள முடியவில்லை.

அரிய ஓலைச் சுவடிகளும், புத்தகங்களும் எரிக்கப்பட்ட அந்த கட்டடம் ஒரு படுகொலையின்
சமாதியாகவே இருகிறது இப்போது மீளவும் கட்டப் பட்டுள்ள அந்த நூலகம் வெள்ளையடிக்கப்பட்ட ஒரு படுகொலையின் சமாதியே.முன்னைப் போல இப்போது மக்கள் அந்த நூலகத்திற்கு போவதில்லை.பெருமபால பொழுதுகளில் சோகமேயுருவாக யாழ் நூலகம்
தனித்தே இருகிறது.அதனிடம் இப்போது நிறையப் படுகொலைகளின் கதைகள் உள்ளது.


(இக்கட்டுரை அப்பால் தமிழ் இணையத்தளம் மற்றும் தமிழ் ஓசை பத்திரிகைக்காக எழுதப்பட்டது) -செளமியன்

12 comments:

உண்மைத்தமிழன் said...

புத்தகங்கள் வெறும் பேப்பரில் எழுதப்பட்ட வெற்று வார்த்தைகள் அல்ல. ஒரு வரலாற்றை, ஒரு சமூகத்தைத் தட்டி எழுப்பிய சங்கொலிகள்.. யாழ்பபாண நூலகத்தை எரித்தது அப்பகுதி மக்களை எந்த அளவிற்கும் பாதித்தது என்பது இப்போது உலகம் முழுவதும் அகதிகளாக திரிந்து கொண்டிருக்கும் அவலத்தை படம் பிடித்துக் காட்டுகிறது..

மலைநாடான் said...

சிறிலங்கா அரசின், அநாகரிச் செயற்பாட்டினை அடையாளப்படுத்திய அழிவுச்செயல். ஒரு இனத்தின் அறிவியல் மீது புரியப்பட்ட காடைத்தனம்.

கட்டுரை பல உண்மைகளைச் சுட்டியிருக்கிறுது. பதிவுக்கு மிக்க நன்றி.

Anonymous said...

vanakkam somee anna, nalla santharppaththila nalla otu kaalaththinpathivu. vaalththukkal.
krishna

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

காலத்தால் அழியா வடு!!!

Anonymous said...

I really don't know what you are going to gain from this post on Thamizmanam, where most readers are people of Indian origin. This the same people who defend the destruction of Golden Temple in Amrister and famous and centuries old babar mosque. Actually one of the regiment sent to destroy the golden temple was from Tamil Nadu. Do you think Jaffna library any more important to them than Golden Temple?

கானா பிரபா said...

வணக்கம் சோமி

நம் தமிழினத்திற்கு ஏற்பட்ட மாறா வடு இது, மீண்டும் எழுந்தாலும்.

உங்கள் பணிக்கு எங்களால் முடிந்த உதவிகளோடு இணைவோம்.

பதிவுக்கு நன்றி

Anonymous said...

nalla neraththula nalla pathivu..
-X-
http://www.blacktext.blogspot.com/

இளங்கோ-டிசே said...

யாழ் நூலகத்தை முன்வைத்து ஒரு சிக்கலான கேள்வி இருக்கிறது (அல்லது இருந்தது). அழிக்கப்பட்ட நூலகம் அப்படியே பாதுகாக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும், இப்படி அழிக்கப்பட்ட அடையாளத்தை மறைத்து புதிதாய் கட்டியிருக்க்க் கூடாது என்றும்.... அது ஒரு விவாததிற்குரிய விடயம் தான். இஸ்ரேலிய சியோனிஸ்டுக்க்கள் எப்படி இந்த அழிவுகளை கட்டிக்காத்து தமது இனப்பெருமைகளை தமது சந்ததிகளுக்கு நினைவூட்டி பாலஸ்தீனியர்களைக் கொன்று குவிக்கின்றார்கள் என்று சேரன் உயிர்நிழல் இதழொன்றில் எழுதிய கட்டுரையும் கவனத்தைக் கோரி நிற்பதே. எனினும் ஆக்ககுறைந்தது அழிக்கப்பட்ட நூலகத்தின் சிறுபகுதியாவது அப்படியே பாரமரிக்கட்டிருக்கவேண்டும், அது நடவாது போனது சோகமான விடயமே.

சோமி said...

சேரன் சொல்லும் உதாரணத்தோடு இதனை ஒப்பிட முடியவில்லை.

சந்திரிக்க்க யாழ்பாணத்தில் செய்த முதல் புனர் நிர்மாணம் யாழ்நூலக மீள்கட்டுமானம்தான்.

இது வன்முறையைத் தூண்டும் அடையாளமல்ல ஒரு பெரும் மனிதபடுகொலைகள் நடந்த போரின் அடையாளம்.போர் தந்த வலிகளின் அடையாளம். உலகில் இது போன்ற அவலம் நிகழக் கூடாது என்பதற்கான அடையாளம்
இன்று யுனஸ்கோ பாதுகாக்க நினைக்கும் விடையங்களுக்கான ஓர் அடையாளம்.அந்த அடையாளத்த சிங்கள அரசு அழிக்கும்போது பார்த்திருத்தல் எத்தனை பெரிய அவலம்.

Anitha(Nikki's mom) said...

padikkum pothu nenju valikkirathu... kaatu miraandigal... Afghanisthan'il budhdhar silayai iditha taliban ninaivuku varugiraarkal...

கீர்த்தனா said...

சேரன் சொல்லும் உதாரணத்தோடு ஒப்பிட முடியாது .சோமி சொன்னதை போல இது வன்முறையை தூண்டும் அடையாளம் அல்ல.

தமிழர்களுக்கு எதிரி சிங்களவர்கள் அல்ல.
"சிங்கள பேரினவாதம்". மட்டுமே.!

மு. மயூரன் said...

சோமி,

நீங்கள் நெறியாண்ட/பங்குபற்றிய சில ஆவணப்பட முயற்சிகள் பற்றி சசீவன் சொல்லக் கேள்விப்பட்டேன்.
இப்படியான முயற்சிகள் தொடர்பாக ஏன் எங்களுக்கெல்லாம் தெரியப்படுத்துவதில்லை.

அதிகம் எழுத நேர நெருக்கடி இடங்கொடுக்காவிட்டாலும் சிறு குறிப்புக்களையாவது வலைப்பதிவு வாயிலாகத் தரலாமே?

அந்தப்படங்களை சசீவனிடமிருந்து பெற முடிந்தால் பார்த்துவிட்டு நான் தான் குறிப்பெழுத வேணும் போல இருக்கு.

இப்படியான விசயங்களை அறியதாருங்கள் என்ன?